முதலே குழம்பியிருந்தவள், அண்ணன் கேட்ட கேள்வியில் இன்னும் குழம்பி போனாள்.
சற்று முன்பிருந்த சந்தோஷம் வடிந்துவிட தொங்கிய முகத்தோடு அங்கிருந்த நகர்ந்து சென்ற மனைவியை பார்த்தவனுக்கோ அவள் தன்னை நம்பவே மாட்டாளா என்று ஆயாசமாக இருந்தது. யார் செய்த சதியோ? இவன் குற்றவாளியாக்க பட்டான். இன்று விளையாட்டுக்கு ராகுல் சொன்னதை கூட பிரித்து பார்க்க முடியாது அவள் மனம் சஞ்சலபடுகிறது. இழந்துவிட்ட நம்பிக்கையை அவளுள் எப்படி வளர்ப்பது என்று மலைப்பாக இருந்தது ஜெய்யிற்கு.
சட்டென அவள் கையில் எடுத்திடும் மௌனம்தான் இவனை பெரிதும் வதைக்கிறது. இவன் சட்டையை பிடித்து என்ன ஏதென்று கேட்டிருந்தால் சொல்லியிருப்பானே... அன்றும் கேட்கவில்லை! இன்றும் கேட்கவில்லை! இப்படியே இன்னும் என்னவெல்லாம் அவள் மனதில் புதைந்து கிடக்கிறதோ?!
வலியும் வேதனையுமாக சரயூ சென்று மறைந்த அறையை பார்த்தபடி நின்றிருந்த தோழனை கண்டு வருத்தமாகி போனது மைத்ரீக்கு. கண்களால் கணவனை அழைத்தவள்,
“அவங்களே இப்போதா எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாயிருக்காங்க. ஏன் ராகுல் அப்படி கேட்டீங்க? சரயூ கோவிச்சுக்கிட்டு போயிட்டா... இவனோ வயலின் வாசிச்சிட்டு நிக்குறா... என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது... அவங்களை சரிசெய்ங்க” என்று கறாராக சொல்லிட
“நான் விளையாட்டுக்கு சொன்னேன்னு உனக்கு தெரியாதா மையூ? என்ன இப்போ, ரெண்டு நாளு சரயூட்ட இடிபடுவானா ஜெய்... அதுக்கு போயி நீ ஏன் டார்லிங்க் டென்ஷனாகுற? புருஷன் பொண்டாட்டினா இதெல்லா சகஜம்தா. நீதான் அவங்களுக்குள்ள இருந்த பழைய பிரச்சனையெல்லா மனசுல வச்சிக்கிட்டு சின்ன விஷயத்தை பூதாகாரமா யோசிக்குற... பார்த்துட்டே இரு...இன்னும் கொஞ்ச நேரத்துல சரயூவே வந்து ஜெய்ட்ட பேசுவா... அப்போ புரியும் உனக்கு, அவங்க சண்டையெல்லா ரொம்ப நேரம் தாக்குபிடிக்காதுனு” என்ற கணவனின் விளக்கத்தில் அவன் சொன்னது நடக்குமா என்ற கேள்வியோடு காத்திருந்தாள் மைத்ரீ.
சற்று நேரத்திற்கெல்லாம் வந்திருந்த விருந்தினர்கள் சாப்பிட்டு கிளம்பிவிட இப்போது இவர்கள் குடும்பத்து மக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
எல்லோரையும் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தார் சாரதா. தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலையில் மூழ்கியிருந்த ஜெய்யிற்கு நிஜமாகவே சாப்பிட பிடிக்கவில்லை. ஆனால் விசேசத்திற்கு வந்துவிட்டு சாப்பிடாமல் போக முடியாது. அதுவும் வீட்டு மருமகனாக இருந்து கொண்டு சாப்பாட்டை மறுத்தால் அவர்கள் வருந்துவார்களே.... பெயருக்கு இலையில் உட்கார்ந்து எழுந்துகொள்ள முடிவுசெய்து சென்றான்.
சாப்பாட்டு மேஜையில் சரயூவை காணாது சாரதாவிடம் கேட்க...
“சரயூக்கு தலைவலினு படுத்திருக்கா தம்பி! நான் மாத்திரை கொடுத்திருக்க, கொஞ்ச நேரத்துல சரியாகிடும். நீங்க சாப்பிடுங்க” என்றபடி பரிமாறிட...
அது பொய் தலைவலி என்று புரிந்து கொண்டவனுக்கோ, இம்மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் அவர்கள் வாழ்க்கையை விட்டு விலகாது வலிக்க வலிக்க பழைய நினைவுகளை கிளறிவிட்டுக் கொண்டேயிருக்குமோ என்று பெரும் வேதனையை எழுப்பியது.
“உனக்கு பிடிச்ச வாழைக்காய் பிரட்டல் தானே...ஏன் வேணாங்குற ஜெய்?” என்று வடிவு கேட்பதும்... இவன் ஏதோ சொல்லி மழுப்புவதும் பக்கத்து அறையில் படுத்திருந்த சரயூவிற்கு கேட்காமல் இருக்குமா என்ன?
‘எங்கிட்ட நீ எதையுமே மறைக்க கூடாது சஞ்சு... சின்னதோ பெரிசோ நமக்குள்ள ஒளிவு மறைவு இருக்கவே கூடாது. செய்றதையெல்லா செய்துட்டு இப்போ சாப்பிடாமா இருந்தா எனக்கென்ன?’ என்று மனதுக்குள் புலம்பியவளுக்கு... அவளும் தன்னிடமிருந்து எதையும் மறைக்க கூடாதென்று ஜெய் நினைப்பான் என்பது புரிந்திருக்கவில்லை.
இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்தவளுக்கு அவன் சாப்பிடாமல் எழுந்து கொள்ளுவான் என்ற எண்ணம் கவலையாக மாறிட அடுத்த நொடி அவனிடம் வந்து நின்றாள்.
சாப்பாட்டை அலைந்து கொண்டிருந்தவன் இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் அதையே செய்ய....
“சாப்பிடு சஞ்சு! எனக்கு உன்மேல எந்த கோவமுமில்லை... நிஜமாவே தலைவலி... நான் அப்றம் சாப்பிட்றே” மனைவி செல்வது பொய்யென நன்றாக உணர்ந்திருந்தவன்,
“நீ சாப்பிட்டனா, நானும் சாப்பிட்றே சரூ” என்று ஒற்றை வரியில் முடித்து கொண்டவன் அவளையே பார்த்திருக்க...
இலையை போட்டுக்கொண்டு அவனருகே உட்கார்ந்து விட்டாள்.
ராகுல் மைத்ரீயிடம் இவர்களை காட்டி, “நான் சொன்னப்போ நம்புனியா? இதுதா உண்மை மையூ. அவங்களுக்குள்ள எல்லாம் சரியா போச்சு” என்று அடிமனதின் சந்தோஷம் தெரிக்க சொல்லிட...
“ஏதோ குழம்பிட்டே ராகுல்... இப்போ ரொம்ப தெளிவாயிடிச்சு” என்றாள் புன்னகையோடு.
ஜெய்யிற்காக வந்து சாப்பிடும் மகளை நினைத்து சாரதாவிற்கு நிம்மதியாக இருந்தது.
“இன்னும் கொஞ்ச வைங்கத்தை... சஞ்சுக்கு இது பிடிக்கும்” என்று அவனுக்கு பிடித்தவைகளை கொண்டு இலையை நிரப்பி அவன் வயிற்றையும் நிரப்பியிருந்தாள் சரயூ.
முத்து ஒளிரும்…
{kunena_discuss:1038}