தோளில் இருந்து தலையை எடுக்காமல் முகத்தை மட்டும் திருப்பி "என்ன அத்தான்?", என்று கேட்டாள்.
"நான் இல்லாம இருந்துருவியா டி?"
"அத்தான்", என்று கேட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அதை பார்த்து பதறி போனவன் "லூசு இப்ப ஏன் இப்படி அழுற?", என்று கேட்டான்.
"நீங்க இப்படி கேட்டா அழாம என்ன செய்றதாம்? நீங்க இல்லாம நான் எப்படி இருப்பேன்? எதுக்கு அப்படி சொன்னீங்க? எனக்கு பயமா இருக்கு", என்று சொல்லி அவன் வயிற்றில் கைகளை போட்டு இறுக்கி கொண்டாள்.
"எனக்கு டிரான்ஸ்பர் வந்துருக்கு டி"
"என்ன?", என்று அதிர்ச்சியாக கேட்டாள் கலைமதி.
"ஆமா கலை, செகந்தராபாத்க்கு போட்டுருக்காங்க. அங்க புது பிரான்ச் போன மாசம் கடைசில ஸ்டார்ட் பண்ணிருக்காங்கன்னு சொன்னேன்ல? அங்க டிரெயினிங் கொடுக்குறதுக்கு போகணுமாம். டிரான்ஸ்பர் மாதிரி இல்லை. ஆனா ஒன்னு இயர் டிரெயினர் மாதிரி போகணும்"
"அத்தான்"
"என்ன மா?"
"இந்த விஷயத்துனால தான் நீங்க ரெண்டு நாள் சரியாவே இல்லையா? என்னை விட்டுட்டு போயிருவீங்களா?"
"அது தான் டி எனக்கும் வலிக்குது. ஆனா சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலைல இருந்துட்டு என்ன செய்ய? டிரெயினிங் கொடுக்க என்னை போட்டுருக்காங்கன்னா அடுத்து எனக்கு ஆபிஸரா புரமோஷன் வரும். அதுக்கு சந்தோச படுறதா? ஒரு வருசம் உன்னை பிரிஞ்சு இருக்கவான்னு தெரியலை டி"
"எதுக்கு அத்தான் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது? நீங்க இல்லைன்னா நான் என்ன பண்ண? என்னால அவ்வளவு நாள் உங்களை பாக்காம இருக்க முடியாது"
"அப்படி இல்லை டா குட்டி, லீவுக்கு வருவேன். ஆனா மாசம் மாசம் பாக்க முடியுமானு எல்லாம் தெரியலை. முந்தாநேத்தெ விசயம் தெரியும் கலை. ஆனா என்னால மனசை சமாளிக்க முடியலை. நான் இல்லாம நீ எப்படி இருப்பன்னு தான் எனக்கு மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு. பேசாம வேலையை விட்டுரலாம்னு தான் யோசிக்கிறேன் டி. வேற ஜாப் தேடவா?"
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்ட மதி அமைதியாக இருந்தாள். இருவருக்குள்ளும் ஆழ்ந்த மௌனம் தொடர்ந்தது.
என்ன சொல்வது என்று இருவருக்கும் தெரிய வில்லை. கவர்ன்மெண்ட் வேலை கிடைக்க அவன் எவ்வளவு கஷ்ட பட்டு படித்திருப்பான் என்று மதி அறியாதது அல்ல.
அப்படி பட்ட வேலையை தனக்காக உதறி தள்ளும் அளவுக்கு அவன் காதல் கிடைத்ததே பெரும் பாக்கியம். அப்படி பட்ட காதலுக்கு மதி என்ன செய்திருக்கிறாள்? உங்களை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது அத்தான் என்று சொல்லி அவனுடைய வளர்ச்சியை தடுக்க வேண்டுமா? இதை அறிந்தால் எல்லாரும் அவளை பற்றி சுயநலவாதி என்று சொல்ல மாட்டார்களா? அப்படி பட்ட செயலை அவள் செய்வாளா?
அது மட்டுமல்லாமல் அவளை ஒவ்வொரு முறையும் அவன் காதலொடு நெருங்கி விட்டு விலக முடியாமல் விலகும் போது அவன் படும் அவஸ்தையை அவள் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள்? இந்த ஒரு வருட பிரிவில் அவளுடைய படிப்பும் முடிந்து விடும். தன்னை நெருங்கி அவன் விலகும் அவஸ்தையும் விலகும்? இனி மீதி இருப்பது இரண்டே செமஸ்டர் தான். அது வரைக்கும் பிரிந்து இருந்து இருக்கும் காதலை அதிக படுத்தலாமே?
எல்லாவற்றையும் எண்ணி பார்த்தவள் "அத்தான்", என்று அழைத்தாள்.
"என்ன டா?"
"நீங்க அங்க வேலைக்கு போங்க"
"கலை மா "
"ஆமா அத்தான், இந்த வேலை வாங்க எவ்வளவு கஷ்ட பட்டு படிச்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியும். இப்ப இருக்குற சூழ்நிலைல அந்த வேலையை விட்டா, நீங்க இவ்வளவு நாள் செஞ்ச அனைத்தும் வீணா போயிரும். அது மட்டுமில்லாம நான் படிச்சு முடிச்ச அப்புறம் தான் என்கூட சேந்து வாழணும்னு இருக்கீங்க? ஆனா என்னை முத்தமிட்டு பிரியும் போது, நீங்க ரொம்ப கஷ்ட படுறீங்க? இன்னொரு உண்மை என்னன்னா என்னாலேயே நீங்க என்னை விட்டு விலகுறதை தாங்க முடியலை. அதை விட என்னால இப்ப எல்லாம் படிப்புல கவனம் செலுத்தவும் முடியல. எனக்கு உங்களை ஒட்டிகிட்டே இருக்க தான் தோணுது. எல்லாத்தையும் யோசிச்சு பாத்தா நமக்கு இந்த ஒரு வருச இடைவெளி தேவை தான் அத்தான்"
"கலை, நீயா இப்படி பேசுறது? நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. தேங்க்ஸ் டி. நீ போகாதீங்க அத்தான்ன்னு சொல்லிட்டா என்ன செய்யன்னு ரொம்ப தவிச்சு போய்ட்டேன். பாரின்ல சாப்ட்வேர் சைடு வேலைக்கு போய்ட்டு உடம்பு சரி இல்லாம போய், பிறகு இங்க வந்து என்ன செய்யன்னு யோசிச்சு மறுபடியும் ஸ்கூல் பாடம் எல்லாம் கவனத்தோட படிச்சு பாஸ் ஆகுறதுக்குள்ள ரொம்ப நொந்து போய்ட்டேன் டி . அது மட்டும் இல்லாம இப்ப அடுத்த போஸ்ட் கிடைக்க போகுது அப்படிங்குறப்ப அதை இழக்க யாருக்கும் மனசு வராது தான். ஆனா எனக்கு நீ அதை விட முக்கியம். ஆனாலும் உனக்காக வேலையை விட்டாலும் என் மனசுல வேலை இல்லாதது உறுத்திட்டே இருக்கும். ஆனா இப்ப நீ போக சொன்ன அப்புறம் சந்தோசமா இருக்கு மா. ஆனாலும் அங்க போனா உன்னோட நினைவாவே இருக்குமே கலை. நீயும் என்னையே நினைசுட்டு இருப்பியே?"