"என்னால இந்த விளம்பரத்தை சரியா செய்ய முடியும்னு தோணல"
தயாரிப்பாளரின் கண்கள் சுருங்கின. கோபமாக இருக்கலாம்.
"என்ன காரணம்?"
"இந்த விளம்பரத்தை நான் நினைச்சது போல எடுக்க முடியல. உங்க டீம் ஆட்கள் அவங்க கற்பனையை எனக்குள்ள புகுத்தி ஏகப்பட்ட இடைஞ்சல்கள் செய்றாங்க. ஏன், நீங்க கூட நான் கேட்ட ஆட்களை ஏற்பாடு செய்யாம உங்களுக்கு பிடிச்ச ஆட்களை கொண்டு வந்திங்க"
"அவங்க எல்லாமே எக்ஸ்பெர்ட். பல விளம்பரங்கள்ல பணியாற்றியிருக்கவங்க"
"அப்போ நீங்க பெரிய டைரக்டரையே தேர்ந்தெடுத்திருக்கலாமே? எனக்குள்ள ஒரு கற்பனையிருக்கு. அதை தான் நான் எடுக்க விரும்புறேன். எனக்கு தொழில் தெரியும். என்கிட்டே வந்து, அப்படி செய் இப்படி செய்ன்னு யாரும் தொல்லை செய்யக்கூடாது".
தயாரிப்பாளர் வசந்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.
"சார், நான் வாய்ப்புக்காக பல கம்பெனி ஏறி இறங்கியிருக்கேன். சில நேரங்கள்ல தோணும், ஏன் தான் இந்த சினிமா துறையை பிடிச்சிக்கிட்டு தொங்கிட்டு இருக்கோம்ன்னு இருக்கும். எனக்கு பின்னாடி பொறந்தவன் எல்லாம் லைஃப்ல எங்கையோ போய் நிக்கும்போது எனக்கு பொறாமையா இருக்கும்"
தயாரிப்பாளர் லேசாக இருமினார்.
"ஆனா, ஏதோ ஒரு அதிசயம் என்னை இன்னைய வரைக்கும் பிடிச்சிட்டு இருக்கு, எனக்கு பல கற்பனைகள் கனவுகள் கொடுத்திருக்கு. மத்தவங்களை பாக்காத, மத்தவங்க போன பாதையில போக ஆசைப்படாத, உனக்கான பாதையை நீயே உருவாக்கிக்கன்னு சொல்லுது. அதை தான் சார் நான் செஞ்சிட்டு இருக்கேன்"
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
தயாரிப்பாளர் அமைதியாக இருந்தார்.
"விளம்பரம் மொத்தமும் அழகை மையப்படுத்தியே தான் போயிட்டு இருக்கு. ஒரு சாதாரண பிஸ்கட் சாப்பிடுறதுக்கு கூட அழகான பொண்ணு சாப்பிட்டா தான் மத்தவங்களும் வாங்குவாங்கன்னு ஒரு மாயத்தோற்றம் உருவாகியிருக்கு. அந்த பிஸ்கட்டை ஒரு பிச்சைக்காரன் சாப்பிட்டு பசியை போக்கிக்கலாம்ல"
தயாரிப்பாளர் யோசனையோடு வசந்தையே பார்த்தார்.
"இது போல விஷயத்தை மாத்தணும்னு நினைக்குறது தப்பா சார்? நான் நிறைய காத்திருக்கேன் சார். இனியும் காத்திருக்கணும்னாலும் நான் வருந்தப்பட மாட்டேன். என்னுடைய கனவுகள்ல மத்தவங்க பயணம் செய்யவும் விரும்ப மாட்டேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கையிருந்தா என் இஷ்டப்படி படம் எடுக்க விடுங்க. இல்லன்னா, எனக்கு இந்த வாய்ப்பு தேவையில்லை"
தயாரிப்பாளர் நாற்காலியை விட்டு எழுந்தார். பால்கனிக்கு சென்று மழையை வேடிக்கை பார்த்தார். சிகரெட் புகையை இழுத்து வெளியே விட்டவர், வசந்தை பார்த்தார். தீர்க்கமான முடிவு அவர் கண்களில் ஒளிர்ந்தது. இறுதியாக அவர் பேசினார்.
"நீங்க கிளம்பலாம் வசந்த்"
தொடரும்...
{kunena_discuss:983}