தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 35 - சித்ரா. வெ
"சார் உங்களை யாதவின்னு ஒரு மேடம் பார்க்கணும்னு சொல்றாங்க.. உங்களுக்கு அவங்களை நல்லா தெரியுமாம்.. உள்ள அனுப்பவா சார்.." என்று தற்போதய காவலாளி இண்டர்காம் மூலம் சொல்லவும்,
முதலில் யாதவிக்கு என்ன பிரச்சனையோ என்று தான் சாத்விக் நினைத்தான். நேற்று இரவு தானே அவளை கோவிலிலிருந்து பாலா வீட்டில் விட்டுவிட்டு வந்தான். அவளை காணவில்லை என்று வேறு விபாகரன் தேடிக் கொண்டிருந்ததாக புவனாம்மா கூறினாரே, ஒருவேளை இவனோடு காரில் வந்ததால் ஏதாவது பிரச்சனையா? என்பது போல் சிந்தித்தவன்,
"ச்சேச்சே அப்படி இருக்காது.. விபாகரன் அப்படியெல்லாம் யாதவியை கஷ்டப்படுத்த மாட்டாரு.." என்று தனக்கு தானே பேசிக் கொண்டவன்,
"ஆமாம் அவங்களை எனக்கு நல்லா தெரியும், உள்ள அனுப்பு.." என்று காவலாளிக்கு கட்டளை பிறப்பித்தான்.
அவன் காவலாளியோடு பேசிக் கொண்டிருக்கும் போது, அன்று போல் வசந்தன் இன்றும் அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். உடன் சுமதியும் இருந்தார்.
"யார் பார்க்க வந்திருக்கா சாத்விக்.." என்று வசந்தன் கேட்க,
"யாதவி.." என்று அவன் பதில் கூற,
"அவ எதுக்கு இங்க வரா.." என்று மனதிற்குள் நினைத்து வசந்தன் அதிர்ச்சியானார். சுமதியும் எதுவும் புரியாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
ஆனால் யாதவியோ சாத்விக் வீட்டிற்குள் நுழையும்போது அன்று போலில்லாமல் இன்று தெளிவாகவே இருந்தாள்.
அவளுக்காக காத்திருந்த சாத்விக், அவள் உள்ளே நுழைந்ததுமே, "வா யாதவி.. நீ என்னைப் பார்க்க வருவேன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. எதுவும் பிரச்சனையில்லையே.. நீ நல்லா தானே இருக்க.." என்று ஒருவித பதட்டத்துடன் கேட்க,
"எனக்கென்ன பிரச்சனை.. நான் நல்லா தான் இருக்கேன் சாத்விக்.. ரொம்ப நாளா என்னோட மனசை உறுத்திக்கிட்டு இருந்த விஷயம், ஒருவிதத்தில் நான் தெளிவாயிட்ட விஷயமும் கூட, அதை உன்கிட்ட கொஞ்சம் மனசுவிட்டு பேசணும்.. அதுக்காக தான் வந்தேன்.. பேசலாமா?" என்று அவள் கேட்டாள்.
"என்ன யாதவி.. கொஞ்சம் பேசணும்னு கூப்பிட்டிருந்தா நானே வந்துருப்பேனே, அதுக்காக என்னை இவ்வளவு தூரம் பார்க்க வரணுமா? சரி வெளிய போய் பேசலாமா? இல்ல பின்னாடி கார்டன் இருக்கு அங்க போயிடலாமா?"
"அங்கல்லாம் வேண்டாம் சாத்விக்.. இங்க உன்னோட அப்பா, அம்மா முன்னயே பேசிட்றேன்.."