சொன்ன குழந்தை விஷயத்தையும் கூறியிருந்தார். அதனால் தான் அவளும் இப்போது அமைதியாக இருந்தாள்.
அது யாதவி வீட்டிற்கு வரும் வரையுமே கூட தொடர்ந்தது. விபாகரன் வந்த அரைமணி நேரம் கழித்து யாதவி வீட்டுக்கு வர, அப்போதும் மஞ்சுளாவும் அர்ச்சனாவும் வரவேற்பறையில் தான் இருந்தார்கள். யாதவி வருவதை பார்த்த மஞ்சுளா, "என்னம்மா யாதவி.. ஈஞ்சப்பாக்கம் வரைக்கும் போறதா இருந்தா சொல்லிட்டு போறதில்லையா? நீ வரலன்னதும் பயந்துட்டேன் தெரியுமா?" என்று சொல்ல,
"சாரிம்மா மன்னிச்சிடுங்க.. உங்கக்கிட்ட சொல்லாம போகணும்னு நினைக்கல.. திடீர்னு தோனவும் கிளம்பிட்டேன், அப்போயாவது சொல்லியிருக்கணும், கொஞ்ச நேரத்திலேயே வந்துடலாம்னு நினைச்சு தான் சொல்லல.. ஆனா அதுக்குள்ள மொபைலிலும் சார்ஜ் இல்ல.." என்றாள்.
"சரி உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு விபு சொன்னான் அதான் எனக்கும் கொஞ்சம் நிம்மதி ஆச்சு.. அவன் மேல தான் இருக்கான்.. நீ போ.." என்று அனுப்பி வைத்தார்.
இப்போதும் அர்ச்சனா எதுவும் பேசாமல் அமைதியாக தான் இருந்தாள். விபாகரனின் அறைக்கு செல்வதை பார்த்து அர்ச்சனா ஏதாவது சொல்வாளோ என்று யாதவியும் அச்சப்படவில்லை,
யாதவி அறைக்கு வரவும், விபாகரன் மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவள் உள்ளே வந்ததை நிமிர்ந்து பார்த்து தெரிந்துக் கொண்டவன், அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு மீண்டும் மடிக்கணினியில் கவனம் செலுத்த, அவன் சாத்விக்கிடம் பேசியதை பற்றி கேட்பான் என்று எதிர்பார்த்த யாதவி, இப்போது என்ன செய்வது என்பதறியாமல் நின்றிருந்தாள்.
அவள் வருவதற்குள் ஒரு முக்கியமான வேலையை முடித்துவிட வேண்டுமென்று நினைத்து தான் அந்த வேலையை ஆரம்பித்தான். இப்போது அது முடியும் தருவாயில் இருக்கவே, அதிலிருந்து கவனம் சிதறிடக் கூடாது என்பதாலேயே அவன் அவளை கண்டுக் கொள்ளாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லாமல்,
"நான் சாத்விக்கை பார்த்து பேசிட்டு வந்துட்டேன்.." என்றாள்.
அதற்கு அவன் வெறுமனே, "ம்ம் சரி.." என்று சொல்ல,
"நான் சாத்விக்கை எதுக்கு பார்க்கணும்னு சொன்னேன்.. என்ன பேசினேன்னு கேட்க மாட்டீங்களா?" என்றுக் கேட்டாள்.
"ம்ம் எதுக்கு பார்க்க போன.. என்ன பேசின? சொல்லு கேட்கிறேன்.." என்றவன் அப்போதும் மடிக்கணினியில் தான் அவனது கவனத்தை வைத்திருந்தான்.