"என்னோட அப்பா, மதுரிமா, ஏன் நீங்க கூட சாத்விக்கை தான் பிடிச்சிருக்குன்னா அவனை கல்யாணம் செய்துக்கலாம் என்பது போல பேசினீங்க.. ஆனா உண்மையிலேயே சாத்விக்கை நான் காதலிக்கல.. அந்த வயதில் சாத்விக் மேல ஏற்பட்ட ஈர்ப்பை நான் காதல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டு சில பைத்தியக்காரத்தனம் செஞ்சுட்டேன்.. ஆனா இப்போ நான் தெளிவாயிட்டேன், நான் புரிஞ்சிக்கிட்ட அந்த உண்மையை தான் சாத்விக்கிட்ட சொல்லிட்டு வந்தேன்.." என்று சொல்லியவள், அவன் முகம் பார்க்க,
அதற்குள் தனது வேலையை முடித்தவன், மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு எழுந்தவன், அந்த அறையின் கதவையும் மூடிவிட்டு அவள் அருகில் வந்தான். அதுவரையிலுமே அவளையே பார்த்திருந்தவளின் கைகளை எடுத்து தன் கைகளில் அடக்கிக் கொண்டவன்,
"நீ சாத்விக்கை காதலிக்கலங்கிற உண்மை உனக்கு இப்போ தான் தெரியும், ஆனா எனக்கு முன்னமே சாத்விக் மேல உனக்கு ஏற்பட்டது வெறும் ஈர்ப்புன்னு தெரியும், அதை உனக்கு புரிய வைக்க நான் முயற்சி செஞ்சேன், ஆனா அதுக்குள்ள நீ அவசரப்பட்டுட்ட.. இப்போ நீ தெளிவா தானே இருக்க, அம்மா சொன்னது போல நாம திரும்ப கல்யாணம் செஞ்சுக்கலாமா?" என்றுக் கேட்டான்.
அதற்கு அவளோ வேண்டாமென்று தலையசைக்க, அவன் குழப்பத்துடன் அவளை பார்த்தான்.
"நான் சாத்விக்கை எப்படி காதலிக்கலையோ, அதேபோல உங்களையும் காதலிக்கலையே, சாத்விக்கோட அழகு, அந்தஸ்து இது மேல தான் எனக்கு ஈர்ப்பு இருந்தது. அதேபோல உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்து கிடைச்சா, அப்போ நான் எதிர்பார்த்த வாழ்க்கை கிடைக்கும்னு தான், உங்களை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சேன்.. நான் எவ்வளவு சுயநலவாதி, அதான் சொல்றேன் நான் உங்களுக்கு வேண்டாம், எனக்கு உங்கக் கூட வாழ தகுதியில்லை.. அதனால் நீங்க உங்களை நேசிக்கிற ஒரு பெண்ணை கல்யாணம் செய்துக்கோங்க.." என்று அவன் முகம் பார்க்காமல் அவள் கூறியதும்,
அதில் அவன் வருத்தமோ, கோபமோ கொள்ளாதவனாக, "ம்ம் பேசாம நீயே எனக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் செய்து வச்சிடேன்.." என்று விளையாட்டாக புன்னகைத்தப்படி கூறினான்.
"உங்களை நேசிக்கிற ஒரு பொண்ணு இருக்கா, அவளை எனக்கு தெரியும்.." என்று இந்த முறை அவன் முகம் பார்த்து அவள் கூற,
"விட்டா அந்த பொண்ணோட எனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பா போல.." என்று மனதிற்குள் நினைத்தவன்,