" அது உங்க மனசை காட்டுது.. ஆனா நான் செஞ்சது தப்பு தான், உங்களை வேண்டாம்னு சொல்லிட்டு போன நான் நல்ல மனிதர்களை சந்திச்சதால எனக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஆனா என்னை மாதிரி எத்தனை பொண்ணுங்க, இப்படி வாழ்க்கையோட முக்கியத்துவம் தெரியாம வீட்டை விட்டு வந்து பிரச்சனையிலும் ஆபத்திலும் மாட்டிக்கிறாங்க.. எத்தனை பேரை அதுக்குப்பிறகு அவங்க குடும்பம் புறக்கணிச்சிடுது.. அந்த அளவில் நான் அதிர்ஷ்டம் செஞ்சவ தான்,
ஆனா அந்த அதிர்ஷ்டம் செய்யாத பெண்களுக்காக ஒரு அமைப்பு ஆரம்பிக்கணும்னு ஆசை, அதேபோல் இப்படி டீன் ஏஜ்ல காதல்ங்கிற பேரில் ஏமாறும் பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கணும்.. இதெல்லாம் என்னோட எதிர்கால திட்டம்.."
"நல்லது யது.. உன்னோட முயற்சிக்கு நான் உறுதுணையா இருப்பேன்.. அப்புறம் இனிமே இருந்து நான் தப்பு செஞ்சுட்டேன், எனக்கு நீங்க கிடைச்சது அதிர்ஷ்டம், இப்படி சொல்லிக்கிட்டு இருக்காத.. நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருந்தா அப்புறம் நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்காது.."
"ஆனா இந்த 5 வருஷம் உங்களை நான் தவிக்க விட்டுட்டேனே.."
"எப்படியும் உன்னோட படிப்பு முடியும் வரை நான் காத்திருந்திருப்பேன் தான், என்ன கூட ரெண்டு வருஷம் காத்திருந்ததா நினைச்சுப்போம், நம்ம வாழ்க்கை இப்போதிலிருந்து தான் தொடங்குது.. அதுக்கு முன்ன நடந்த நல்லது கெட்டது எல்லாம் மறந்துட்டு இனி வாழப் போற வாழ்க்கையை பார்ப்போம்.. அதேபோல கொஞ்சம் என்மேல கருணைக் காட்டி என்னை காதலிக்க முயற்சி செய்.."
"இதுக்குப்பிறகு தான் உங்களை காதலிக்கணுமா? எப்போ அத்தனை பேர் முன்ன எங்கப்பாவே என்னை அவமானப்படுத்த நினைச்சப்ப கூட, எனக்காக நீங்க பேசினீங்களோ.. அப்பவே நீங்க என்னோட மனசுல வந்துட்டீங்க.. ஆனா அதை சொல்ல தான் எனக்கு தயக்கமா இருந்துச்சு.." என்றாள். இத்தனையும் அவன் அணைப்பில் அவனது மார்பில் சாய்ந்தப்படியே கூற,
அவள் தலையை நிமிர்த்தி அவளை பார்த்தவன், "இது நிஜமா யது.." என்றுக் கேட்க,
"நிஜம் தான் விபு.. உங்களை நான் மனப்பூர்வமா காதலிக்கிறேன்.." என்றாள்.
"மனசுக்குள்ள காதலை வச்சிக்கிட்டு தான் கிறுக்குத்தனமா பேசினியா? அதுக்கு உனக்கு தண்டனை உண்டு.." என்றவன்,
அவள் முகத்தை தன் கைகளால் தாங்கி முகம் முழுவதும் முத்தமெனும் தண்டனையை நிறைவேற்றியவன், அதில் களைப்பாகி அவள் இதழ்களில் வந்து இளைப்பாறினான்.