அவனது தண்டனைகளை சுகமாய் ஏற்றுக் கொண்டவளோ கண்களை மூடி மோனநிலையில் நின்றிருக்க,
"நீ எனக்கு கிடைச்சிட்ட யது, எனக்கு இப்போ தான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.." என்று சொல்லியப்படியே, தொலைந்து போன அவனது பொக்கிஷம் கையில் கிடைத்த மகிழ்ச்சியில் அதை தனக்குள் தக்க வைத்துக் கொள்வது போல் அவனது அணைப்பால் காற்று கூட புகாதபடி அவளை இன்னும் இன்னும் இறுக்கினான்.
நான்கு மாதங்களுக்குப் பிறகு,
இன்று அஜய் சுஜனாவின் திருமணம், உறவினர்களும், நட்புக்களும் கூடியிருக்க, மனதில் உள்ள மகிழ்ச்சி முகத்தில் மலர்ந்திருக்க அஜயும் சுஜனாவும் மணமேடையில் வீற்றிருக்க, குறித்த முகூர்த்தத்தில் சுஜனா கழுத்தில் தாலிக்கட்டி அஜய் அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டான்.
திருமணம் நல்லப்படியாக நடந்த மகிழ்ச்சியில் விபாகரன், யாதவி, பாலா குடும்பத்தினர், மஞ்சுளா, அர்ச்சனா, விஜய், அஜயின் அன்னை என்று அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திருமணம் பெண் வீட்டின் சார்பில் நடப்பதால் வீரராகவன் அனைத்தையும் சிறப்பாக செய்ய, மணமகன் வீட்டிலும் சில முக்கிய வேலைகள் இருக்குமல்லவா, அதையெல்லாம் முன்னின்று செய்தது யாதவி தான்,
ஆமாம் யாதவி தன் காதலை விபாகரனிடம் கூறிய இரண்டே நாளில் ஒரு கோவிலில் வைத்து யாதவி கழுத்தில் விபாகரனை மஞ்சுளா மறுதாலி கட்ட வைத்தார். அதுவரையிலும் இருந்த அர்ச்சனா அடுத்து மும்பைக்கு செல்ல, இப்போது குழந்தை பிறப்பதற்கான சிகிச்சை மேற்கொள்ளவும், அவள் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லியிருந்தனர்.
அவளை தனியாக விட்டுவிட்டு விஜயாலும் சென்னை வர முடியாது. விபாகரனுக்கும் அஜய்க்குமே தொழில் சம்பந்தமாக அதிக வேலை இருக்க, அஜயின் அன்னையாலும் சரி, மஞ்சுளாவாலும் சரி கொஞ்சம் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் திருமண வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய முடியாத காரணத்தினால், யாதவியே முன்னின்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டாள்.
இப்போது திருமணம் நல்லப்படியாக முடியவும், மனதிற்கு நிறைவாக உணர்ந்த அஜயின் அன்னையோ, "கல்யாணம் நல்லப்படியா முடிஞ்சதுன்னா அதுக்கு காரணம் யாதவி தான் விபு, இல்ல நான் ரொம்ப திணறி போயிருப்பேன்.." என்று பாராட்ட,