தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 23 - ஸ்ரீ
“காதலிக்கும் பொண்ணுத்தரும் பாதைப்போதுமே
கட்டை வண்டிக்கூட ஒரு ஃப்ளைட்டு ஆகுமே
ஹே... கைப்பிடிக்கும் உன் விரலத்தந்தாப்போதுமே
கண்ணு ரெண்டும் சந்தோஷமா கண்ண மூடுமே
எந்தன் அருகில் நீதான் இருந்தால்
எந்த நாளும் வெற்றி எனக்கே
மண்ணில் நானும் இருக்கிறவரையில்
இந்த உசுரு என்றும் உனக்கே
போதும் போதுமே மனசுக்குள் இனிக்கிது
உன்னப்போலப் புள்ளக்குட்டிப் பொறக்கனும் நமக்கு
மாமா மாமா ஓம்பொண்ணக் கொடு மாமா
மேளங்கொட்டி நான் தாலிக்கட்டலாமா”
அந்த நட்சத்திர ஹோட்டலின் ப்ரத்யேக விருந்தினர்கள் பகுதியில் ரேஷ்வா ரினிஷா ஆத்வி ஷான்யா என அனைவருமாய் ஜீவிகாவிற்கும் ஜெயந்திற்கும் காத்திருந்தனர்.
படப்பிடிப்பு முடிந்து ஜீவியின் குழந்தையை பார்க்க வருவதாய் ரேஷ்வா கூற ஜெயந்த் தான் ஜீவிகாவிற்கும் மாற்றம் தேவை என வெளியே சந்திக்கலாம் என்று கூறியிருந்தான்.அதன்படியே சிறிது நேரத்தில் தன் குட்டி தேவதையோடு இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“ஹே மகா குட்டி வந்தாச்சு..”,என்றவளாய் ரினிஷா அவளருகில் சென்று குழந்தையைப் பார்க்க ஜீவிகா அவளிடத்தில் குழந்தையை கொடுக்கச் சென்றாள்.
“ஹே ஜி வேணாம் உன் கையிலேயே வச்சுக்கோ..இவ்ளோ குட்டி பேபியை எப்படி தூக்குறது..ஷீ இஸ் சோ க்யூட்..”
“ம்ம் அப்பறம் எப்போ இதெல்லாம் பழகுறது மேடம்..எப்படியிருக்கீங்க எல்லாரும்?”,என்றவாறு ஜெயந்த் ஜீவிகாவிற்கு நாற்காலியை நகர்த்தி கொடுத்துவிட்டு பின் தானும் அமர்ந்தான்.
“நாங்க நல்லாயிருக்கோம்..அதுகுள்ள ரெண்டு மாசம் ஓடிப்போச்சு குட்டிப் பொண்ணு செம தூக்கத்துல இருக்காங்களே!”