அதனாலேயே தோழிகள் சுற்றுலா சென்றுவிட்டு வந்து அதைப்பற்றி பேசும்போதெல்லாம் அந்த இடங்களை பார்க்க வேண்டுமென்று உள்ளுக்குள் அவளுக்கு இருந்த அதிக ஆசை, இப்போதும் கார்த்திக் கேட்கவும் வெளியே வரவே, தன் மனதில் இருந்த ஆசையை அவனிடம் கூறினாள்.
ஆனால் அவள் சொன்ன இடத்தையெல்லாம் அவன் வேண்டாமென்று சொன்னதும், அதற்கு மேல் அதில் அவளுக்கு ஆர்வம் குறைய தொடங்கிவிட்டது. அதனால்,
"நீங்களே எங்க போகலாம்னு முடிவு செய்ங்க மாமா.." என்று முடிவை அவனிடமே விட்டுவிட்டாள்.
"உன்னை எங்கேயாச்சும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் கூட்டிட்டு போகணும்னு தான் எனக்கு ஆசை நித்தி.." என்று அவன் சொல்ல,
"ஆமாம் சென்னைக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு.. இன்னும் உள்ளூரையே பார்க்கலையாம்.. இதில் வெளிநாட்டுக்கா.." என்று நினைக்க தான் தோன்றியதே தவிர,
"வெளிநாடா.." என்று வாய் பிளக்கவெல்லாம் அவளுக்கு தோன்றவில்லை.
ஆனா உனக்கு பாஸ்போர்ட் இல்லல்ல.. முன்னமே நாம இதை ஃப்ளான் செஞ்சுருந்தா உனக்கு பாஸ்போர்ட் முன்னமே எடுத்திருக்கலாம்.. இப்போ அது உடனே முடியாதில்லையா.. அதனால நாம இந்தியாக்குள்ளேயே எங்கேயாச்சும் போவோம்.. எங்கன்னு நான் பார்க்கிறேன்.. நாம சீக்கிரமே போகலாம் பொண்டாட்டி.. இப்போ தூங்கு.." என்றவன், அவளை தன் கைகளுக்குள்ளேயே வைத்திருக்க, அவளும் அப்படியே உறங்கிப் போனாள்.
காலையில் விரைவாக எழுந்து குளித்து பூஜை செய்த நித்யா, கார்த்திக்கிற்கு காபி கலந்துக் கொண்டு அறைக்கு செல்ல, அதற்குள் அவனும் தூங்கி எழுந்து பல் துலக்கிவிட்டு யாரிடமோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்தவள், பேசி முடித்ததும், "இந்தாங்க மாமா காஃபி.." என்று கொடுக்க,
"இன்னைக்கு ஸ்வீட் கிடையாதா பொண்டாட்டி.." என்று கேட்டான்.
அவள் முதலில் அவன் சொன்னதை புரிந்துக் கொள்ளாமல் விழித்தவள், நேற்றைய காலை பொழுது ஞாபகம் வந்து வெட்கப்பட,
"சரி ஆஃபிஸ் கிளம்பும் போது மறக்காம கொடுத்திடு.." என்றவன்,
"அப்புறம் நித்தி.. நாம ஹனிமூன்க்கு கேரளாக்கு போகப் போறோம்.. என் ப்ரண்ட்க்கிட்ட பேசி அதுக்கான அரேஞ்ச்மெண்ட்ஸ்ல்லாம் செஞ்சுட்டேன்.. நாளைக்கு நாம கிளம்பறோம்.. உனக்கு ஓகே தானே.." என்றுக் கேட்க, முடிவு செய்துவிட்டு பின் தன்னிடம் சம்மதம் கேட்கிறானே என்று மனதில் ஒரு நெருடல் தோன்றினாலும், கேரளா என்று சொன்னதால் அந்த நெருடல் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை, அவள் அறிந்து கடைசியாக அவளது தோழிகள் மூனாருக்கும் குருவாயூர் கோவிலுக்கும் சென்றுவிட்டு வந்து பெருமை பேசியதை நினைத்துப் பார்த்தவள், தானும் அங்கே செல்ல போவதை நினைத்து மனம் மகிழ்ந்தவள், அவளுக்கு அதில் விருப்பம் இருப்பதை தலையசைத்து அவனுக்கு தெரிவித்தாள்.
தொடரும்..