"அவங்க ரெண்டு பேருக்கும பிடிச்சு போனால்… பிடித்தால் மட்டுமே… நாம் இதில் தலையிடுவோம். அனைவரின் சம்மதமும் வாங்கியபின் துளசிக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் செய்து வைப்போம். என்னோட முன்னி செல்லத்துக்காக.." என்று கையை உயர்த்தி டீல் செய்தான்.
கற்பகத்திற்கு ஏன்டா இதில் மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற இந்த அண்ணன் இப்படி உறுதியாக இருப்பார் என்று யோசிக்காமல் விட்டது அவள் தவறுதான்.. துளசியின் விசாக்கா கதையை கேட்டபின் அவளுக்கும் அது மனதில் பயத்தை உண்டாக்கி விட்டது. காதலாவது கத்தரிக்காயாவது என்ற மனநிலைக்கு வந்துவிட்டாள்.
க்ருபா சொன்ன விசயத்தை வைத்து ஒரு நம்பிக்கை இருந்தது. துளசி விரும்பினால் மட்டுமே இது நடக்கும். அவள்தான் காதல் என்றாலே காத தூரம் ஓட தயாராக இருக்கிறாளே.. எனவே கற்பகம் பயப்பட தேவையில்லை என்று அமைதியுற்றாள்.
ஆனால் அவளுடைய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட துளசி, சுந்தரத்தை பார்த்து மயங்கி போனாள். அவளுடைய உதட்டில் இருந்த சிரிப்பும் முகத்தில் இருந்த ஒளியும் இதுவரை கற்பகம் கண்டதில்லை… அடிப்பாவி…என்று பதைத்துபோய் சுந்தரத்தை பார்த்தால்… அவன் பேச மறந்த சிலைபோல நின்றான்.
"முன்னி.. நான் சரியாகத்தான் சொல்லி இருக்கேன். ரெண்டு பேரும் இந்த உலகத்தில் இல்லை.." கிசுகிசுத்தான். க்ருபாவின் வெளிநாட்டு வாழ்க்கை இதை இயல்பாக எடுத்துக் கொள்ள வைத்தது.
ஏனோ தெரியவில்லை.. கற்பகம்தான் உள்ளுக்குள் கலங்கினாள். துளசிக்கு எந்த கெட்டதும் நடந்துவிடக் கூடாது.
ஆனால் விதி தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்து விட்டது. துளசி சுந்தரத்தின் கதையை தான் எழுதுவதாக க்ருபா மெனக்கெட… அவளின் கதையை விதிதான் எழுதியது.
சரி.. யாருடைய வாழ்க்கையையும் யாரும் எழுதவில்லை… விதிதான் எழுதுகிறது… அதற்கு மனிதர்களை ஆயுதமாக பயன்படுத்திக் கொள்கிறது என்றாலும்.. சில சமயங்களில் நாம் நல்லதை செய்கிறோமா கெட்டதற்கு துணை போகிறோமா என்பது அந்த ஆயுதத்திற்கே தெரியாது. அதுதான் க்ருபாவின் பட்டாம்பூச்சி கதை..
இருவரையும் சந்திக்க வைத்ததுதான் அவன் செய்த தவறு… அது அடுத்தடுத்து பல தவறுகளை செய்ய வைத்தது.