நல்லவிதமாக சிந்திக்க வைத்தான்.
கிராமத்தில் மருத்துவ சேவை தேவைப்படுகிறது என்று துளசி சொல்லியதால் தாதிபட்டியிலேயே மருத்துவ தொழிலை ஆரம்பித்தான். அதற்கும் க்ருபா உதவி செய்தான். இலவச மருத்துவம் செய்யத் தேவையான செலவுகளை ஏற்றுக் கொண்டான். இடையில் கற்பகத்திற்கும் கங்காதரனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
வாழ்க்கை புரிதலும் நெகிழ்தலுமாக கடந்துபோனது.. கற்பகத்திற்கு ஒரு மகன் பிறந்தான். அதுதான் அதிரதன். துளசிக்கு குழந்தை பிறக்கவில்லை. திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. அபிதா என்று பெயரிட்டு வளர்த்தனர். அடுத்து அதிதியும் பிறந்தாள். அதே சமயத்தில் கற்பகத்திற்கும் மகிமா பிறந்தாள்.
அபிதா.. அதிதி என்று இரண்டு செல்ல குழந்தைகளுடன் துளசியின் வாழ்க்கை இனிமையாக நகரத் தொடங்கியது. ஐந்து வருடங்கள் கடந்த பின்னும் துளசியின் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை. ஆனால் அஞ்சலை மட்டும் துளசியிடம் தொலைபேசியில் பேசுவாள். அது மேலும் வளர்ந்து சித்தியும் அஞ்சலையும் வீட்டுக்கு வரத் தொடங்கினார்கள்.
துளசியின் புகுந்த வீட்டின் செல்வமும் செல்வாக்கும் அவர்கள் கவனத்தை கவர்ந்தது. அதன் விளைவாக சுந்தரத்தின் தம்பி செல்வத்திற்கு திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆனால் ஒவ்வொருவரின் மனதின் அடி ஆழத்தில் சில சிக்கலான எண்ணங்கள் பதுங்கி இருந்தன. அவை அவ்வப்போது சிலரால் தூண்டப்பட்டு கொண்டே இருந்தன.
சுந்தரத்தின் மனதில் க்ருபா ஒரு ப்ளே பாய் உருவகம் கொண்டிருந்தான். அந்த துளி நெருப்பு கனத்துக் கொண்டே இருந்தது. அலையில் ஆடும் படகுபோல அவன் சிந்தனை நல்லதும் கெட்டதுமாக மாறிக் கொண்டே இருந்தது.
க்ருபாவின் மனதில் அவனுடைய இறந்துபோன காதலி இருந்ததால்.. துளி தவறான நோக்கமும் இல்லாமல் மற்ற பெண்களிடம் இயல்பாக இருந்தான். அவனுடைய வெளிநாட்டு வாழ்க்கை அவர்களுடன் பழகும் எல்லையை நிர்ணயிக்கத் தவறியது.
அஞ்சலையை பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே துளசியின் மீது பொறாமை இருந்தது. சுந்தரத்தின் பொருளாதார வசதி உறுத்த.. கற்பகம், க்ருபாவின் நட்பு இன்னும் உறுத்த பொருமிக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்ற நிச்சயமற்ற நிலையில் ஒரு தூண்டுதலுக்காக காத்திருந்தாள்.
இதெல்லாம் சேர்ந்து ஒரு புயலை உருவாக்க காத்திருந்தன.
நட்போ… உறவோ மென்மையானவை.. உறவை விரும்பும் மனம் உண்மையாக இருக்கும்வரை மேன்மையாக இருக்கும். ஆனால்.. அங்கு பொறாமை… சந்தேகம்…