இன்று இவளுக்கு கிடைக்கும் இந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் எல்லாவற்றிற்கும் காரணமானவன். ஆண்களை கண்டாலே ஒதுங்கி போனவள் இன்று ஒரு ஆணை தன் முழு முதல் நண்பனாக வழிகாட்டியாக நினைக்கிறாள் என்றால் அது இவனால் தான். இவனுக்கும் லட்சுமி அம்மாவுக்கும் தான் எவ்வளவு செய்ய கடமை பட்டிருக்கிறோம். அன்று அந்த கமலக்கண்ணனால் நடந்த குழப்பங்களுக்கு பின் இந்த மூன்று மாதங்களில் அவள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி இருக்கிறானே... அன்று அவன் சொன்னதை இன்று செய்து காட்டி இருக்கிறான்.
"வா சத்யா" டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தவன் பவித்ராவின் அறையை பார்த்தான்.
"அம்மா உமாவும் பவித்ராவும் சாப்டலையா?" அவனுக்கு முன் தட்டை எடுத்து வைத்த லட்சுமி, "உமாக்கு இன்னைக்கு ஆப் டே ஸ்கூல். சாப்பிட்டு போய்ட்டா. பவித்ரா நேத்து ஈவினிங் உள்ள போனது. இன்னும் வெளில வரல. கொஞ்ச நேரம் தனியா விட்டா சரி ஆயிடுவானு பார்த்தேன்...ஹம்ம்கூம்...சரி நான் போயி அவளை கூட்டிட்டு வரேன்… சத்யா, நேத்து நடந்த குழப்பத்துல அவ மனநிலை இப்போ எப்படி இருக்கும்னு தெரியல. இனிமேல் என்ன ஆனாலும் அவளை சமாதான படுத்த வேண்டியது உன் பொறுப்பு" என்றவர் பவித்ராவின் அறைக்குள் நுழைந்தார்.
அவர் எதிர்பார்த்தது போலவே அங்கிருந்த ஜன்னலின் வழியே வெளியே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள். எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறாள் என புரிந்தது அவருக்கு.
"பவிம்மா, வா சாப்பிடலாம்" அவளின் அருகே சென்று அவளை அழைத்தார்.
"அம்மா எனக்கு பசிக்கலை " அவரின் முகத்தை கூட பார்க்காமல் தலையை குனிந்து கொண்டே சொல்பவளின் அருகே சென்றவர், "பவி இன்னும் எத்தனை நேரம் இப்படி இருக்க போற சொல்லு, வா சாப்பிடலாம்" அவளின் கையை பிடித்து அழைத்தார்.
"அம்மா என்னை மன்னிச்சுடுங்கம்மா" அவள் முகத்தில் இருந்த குற்றவுணர்வை உணர்ந்தவர், "எதுக்குடா?" என்றார்.
"அம்மா உங்ககிட்ட பொய் சொல்லிட்டு நான் நேத்து அங்க போனது தப்பு. உங்ககிட்ட சொன்னா நீங்க என்னை விடமாட்டிங்க. அதனாலதான் பொய் சொல்லிட்டு போய்ட்டேன். நான் அங்க போனதால தான் சாருக்கு இப்படி அடிபட்டுடுச்சு" -குற்ற உணர்வோடு சொன்னாள் பவித்ரா.
"பவிம்மா, இதுல உன் தவறு எதுவும் இல்லை. நான் வருத்தப்பட கூடாதுனு நீ என்கிட்டே சொல்லல. உனக்கு எதுவும் ஆக கூடாதுனு சத்யா நெனைச்சிருக்கான். அவ்ளோ தான்.