இதோ இன்று இங்கு நிற்கிறாள். காலையில் அவள் கையால் அந்த கட்டிடத்தை திறந்து வைத்து அவள் கையால் எல்லோருக்கும் உணவு பரிமாற வைத்து இருக்கிறான். அன்று அவள் மறுத்த போது அவளுக்கு தெரியவில்லை இதெல்லாம் இத்தனை மனநிறைவை தரும் என.
தூரத்தில் நின்றிருந்த சத்யா ஏதோ உள்ளுணர்வில் தலையை திருப்பி இவள் இருந்த திசையை நோக்க, இவள் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். என்ன என்பதை போல ஒற்றை புருவம் உயர்த்தியவர் அந்த பாட்டியிடம் ஏதோ சொல்லிவிட்டு அவளை நோக்கி வந்தான்.
"என்ன பவித்ரா, ஏதாவது வேணுமா?" அவளருகே வந்தவன் கேட்கவும், இல்லை என தலை அசைத்தாள் பவித்ரா.
"என்னாச்சு... ஜூஸ் கொண்டு வரவா?" மீண்டும் சத்யா கேட்க, பவித்ரா மீண்டும் அதே போல வேண்டாம் என தலையை மட்டும் அசைக்க, "ஹம்ம்கூம் இரு நீ டையர்டா இருக்கேனு நெனைக்கிறேன். இரு வரேன்" என்றவன் ஜூஸ் வைத்திருந்த இடத்தை நோக்கி சென்றான்.
எந்த தருணம் அவன் இவளுக்கு இத்தனை இனிய நண்பனாக மாறினான் என்று கேட்டால் அவளுக்கு தெரியாது. ஆனால் இத்தனை குறைந்த காலகட்டத்தில் அதுவும் தன்னை போன்ற வாழ்க்கையின் இருண்ட பகுதியை பார்த்த பெண்ணுக்கு ஒருவன் மேல் இத்தனை நம்பிக்கை வருவது என்பது சாதாரண காரியமல்ல என்று உணர்ந்த பவித்ராவுக்கு அவள் தாய்க்கு பின் அவள் வாழ்க்கையின் சந்தோசமான கால கட்டம் நிச்சயமாக இந்த மூன்று மாதங்கள் தான் என்று தோன்றியது.
"வீட்டுக்கு போலாமாடா பவிம்மா. நீ டையர்டா இருக்கேனு சத்யா சொன்னான்" என்றபடி அவள் அருகே வந்தார் லட்சுமி. அவரின் பின்னே நின்று கொண்டிருந்த சத்யாவை முறைத்த பவித்ரா, "அதெல்லாம் இல்லைம்மா. நான் நல்லா தான் இருக்கேன். எல்லாரும் சாப்பிட்டதும் நம்ம கெளம்பலாம்மா" என லக்ஷ்மிக்கு பதில் சொன்னாள்.
"சரிம்மா. அப்போ நீயும் உமாவை கூட்டிட்டு வந்து பந்தில உக்காரு. கிட்டத்தட்ட எல்லாரும் சாப்டாச்சு" என லட்சுமி சொல்லவும் பவித்ராவும் உமாவை அழைத்து கொண்டு அவருடன் சென்றாள்.
"அம்மா கண்டிப்பா இதெல்லாம் வேணுமா? " கையில் இருந்த புடவையை முன்னும் பின்னுமாக திருப்பி பார்த்தபடி லக்ஷ்மியை பார்த்து பரிதாபமாக முழித்தாள் பவித்ரா.
"பவிம்மா, ப்ளீஸ் எனக்காக. இன்னைக்கு ஒரு நாள் இதை கட்டிக்கோ" பவித்ராவுடன் போராடி கொண்டிருந்தார் லட்சுமி.