மாட்டாள். அத்துடன் கூடுதலாக அவளுக்கு பிடித்தமான அந்த பரம்பரை வீட்டில் அவள் வசிக்கும் அனுமதியும் கிடைத்திருக்கிறது.
'இது தண்டனையா அல்லது வரமா' என்று அவள் யோசித்தாள்.
' இந்த அதிதி பொண்ணு அவங்க அம்மா மாதிரியே பெரிய லூசா இருக்கும் போல இருக்கு' என்று நினைத்துக் கொண்டே அன்று மாலையே வீட்டில் குடியேறும் திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டாள்.
பஞ்சாயத்து முடிந்து வீட்டிற்கு திரும்பவும் அதிதி வீட்டில் இருந்த கொஞ்சம் பொருட்களையும் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு பேக்கிங் செய்ய ஆரம்பித்தாள். அதிரதனை தனியாக அழைத்த கங்காதரன்,
" நாம் இப்பொழுது வீடு மாற்றும் வேலையை கவனிப்போம். கிருபா நம்மை நாளை சந்திப்பதாக மெசேஜ் அனுப்பியுள்ளான். அவன் சொல்படியே நாம் நாளை காலையில் அவனை சந்திக்க செல்வோம்" என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட அதிரதன் வீட்டு பொருட்களை பேக்கிங் செய்யும் வேலையில் அதிதிக்கு உதவ ஆரம்பித்தான். இதனை விரைவாக முடிக்க வேண்டும் மாலையில் வினய் அவனை சந்திக்க வந்துவிடுவான். அதற்குள் அவன் இந்த வேலைகளை முடித்தாகவேண்டும்.
அப்போது சம்பத் அங்கே வந்தான். அவன் கங்காதரனிடம்,
" ஐயா, தோப்பு வீடு காலி செய்து வைத்து இருக்கிறோம் நீங்கள் தற்சமயம் அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று அப்பா தெரிவிக்க சொன்னார்" என்று கூறினான்.
"நல்லது, இந்த உதவியை நான் எதிர்பார்க்கவே இல்லை. நீ அப்பாவிடம் நன்றி தெரிவித்த விடு" என்று சொன்ன கங்காதரன் அவனிடமிருந்த தோப்பு வீட்டு சாவியை வாங்கிக் கொண்டார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதிதி வீட்டை காலி செய்து தோப்பு வீட்டில் குடியேறினாள். அதற்குள் மாலை வந்து விட அதிரதன் வினயை வரவேற்க தயாரானான்.
தோப்பு வீட்டிற்கு வெளியே வேப்ப மரத்தடியில் அமர்ந்திருந்த அதிரதன் இடம் காபியை கொண்டுவந்து தந்த அதிதி,
" நான் பஞ்சாயத்தில் பேசியதில் தவறு ஒன்றும் இல்லையே" என்று அவனிடம் கேட்டாள்.