தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 02 - சாகம்பரி குமார்
பழைய நினைவுகள் கிளறி விடப்பட்டதாலோ அல்லது நீண்ட நாட்கள் கழித்து அந்த இடத்திற்கு சென்றதாலோ சத்யனுக்கு ரொம்பவும் சோர்வாகி போனது. அவன் வீட்டிற்குள் நுழையும்போதே தளர்வாக நடந்து வந்தான். அப்படியே சோபாவில் அமர்ந்து ரிலாக்ஸ் செய்யலாம் என்று அமர போன பொழுதுதான் கவனித்தான்…. அவனுடைய பிரியத்திற்குரிய தாத்தா வந்திருந்தார். அவர் அவனை பார்க்கவும்,
" வாடா… என் செல்லப்பேரா... எப்படி இருக்க?" என்று உற்சாகமாகக் குரல் எழுப்பினார்.
"ஒஹ்… உங்க அளவுக்கு எனர்ஜிடிக் இல்லை தாத்தா. இன்னைக்கு கொஞ்சம் டயர்டாதான் இருக்கேன்" என்று அவன் அவருடைய மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
" இது என்ன பழக்கம் அலுவலகத்திலிருந்து வரவும் கை கால்களைக் கழுவாமல்…" என்றார்.
" அது… சில சமயம் விதிவிலக்கு தேவைப் படுதே… பொதுவாக நான் அப்படி செய்து விட்டுதான் வருவேன். இன்று ரொம்பவும் டயர்டாக இருக்கிறது. மேலும் உங்கள் மடியில் படுத்துக் கொள்ளும் அவசரம் எனக்கு…"
அவன் பின்னேயே வந்த ரஞ்சன்,
" விடுங்கள் தாத்தா, அவனை கொஞ்சம் நிம்மதியாக இருக்கட்டும். உங்களிடம் தான் கொஞ்சம் இலகுவாக பழகுகிறான்' என்று சொல்லிவிட்டு,
" நீங்கள் எப்பொழுது ஊரிலிருந்து வந்தீர்கள்?. உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி தாத்தா. நான் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு வந்து விடுகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு மாடிப்படி ஏறி சென்று விட்டான்.
"அப்புறம் சது சொல்லுப்பா… நீ இன்னுமே சரியான மாதிரி இருல்லையே. பிரச்சனையை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு எந்த விஷயத்துலயும் நாம ஜெயிக்க முடியாது."
"அப்படினா இல்ல தாத்தா இன்னைக்கு ரொம்ப நாள் கழிச்சு எங்களோட சங்கத்திற்கு சென்றேன் என்னை தலைவராக தேர்ந்தெடுத்து இருக்காங்க. அந்த இடத்தில்தான் என் வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது. அந்த வைப்ரேஷன் என்னால தாங்கிக்க முடியல. அவ்வளவுதான்…"
"நான்தான் சொன்னேனே அந்த இடத்தில் உனக்கு சிக்கல் கிடையாது. உன் மனசுலதான் சிக்கல். இந்த சிக்கலை வைத்துவிட்டு நீ உலகத்தோட எந்த மூலைக்குப் போனாலும் அந்த கஷ்டத்திலிருந்து சோகத்தில் இருந்து வெளிய வரவே முடியாது. ஒன்னு மனசு தானா அந்த விஷயத்தில் இருந்து கழண்டு வரணும். இல்லை நாம அதை கழட்டி விட பார்க்கணும் "
"அது எப்படி என்றுதான் எனக்கு தெரியவில்லை தாத்தா"
" அதற்கு நாம் நம்முடைய மனதிற்கு மறதி என்ற மருந்தை கொடுக்க வேண்டும்."