" நீங்களும் சரியாகதான் சொல்கிறீர்கள் தாத்தா. நான் செய்தது முட்டாள்தனம்தான்."
வெற்றி பெற்ற விஷயத்தை ஊரை கூட்டி கொண்டாடலாம்… தோல்வியடைந்த விஷயத்தை மரதிற்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து தேற்றி கொள்ளலாம்… ஆனால் முட்டாள்தனமாக செயததை யாரிடம் சொல்ல முடியும். தன் மனமே தன்னை சுடும் போது… தேற்றுவார் யாரும் உளரோ…?
வழக்கமாக அவன் அப்படி தன்னைத்தானே நொந்து கொள்ளும் பொழுது மற்றவர்கள் அவனை தேற்றும் முயற்சியில் ஈடுபடுவார்கள். ஆனால் தாத்தா அவனிடம் அப்படி செய்யவில்லை.
" ஆமாம் நீ செஞ்சது முட்டாள்தனம்… மடத்தனம்… படித்த ஒருவன் செய்யக்கூடிய வேலையா அது.. அது என்ன நொடியில புத்திய கடன் கொடுக்கிறது. நாங்க எல்லாம் அப்படி உனக்கு முன்மாதிரியா இருந்தோமா?. யாரு இருந்தாலும் இல்லாட்டியும் வாழத்தான் போறோம். இனிமையான நினைவுகளுடன் வாழலாம். இந்த மாதிரி மடத்தனமா செஞ்சிட்டு நிம்மதியாக வாழ முடியுமா?. இப்போ... உங்க பாட்டி இறந்து போய் எத்தனை வருஷம் ஆகுது?. பாட்டி இறந்ததுக்கு அப்புறம் நான் என்ன இப்படியா ஆயிட்டேன்? அதெல்லாம் ஒன்னுமில்லையே நான் என்னோட வாழ்க்கையை பார்த்துவிட்டுதான் இருக்கேன். அப்படி நான் பார்த்ததாலதான் நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்க." என்று கடிந்து கொண்டார்.
சற்று நிதானித்து பெரு மூச்செடுத்து…
" நீங்களும் சரியாகதான் சொல்கிறீர்கள் தாத்தா. அந்த சமயத்தில் வேறு எந்த சிந்தனையும் எனக்கு இல்லாமல் போய்விட்டது. தாத்தா "என்று மெல்லிய குரலில் கூறினான்.
" அந்த சமயத்தில் என்ன நடந்தது?" என்று அவர் கேட்டார்
"அன்னைக்குதான் அந்த சங்கத்தோட மீட்டிங் நடந்தது. எங்களை மாதிரி தொழிலதிபர்களுக்கு மேல் மாடியிலும்… அதே சமயத்தில் மீரா மாதிரி சிறு தொழில் செய்கிறவர்களுக்கு கீழேயும் நடந்தது'
"சரி .. உங்களோட மீட்டிங் நடக்குது ரெண்டு பேரும் ஒன்னாதான் காரில் போய் இறங்கி இருக்கீங்க. அப்புறம் என்ன ஆச்சு?"
" இரண்டு பேருமே மீட்டிங்ல நன்றாகத்தான் பேசினோம். எங்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்தோம். நல்லபடியாக எல்லாம் முடிந்து வெளியே வரும்பொழுதுதான் அவள் சொன்னாள்… நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்... நான் வக்கீலை பார்த்து விட்டு வருகிறேன் என்றாள். எதற்காக என்று கேட்ட போது டைவர்ஸ் விஷயமாக பேச வேண்டும் என்றாள். அந்த நிமிடமே எனக்கு பதட்டம் ஆகிவிட்டது. "