" அது எப்படி செய்வது ?."
"அதற்குதான் நான் வந்திருக்கிறேன்"
அவர் அடுத்து பேசுமுன் கையில் காபி கோப்பையுடன் அங்கு வந்த நந்தினி,
" அட அண்ணா வந்தவுடன் தாத்தாவோட மடியில படுத்து செல்லம் கொஞ்ச ஆரம்பிச்சா!. தாத்தா நீங்க தான் அண்ணாவைக் கெடுத்து வெச்சு இருக்கீங்க "என்று சொன்னாள்.
" நான் கெடுப்பது இருக்கட்டும். நீங்கள் அவனை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது. முகம் களையிழந்து இருக்கிறது… உங்க அம்மாவை உடனே வர சொல்ல அவங்க கிட்ட பேசணும்"
"அவங்களே வந்துட்டு இருக்காங்க தாத்தா" என்று நந்தினி சொல்லும்போது உடை மாற்றிக்கொண்டு ரஞ்சனும் மாடியிலிருந்து கீழே வந்து விட்டான். அனைவரும் சோபாவில் அமர்ந்தனர்.
" உங்களிடம் முக்கியமான விஷயத்தை பேச தான் இங்கு வந்திருக்கிறேன்" தாத்தா ஆரம்பித்தார்.
"சொல்லுங்க மாமா " என்று மகேஸ்வரன் அவரிடம் பணிவா பேசினார்.
" ஆமாம் அப்பா நீங்கள்தான் எங்களுக்கு சரியான சமயத்தில் சரியான ஆலோசனைகள் சொல்வீர்கள்" என்று விஜயாவும் சொன்னார்.
" அதற்குதானே வந்து இருக்கிறேன். இப்பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"
"புரியவில்லை மாமா "என்று மகேஸ்வரன் சொன்னார்.
" இரு… நான் விளக்குகிறேன். இப்பொழுது ஒருவருக்கு நெருப்பு பிடித்து தீப்பற்றி எரிந்ததில் மாட்டிக் கொண்டுவிட்டார் . முதலில் என்ன செய்வீர்கள்?.. அவரை அதிலிருந்து வெளியே கொண்டு வருவீர்கள். இரண்டாவது அவர் மீது தீக்காயம் பட்டிருக்கும் அதற்கு மருந்து தர வேண்டும். அந்த மருந்து எப்படி இருக்கும்... எரிச்சலுக்கு மாற்றான குளுமை தரக்கூடிய மருந்தாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த தீ காயம் ஆறும் சரிதானே"
" ஆமாம்"
" நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் மேலும் எரிகிற நெருப்பில் சத்யாவை தூக்கிப் போட்டுக் கொண்டே இருப்பீர்களா?" என்று கொஞ்சம் கடினமான குரலில் கேட்டார்.
"இன்று சத்யா தொழில் முனைவோர் சங்கத்திற்கு சென்றதைப் பற்றி சொல்லுகிறீர்களா மாமா. அதில் ஒன்றும் தவறில்லை என்று டாக்டர் சொன்னார். அவ்வாறு செல்லும் பொழுது தான் அவர் மனதில் இருக்கும் பயம் விலகி தைரியம் வரும் என்றும் கூட சொன்னார."