தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 04 - சாகம்பரி குமார்
"குட்மார்னிங் டாக்டர்" என்ற குரல் கேட்டு ரேச்சல் திரும்பினாள். இளம் பிங்க் வண்ணத்தில் புடவை கட்டி அழகான சிரிப்புடன் நந்தினி நின்றாள்.
"நந்து… குட்மார்னிங்… எப்படி இருக்கம்மா?"
"என் பேர் தெரியுமா டாக்டர்?" ஆச்சரியமாக அவள் விழி விரித்தாள்.
"ரேச்சல் சொல்லியிருந்தாள். நீ இன்னிக்கு செச் அப் செய்ய வருவேனு"
அருகில் இருந்தவரை சுட்டி காட்டி"இது எங்கம்மா." என்றாள்.
"வணக்கம் டாக்டர்" ஷீலாவிற்கு வணக்கம் சொன்ன விஜயாவின் கையில் சிறு குழந்தை ஒன்று பொக்கை வாய் காட்டி சிரித்தது. அதனை ரேச்சலால் சரிவர பார்க்க முடியவில்லை. அவள் செக் அப் அறையின் மறைவில் நின்றிருந்தாள்.
"உனக்கு இது இரண்டாவது பேபியாம்மா?" என்று சந்தேகமாக கேட்டார்.
"அது எங்க அண்ணனோட குழந்தை… எனக்கு இதுதான் முதல்.."
அவளுடைய அண்ணன் குழந்தையா…?. அந்த பூக்காரன் அவளுடைய அண்ணனாக இருக்கக் கூடாது… என்று அவள் நினைத்தாள்
"உன் ஹஸ்பென்ட் வரலையா?"
"வெளியே வெயிட் பண்றாரு." அவள் கை காட்டினாள். வராண்டாவில் ரேச்சல் முந்தின நாள் பார்த்த இரண்டு ஆண்களும் நின்றனர்..
"அவரை உள்ளே கூப்பிடம்மா… அவருக்கும் சில விஷயங்களை சொல்லணும்."
நந்தினி அவர்களை பார்த்து உள்ளே வர சொன்னாள். உள்ளே வந்தவர்கள் ஷீலாவிற்கு வணக்கம் சொன்னார்கள்.
"அம்மா… நான் மனுகுட்டியை வெளியே தூக்கிட்டு போறேன்" என்று சத்யன் கை நீட்டினான். அவனிடம் போகாமல் நந்தினியிடம் மனுகுட்டி தாவிட…
"அப்பாட்ட போம்மா செல்லம்" என்று சொல்லியபடி அவனிடம் குழந்தையை கை மாற்றினாள்.
"சத்யாண்ணா… பாப்பா தூங்கிடுவா விளையாட்டு காட்டிட்டு இருங்க…"
அய்யோ… அது அவனுடைய குழந்தைதான்… அவளுக்கு அசந்தர்ப்பமாக இரவு கண்ட கனவு நினைவிற்கு வந்தது. அவள் தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுதே அவன் யாரையும் திரும்பி கூட பார்க்காமல் அந்த அறையைவிட்டு குழந்தையுடன் வெளியே சென்று விட்டான். அவளுக்குதான் மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு தோன்றிக்கொண்டே இருந்தது.
அவள் வேறு சிந்தனையில் இருக்கும் பொழுது டாக்டர் ஷீலா, நந்தினியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே தன்னுடைய பரிசோதனைகளை செய்ய ஆரம்பித்தார்.