"மேடம் நேத்து நீங்கள் தந்த புடவைகளை எங்களோட டெலிகேட்ஸ் ரொம்ப லைக் பண்ணாங்க. இனிமே அதைத்தான் கிஃப்டாக கொடுக்கலாம்னு இருக்கோம். பெரிய ஆர்டர் தரலாமா?"
"நன்றி சார். நாங்கள் சொந்த தறி வச்சிருக்கோம். ஆனால் அந்த புடவைகளை செய்றவங்க வேற… அவங்கட்டதான் நீங்க பேசணும். ஏனெனில்… உங்களிடம் ஆர்டர் வாங்கிட்டு டெலிவரி செய்ய முடியாமல் போனால்… எங்களுக்குதான் சிக்கல். அவர்களை நீங்கள் சந்தித்து பேசுங்கள்."
"ஓ… ஐ ஸீ… அவர்களை நான் எங்கே மீட் பண்ணலாம்?"
"நாளைக்கு இங்கேயே வாங்க சார். மீரா என்னுடைய தோழிதான். புடவைகள் என்னிடம் வாங்கி சொந்தமாக செய்து வருகிறாள். பொருளாதாரத்தில் மிடில் க்ளாஸ் சார்.. அவளுக்கு நான் உதவறேன். இந்த ரக புடவைகள் உங்களுக்கு பிடிச்சிருக்குனு சொன்னதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது" முக மலர்ச்சியுடன் அந்த பெண் கூறினாள்.
"வெரி குட்… உங்க பேர் என்ன?"
"சௌமியா…"
"சௌமியா நீங்கள் நல்ல ஃப்ரண்ட். உங்கள் தோழி நல்லா இருக்கணும்னு நினைக்கறீங்க.. உங்களை பார்த்தில் மிக்க மகிழ்ச்சி. நான் நாளைக்கு வருகிறேன்" என்று கூறி கிளம்பினான்.
மீராவை அப்படித்தான் சந்தித்தான். அவளுடைய திறமையை கண்டு வியந்து… பாராட்டி என சாதாரணமாக தொடங்கிய பழக்கம்… அவளுடைய அடக்கம்… பண்பு… அறிவு என்று அவனை கவர ஆரம்பித்தது.
அவளுடைய அமைதியான முகம் எத்தனை டென்சன் இருந்தாலும் அவனை மறக்க வைத்தது. அவளை அவன் தொடர… அவனுடைய பொருளாதாரம் கண்டு அவள் விலக… என்று கண்ணாமூச்சி ஆடி… பிறிதொரு நல்ல நாளில் பெரியவர்களின் ஆசியுடன் அவளை கை பிடித்தான்.
அவனுக்குதான் அது காதல் திருமணம். மீராவிற்கு அது வீட்டில் பேசி முடித்த கல்யாணம்... அதிலும் அவளுடைய பெற்றோர் இந்த திருமணத்தை நடத்த சம்மதம் கொடுக்கவே இல்லை… சத்யனின் அம்மா விஜயாதான் மீண்டும் மீண்டும் முயற்சித்து திருமணத்தை பேசி முடித்தார்.
அவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்து பார்த்து செய்தார். மீராவின் தயக்கத்தை அவருடைய அன்பு துடைத்தெறிந்து விட்டது. சத்யனின் வீட்டில் அனைவருக்கும் அவளை பிடித்து விட்டது…