உரையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது.
"என் பையனை பேசி, அவனை எனக்கு எதிராகவே திருப்புறீயா நீ? எங்கே இருக்கான் அவன்?" ஆக்ரோஷமாய் கத்தினார் மதுமதி.
"இத்தனை நாள் இல்லாத பாசம் இப்போ என்ன? அவன் எக்கேடா கெட்டு போகட்டும்னு தானே போன? அவன் ரிலிஸ் ஆகி இத்தனை நாளா அவனைப் பார்த்தியா நீ?" பதில் வாதாடினார் அவர்.
"நான் உன்கிட்ட பேச விரும்பலை! அதர்வ் எங்கே! நான் அவனைப் பார்க்கணும்!" என்றவரின் பார்வை அசோக்கை அடைந்தது.
"ஓ..குடும்பத்தோட பழி வாங்குறீங்களா? விடமாட்டேன்..அதர்வ்.." என்று உரத்த குரலில் கத்தினார் அவர்.
"மரியாதையா வெளியே போயிடு! என் பொறுமையை சோதிக்காதே! நான் மனுஷனாகவே இருக்க மாட்டேன்." எச்சரிக்கை செய்தார் சூர்ய நாராயணன்.
"அதர்வ்..." அவரோ சற்றும் அதனை மதியாமல் தன் புதல்வனின் நாமத்தை உச்சரித்த வண்ணமே இருந்தார்.எப்படியும் அவன் வரப் போவதில்லை என்ற நம்பிக்கையோடு இருந்தவர்களின் நம்பிக்கையை உடைக்கும் வண்ணமே வெளி வந்தான் அதர்வ். கீழே தாயார் வந்திருப்பதனைக் கண்டு அவன் முகத்தில் எச்சலனமும் இல்லை.
"எதுக்குடா வந்த? உள்ளே போ மரியாதையா!" தந்தையாரின் வார்த்தையை பொருட்படுத்தாமல் நின்றிருந்தான் அவன். அதைக் கண்டு பெருமிதம் பூத்தவராய்,
"அம்மாவைவிட்டு உன்னால எப்படிடா இருக்க முடியுது! இவங்க சொல்வதை நம்பாதே அதர்வ். வா! நாம கிளம்பலாம். எனக்கு நீ இல்லைன்னா யாருமே இல்லைடா!" மெய்யாகவோ, பொய்யாகவோ வெளிவந்தன அவ்வார்த்தைகள்! அனைவரும் திக்கற்று நிர்கதியாய் நிற்க, அவனோ மௌனமாகவே நின்றிருந்தான்.
"என்னடா? கிளம்பலாம் வா!" அவனை அழைத்துச் செல்ல ஓரடி அவர் எடுத்து வைக்க,
"அங்கேயே நில்லு!" என்றுத் தடுத்தான் அதர்வ். சலனமின்றி எவ்வித உணர்வுமின்றி வெளிவந்த வார்த்தைகளைக் கேட்டு திடுக்கிட்டனர் அனைவரும்!
"தர்மா..இந்தப் பெயர் ஞாபகமிருக்கா?" என்று அவன் வினவ, அப்பெயர் அறிந்த அனைவரது முகத்திலும் குழப்பங்கள் சூழ்ந்தன.
"அந்தத் தர்மா தான், உங்கப்பாவை என்கிட்ட இருந்துப் பிரித்தாள். அவருடைய நிலைமைக்கு அவத்தான் காரணம்,ஆனா, இன்னுமே அவர் அவளைத் தான் நினைத்துட்டு இருக்காரு! இந்த வார்த்தைகள் ஞாபகமிருக்கா!" என்றதும் கிலி படர்ந்தது மதுமதியின் முகத்தில்!
"ஞாபகமிருக்கா சொல்லு!" என்று ஆத்திரத்தில் அருகிலிருந்த கண்ணாடி மேசையினை அவன் குத்த, ஒரே அடியில் அது உடைந்து அவனது கரத்தினைக் கிழித்து உதிரத்தினை சிந்த வைத்தது.