அன்றுத் தாய்க்கு நடந்த அவமானத்திற்குக் காலமே பழித்தீர்த்ததனை எண்ணி ஆடிப்போனான் அசோக். கர்மநிலை இங்கு எவரது முகவரியையும் தொலைப்பதுமில்லை, எச்செயலையும் அது மறப்பதுமில்லை! செயலிழந்தவராய், பேச்சிழந்தவராய் சிலையாகி உயிருள்ள சவமாய் வாசலை நோக்கி நடக்கலானார் மதுமதி. தர்மாவிற்கு நியாயம் பெற்றுத் தருவதற்காகவே புவியில் அந்தப் புண்ணிய ஆன்மாவும் பிறப்பெடுத்திருக்கலாம்.குற்றமற்ற புனித ஆத்மா ஒன்றிற்கு இழைக்கப்பட்ட தீங்கிற்காக எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் வஞ்சம் வைத்து பழித்தீர்க்கும் இறைவனின் உக்கிர பாகம் வையத்தில் இல்லை என்று இனி எவருமே கூறிவிட இயலாது!
ஆயிரம் தான் தன் மன ஆக்ரோஷங்களைக் கொட்டித் தீர்த்தாலுமே, ஈன்ற தாயிடத்தில் இப்படி நடந்துக் கொண்ட மனம் சுக்கலாய் உடைந்திருக்க, அப்படியே மண்டியிட்டவனாய் கதறி அழுதான் அதர்வ். அவனை சமாதானம் செய்யவும் தோணாமல் அனைத்தும் கைமீறியதனை எண்ணி தந்தையானவர் நொடிந்து அமர்ந்திருக்க, ஆறுதல் கரம் நீட்டினான் தமையனானவன்.
"ஏன்டா இப்படி பண்ண?" என்றவனை மௌனமாய் நோக்கினான் இளவல்.
"அம்மா உயிரோட இருந்திருந்தா, இதை நிச்சயமா ஏற்றுக்க மாட்டாங்க! நீ பண்ண காரியத்துக்கு இந்நேரம் என்னப் பண்ணிருப்பாங்கன்னு கூட தெரியலை!" சற்றே கடுமையாக உரைத்தான் அசோக்.
"என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது!" பதிலுரைத்தான் அவன்.
"ஒருத்தன் ஆயிரம் தான் பெரியாளா இருந்தாலும், அம்மாக்கிட்ட எல்லாம் அவனால ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க வயிற்றில் பிறக்கலைன்னா, நீ அவங்க பையன் இல்லைன்னு அர்த்தமில்லை!" என்று அழுந்த அவன் உரைக்க, மனதின் பாரங்கள் எல்லாம் உடைந்துப் போய், தமையனை ஆரத்தழுவி கதறி அழுதான் அதர்வ். சில மணித்துளிகளில் ஆடி அடங்கிய அனைத்தையும் கண்டு அதர்வ் மேலான தவறான கருத்துகள் யாவும் மறந்தே போயின சிவன்யாவின் இருதயத்திலிருந்து!
"அப்பா! அவங்களைத் தடுத்து நிறுத்துங்கப்பா!" என்ற மூத்தவனைக் கண்டு உறைந்துப் போனார் சூர்ய நாராயணன்.
"அம்மாப்பட்ட கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்திருக்கேன்பா! அது அவங்களுக்கு வேணாம். போய் தடுத்து நிறுத்துங்கப்பா!" என்றவனை இளையவனுமே விசித்ரமாய் பார்த்தான். பெருமூச்சு ஒன்றினை விடுத்தவராய், அதன் நியாயம் உணர்ந்தவர் விரைந்து மதுமதியினைத் தடுக்கத் துணிந்துச் சென்றார். அன்று ஏற்பட்ட காலத்தாமதம் தர்மாவிற்கு இழைத்த வேதனையை வேறு எவருக்குமே அவர் நல்க விழையவில்லை. எதன் காரணத்தாலோ, நன்கு காய்ந்த வெயில் மறைந்து மழைப் பொழிந்துக் கொண்டிருக்க, மதுமதியினைத் தேடிக் கொண்டு காரில் புறப்பட்டார் சூர்ய நாராயணன். அன்று நிகழ்ந்ததைப் போல காலத்தாமதம் ஏதும் நிகழ கூடாது என்பது அவரது வேண்டுதல்! அவர் வேண்டுதலும் கைவிடப்படவில்லை. எங்கோ ஊர் எல்லையில் ஒரு கல்லின்