தொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன்! - 16 - சாகம்பரி குமார்
மீராவைப் பற்றிய முழு விவரங்களையும் சௌமியாவிடமிருந்து தெரிந்து கொண்ட சத்யனுக்கு பதட்டம் இன்னும் அதிகரித்தது. பரத்தை விரைவாக தேட வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். அவனால் மட்டுமே மீராவின் தற்போதைய நிலைமையை சொல்ல முடியும் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ரஞ்சனிடம் அதையே தெரிவித்தான்.
'கண்டிப்பாக…. நீ சொல்வது உண்மை. நாம் இப்பொழுதே பரத்தை தேடி அவனுடைய வீட்டிற்கு செல்வோம்" என்று ரஞ்சன் சொன்னான்.
"அவனுடைய முகவரி உனக்கு தெரியுமா?" என்று சத்யன் கேட்டான்.
"நான் நம்முடைய அசோசியேஷனிலிருந்து அவனுடைய அட்ரஸை நேற்றே அனுப்ப சொல்லி இருந்தேன். அவன் அங்குதானே வேலை செய்தான். அவர்கள் அட்ரஸை தந்துவிட்டார்கள். நாம் இப்பொழுது பரத்தின் வீட்டிற்கு செல்வோம்"
"பரத்தின் வீட்டில் வேறு யாரும் இருப்பார்களா?'
"இல்லை.. இல்லை... அவன் மட்டும் தனியாக இருக்கிறதாக சொல்கிறார்கள். அவனுடைய பெற்றோர்கள் வேறு ஊரில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். அதனால் நாம் அவனை நன்றாக விசாரிக்க முடியும்"
'நன்றாக' என்ற வார்த்தையை ரஞ்சன் அழுத்தி சொன்னான்.
"குட்… நாம் இப்போதே அங்கு செல்வோம்" என்று சத்யன் காரில் ஏறினான்.
அவர்கள் விரைவாக பரத்தின் வீட்டை அடைந்தார்கள். ஆனால் அந்த வீடு பூட்டியிருந்தது. பரத் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
" அவன் இங்குதானே இருக்க வேண்டும். ஒருவேளை அலுவலகத்திற்கு சென்ற இருப்பானோ?" என்று சத்யன் வினவினான்.
" இல்லை… அவன் இப்பொழுது நம்முடைய அசோசியேஷன் வேலை பார்க்கவில்லையாம். அவனை சந்திக்க நமக்கு இருக்கும் ஒரே வழி இந்த அட்ரஸ்தான்" ரஞ்சன் விளக்கினான்.
"அப்படி என்றால்… நாம் இப்பொழுது என்ன செய்யலாம்?. இரு… இரு.. அக்கம்பக்கத்தில் விசாரித்துப் பார்க்கலாம்" என்று பரத்தின் வீட்டிற்கு பக்கத்து வீட்டை சத்யன் நோக்கினான். அங்கு வாசலில் ஒரு பாட்டி அமர்ந்திருந்தார். அவரிடம்…
" இந்த வீட்டில் பரத் என்று ஒருவர் இருப்பார் அல்லவா... அவர் எங்கே என்று தெரியுமா?" என்று கேட்டான்.