ரேச்சலுக்கு நன்றாகவே அந்த விஷயம் புரிந்தது. நேற்று அவள் நடந்து கொண்ட விதத்திற்கு அடி விழாமல் போனதே பெரிய விஷயம்.. அம்மா சொல்வதை கேட்டுதான் ஆக வேண்டும்.
ம்… அவள் ஏன் ஓடிப் போய் சத்யனை கட்டிக் கொண்டு கதறினாள் என்பது அவளுக்கே புரியவில்லை… எடி உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறான் என்பதுதான் அவள் நினைவில் இருந்தது… சத்யன் அவளை நோக்கி வந்தது நினைவில் இருந்தது… அவன் என்னவோ சொன்னான்… அதுதான் அவளை தலைகீழாக புரட்டி போட்டு விட்டது. அவன் சொன்ன வார்த்தை நினைவில் இல்லை… கையை நீட்டியபடி அவன் வந்தது கனவில் வந்ததை நினைவுபடுத்தி இருக்கலாம்… அதன் தொடர்ச்சியாக அந்த சம்பவம் நடந்துச்சா…?
சே… கனவில் வந்த அந்த காட்சி அவளை அவ்வளவு பாதித்து விட்டதா? அச்சோ… அவன் என்ன நினைத்திருப்பான்…? அவன் என்ன நினைப்பது?... அவனும்தான் அணைத்துக் கொண்டு நின்றானே… அவனுக்கும் ஏதாவது கனவு வந்து ரூட் போட்டிருக்குமோ…?
அவள் ஆழ்ந்து யோசித்தாள்… அவள்தான் 'சத்தீ' என்று கதறினாள். அவன் 'ரேச்சல்' என்று சொல்லவில்லை… வேறு ஏதோ சொன்னான். ம்… அவனுடைய உதட்டசைவை ரீகால் செய்து பார்த்தாள். உதடுகள் இணைந்து பிரிந்தனவே.. 'மீ..' என்று சொன்னானா?
எதுவானாலும்… ப்ச்… அது ரொமாண்டிக்கான தருணம் அல்ல… அவர்களும் அப்படி நிற்கவில்லை… நீண்ட பிரிவிற்கு பின் சந்தித்து கொள்ளும் ஏக்கம்தான் இருந்தது… ஏன் அப்படி?.
ஒரு விஷயம் உறுதி… சத்யனை பார்க்காமல் இருப்பது அவளுக்கு நல்லது. ஆனால் மனுகுட்டியை பார்க்க கூடாது என்பது பெரிய தண்டனை… செல்லத்தை பார்க்காமல்… அவளிடம் கன்னத்தில் கடி வாங்காமல்.. மழலையை கேளாமல்… இருந்தால்..! அவளுடைய உலகம் நின்று விடுமே… நினைக்கும்போதே இதயம் துடிப்பை குறைக்க ஆரம்பிக்க… நெஞ்சு வலித்து மூச்சு திணறி கண்கள் கசிய ஆரம்பித்தன. புசுபுசுவென அழ ஆரம்பிக்கும் முன்… அந்த கூக்குரல் கேட்டது.
"டேய்… விடுங்கடா… பாவிங்களா…"
ரேச்சல் திடுக்கிட்டாள்… அது… அது… கல்பியுடையது போல இருக்கிறதே… பதட்டத்துடன் மரக்கிளையின் மீதேறி எட்டி பார்த்தாள்.
சற்று தொலைவில் கல்பி அலைய குலைய ஓடி வருவதும்… அவளை நான்கு ஆண்கள் துரத்திக் கொண்டு வருவதும் தெரிந்தது…. அடப்பாவிங்களா…. பற்களை நறநறத்தாள்.