இல்லை... எடியின் உடல்நிலையால் மனம் சோகமாக இருந்தது. மனுகுட்டியுடன் விளையாடாத கவலையும் இருந்தது.
மெதுவாக சைக்கிளை சாலை ஓரத்தில் வைத்துவிட்டு அவளுக்கு பிடித்தமான கிளையின் மீது ஏறி அமரலாம் என்று நடந்தாள். ஹேன்ட்பாரில் மாட்டியிருந்த காட்டா பெல்ட்டை இடுப்பில் சொருகிக் கொண்டு மரத்தின் மீது ஏற விளையும்போது…
சுருக் என்று எதுவோ குத்தியது. அவளை முள் குத்தி விட்டதை உணர்ந்து காலடியில் குனிந்து பார்த்தாள். அங்கே 'கேக்டஸ்' இருந்தது... அதாவது வெளி நாட்டு பிரஜையான ஒரு வகையான கள்ளிச்செடி... !. முட்கள் நிறைந்தது...
இது எப்படி இங்கு வந்திருக்கும் என்று யோசித்தாள். இதுபோல ஏற்கனவே பார்த்தும் இருக்கிறாள். மேரிம்மா சொன்னது நினைவிற்கு வந்தது. எல்லாம் இந்த வாஸ்து பிரச்சினைதான்…. ஒரு வாஸ்து நிபுணர் சொன்னார் என்று இதுபோன்ற முள் செடிகளை வெளிநாட்டிலிருந்து தருவித்து வளர்கின்றவர்கள்… திடீரென்று வேறு ஒரு ஜோசியர் வந்து அது ஆபத்து என்று சொல்லவும் இப்படி தூக்கி எறிந்து விடுகின்றனர். பாவம்… நாய்… பூனை போன்ற சிறு விலங்குகள் இதில் காயமடைந்து விடுகின்றன.
ரேச்சல் காலில் துளிர்த்திருந்த இரத்தத்தை துடைத்தபடி மரக்கிளையின் மீது ஏறி அமர்ந்தாள். அது ஒரு கொய்யா மரம். அதில் பழங்கள் உச்சியில் பழுத்து தொங்கிக் கொண்டிருந்தன. அவள் தன்னுடைய காட்டாபெல்ட்டை வைத்து அதில் ஒரு பழத்தை அடித்து கேட்ச் பிடித்துக் கொண்டாள். அதை மெல்ல கடித்தபடி மரக்கிளையில் ஆடியபடி அமர்ந்திருந்தாள். இப்போதைக்கு அவளுக்கு பொழுதுபோக்கு அது மட்டும்தான்…
அவளுடைய அம்மா காலையிலேயே வழக்கமான மருத்துவ முகாமிற்கு கிளம்பிவிட்டார்கள். அப்படி கிளம்புமுன் அவளை கூப்பிட்டு எச்சரித்தது நினைவிற்கு வந்தது.
"இதோபார் ரேச்சல்… எனக்கு நேற்று இரவு நீ நடந்து கொண்ட விதம் பிடிக்கவில்லை. உன் மனதிற்குள் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் அதற்கான பாதிப்புகள் ஏற்பட நேரிடும். நீ இனிமேல் பக்கத்து வீட்டிற்கு செல்லக்கூடாது. மனு குட்டியுடன் கொஞ்சுவதையும் விளையாடுவதையும் சற்று நிறுத்தி வை. "
ரேச்சலின் முகம் மாறுவதை கண்டவர்… கடுகடுத்தார்.
"ஜஸ்ட் ஸ்டே அவே…! இப்போதைக்கு என்னால் இதைத்தான் செல்ல முடியும். ஜெமி காலையிலேயே நாகர்கோயிலுக்கு கிளம்பி சென்றுவிட்டான். அவன் நாளைதான் திரும்பி வருவான். அதுவரை அமைதியாக இருக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு. நான் உன்னை நம்பு கிறேன்" என்று கிளம்பிவிட்டார்.