இயலாமையை வெளிப்படுத்தினார் நவீன்குமார். அவரின் விரக்தியை கண்டவனாய் அமைதியாகும்படி சைகை செய்தான் அசோக். முன்னமே இருந்த மனக்கசப்பில், அவனது இந்த எரிச்சலூட்டும் நிகழ்வுகளும் சேர்ந்துக் கொள்ள, சென்று ஓங்கி ஓர் அறை வைத்துவிடலாமா என்று எண்ணத் தோன்றியது சிவான்யாவிற்கு! அதனைக் கண்டும் காணாதவனாய் திக்கற்று நின்றான் அசோக். தனது முழு கவனத்தினையும் அவ்விளையாட்டில் அவன் பதித்திருக்க, திடீரென தொலைக்காட்சி அணைக்கப்படவும் திடுக்கிட்டுத் திரும்பினான் அதர்வ். ஏனையோர் தான் அவனிடத்தில் தயக்கம் காட்ட இயலும், தந்தையாரை அவன் என்னச் செய்ய இயலும்? மின்சார இணைப்பினைத் துண்டித்தவராய், வாயே திறவாமல் அவனிடத்தில் வந்தவர் அவன் கரத்திலிருந்து அந்த ரிமோட்டினைப் பிடித்து இழுத்தார்.
" விடு!" அவனோ அதனைத் தருவதாகவே இல்லை. தன் எதிரிலே தந்தையாரை மரியாதைக் குறைவாக அவன் நடத்தும் விதம் கண்டு ஒற்றை புருவம் உயர்த்தி நோக்கினான் மூத்தவன். அவரோ அவனிடத்தில் இருந்து அதனை இழுத்து அதனை அலமாரியில் வைத்து மூடினார். அப்பாடா என்று பெருமூச்சு வந்தது பலரிடமிருந்து! அவனிடத்தில் அவர் ஒரு பார்வைத் தான் பார்த்திருப்பார் அதர்வ்வின் அனைத்து ஆவேசங்களும் அடங்கிப் போனது. அவன் அருகிலிருந்த கைப்பேசி மின்னி மின்னி அணைய, யாரென்று எடுத்துப் பார்த்தவரிடமிருந்து கைப்பேசியை பறிக்க முயன்றான் அதர்வ். அவரோ ஒற்றைப் பிடியில் அவனது இரு கரங்களையுமே சிறைப்படுத்தினார்.அழைத்தது யாரென்று தெரிந்துப் போக, கைப்பேசியை அவனிடத்தில் நீட்டி,
"பேசு!" என்றார். அவனோ அதைப் பொருட்படுத்துவதாகவே இல்லை.
"பேசுடா!" சற்றே உரத்த குரலில் அவர் கூற, தயக்கத்துடன் அதனை வாங்கியவன், என்ன நினைத்தானோ, ஒரே அடியில் அந்தக் கைப்பேசியை போட்டு உடைத்தான். அவன் அடித்த வேகத்தில் அது சிதறி விழ, திடுக்கிட்டுப் போயினர் அனைவரும்! அவனது கண்கள் சட்டென கலங்கிப் போக, தன் பலத்தையெல்லாம் கொண்டு தந்தையிடமிருந்துத் தன்னை விடுவித்துக் கொண்டவன், எவரின் முகத்தினையும் நோக்காமல் தனது அறைக்குள் சென்றுக் கதவினை அடைத்துக் கொண்டான். அவனை எப்படித்தான் வழிக்குக் கொண்டு வருவதோ என்று விளங்காமல் தவித்துப் போனார் சூர்ய நாராயணன்.அவன் சிறிதளவும் தன்னிலையில் இல்லை என்பது மட்டும் அவருக்குத் தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. ஈன்ற தாயிடமிருந்தே வந்த அழைப்பினை ஏற்க மனமில்லாதவனாய் மிருகத்தனமாய் நடந்துக் கொண்டவனை என்னவென்றுத் திருத்த இயலும்? ஒன்றை மட்டும் சூர்ய நாராயணன் அறிவார்..அன்றைய தினம் ஒரு மாபெரும் சங்கடம் உதிக்கப் போகிறது என்பது மட்டும் அவருக்குத் திண்ணமானது. ஆம்...! மதுமதி அதர்வ்வை அழைத்துச் செல்ல அவ்வூருக்கு வந்திருக்கிறார் என்பது அவர் அறிந்த ஒன்றே!இனி வரும் காலத்திலாவது அவனை நன்முறையில் மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை எல்லாம் வீணாய் போனது அவருக்கு!