அவனுடைய அலைபேசி ஒலித்தது… கேசவ்தான். ஒரு அவசரத்துடன் அலைபேசியை எடுத்தான். ஓபன் ஸ்பீக்கரில் போட்டு பேசினான்.
"ஏதாவது தெரிஞ்சதா கேசவ்"
"அவன் நிறைய பேசி விட்டான். மீராவை பற்றி நிறைய சொல்லிவிட்டான். ஆனால் அவள் அந்த பேருந்தில் ஏறினாள் என்பதை உறுதியாக சொல்கிறான்….அவன் திருநெல்வேலி பஸ் ஸ்டாண்டில் அவளை பிடித்து விடலாம் என்று காரில் பின்தொடர்ந்திருக்கிறான். அவன் கண் எதிரேயே அது வெடித்து சிதறி இருக்கிறது.."
"கேசவ்…." சத்யனின் குரல் சலனப்பட்டது…
"டோன்ட் வொரி… நான் நாளைக்கு மீராவோட அப்பாவை கூப்பிட்டு விசாரிக்கறேன்… அந்த ப்ளேட் விஷயம்பற்றி ஆராயலாம்… அதிலும் எதுவும் சிக்கவில்லை எனில்… பேருந்து விபத்தை விசாரித்த ஸ்டேஷனுக்கு போகலாம். அந்த ரிப்போர்ட்டை செக் பண்ணுவோம். லெட்ஸ் ஸீ… உண்மை ஒருபோதும் மறையாது. நம்பிக்கையோட இரு… உன் மனம் சொல்வதை நானும் நம்புகிறேன்" ஆறுதல் சொன்ன கேசவ் அலைபேசி தொடர்பை துண்டித்தான்.
"என்னடா… போலீஸ் மாதிரி பேசாமல்… ப்ரீஸ்ட் மாதிரி உள்மனம் ஆழ்மனம்னு சொல்லிட்டு இருக்கான்." அப்பா அங்கலாய்த்தார்…
"மாமா… தெளிவான முடிவு வரும்வரை காத்திருப்போம்." என்ற ரஞ்சன் அவரை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
கேசவ் சொன்னது சத்யனுக்கு கவலையை தந்தது. மீரா அந்த பஸ்ஸில்தான் ஏறியிருந்தாள் எனில் அவளுக்கு என்னவாகி இருக்கும்..
அவனால் மேற்கொண்டு யோசிக்க முடியவில்லை… . ஏனெனில் மனு குட்டியின் குரல் வித்தியாசமாக கேட்டுக்கொண்டே இருந்தது. அது பிடிவாதமான அழுகை குரல்!. அவள் ஏன் அழுகிறாள் என்று யோசித்தான். நந்தினி அவனை நன்றாக பார்த்துக் கொள்வாளே…
உண்மையை சொல்லப் போனால் மனுவின் அழுகை குரலை இதுவரை அவன் கேட்டதில்லை. வேக்ஸின் போட்டபோதுகூட சிரித்துக் கொண்டுதான் வந்தாள்…
அவன் கவலையுடன் எழுந்து சென்றான்… நந்தினி மட்டுமல்ல அம்மாவும் மனுவின் அழுகையை நிறுத்தும் முயற்சியில் இருந்தனர்… தாத்தா அவனை பார்த்து முறைத்தார்.
"ஏன் அழறா?" அவன் அம்மாவிடம் கேட்டான்.
"எல்லாம் உன்னாலதான்…"
"நான் என்ன செஞ்சேன்ம்மா?"