"அந்த ரேச்சலை வர வேண்டாம்னு சொல்லிட்ட. மனுகுட்டி அவளை தேடி தேடி ஏக்கமாயிட்டா…"
"அம்மா… அதான் ரஞ்சன் சொன்னார்ல. ரேச்சலின் உடல்நிலை சரியில்லைனு…" குறுக்கிட்ட நந்தினி நினைவூட்டினாள்.
"சரி… அந்த பொண்ணுக்கு பழைய நினைவு திரும்பிட்டால் மனுக்கு பிரச்சினைதான்… புரியுது. அதுக்காக படக்குனு அவளை வர வேண்டாம்னு சொல்ல முடியுமா… கொஞ்சம் கொஞ்சமா விலக்க முயற்சிக்கணும்...சின்ன குழந்தை ஏங்கி போயிட மாட்டாளா? வளர்ந்தவங்களுக்கே ஒருத்தரை மறக்கனும் என்றால் முடியுதா என்ன?" தாத்தா பேசினார்.
அவர் சொல்வது சத்யனுக்கு புரிந்தது… இங்கு வந்தும் மீராவை அவனால் மறக்க முடியாததை சொல்கிறார்.
"இப்ப என்னை எதுக்கு வம்படிக்கறீங்க"
"உண்மையதான் சொல்றேன். மீராவை மறக்கடிக்க இங்கே கூட்டிட்டு வந்தால்… பீரோவுக்குள்ள வச்சு பூஜை போட்டுட்டு இருக்கிற"
"பீரோவை ஆராய்ச்சி பண்ணீங்களா?"
"என் வீடு… நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆனால் பிரச்சினை இப்போ அதுவல்ல… மனுக்கு ரேச்சல் வேணும்."
அதற்குள் மனுவின் அழுகுரல் ஓங்கி ஒலிக்க… சத்யன் கவலையாக கேட்டான்…
"சரிம்மா… இப்போது என்ன செய்யணும்?"
"ரேச்சலை பார்த்து கொஞ்சி விளையாடினா சாப்பிட்டு தூங்கிடுவாடா.. நான் தூக்கிட்டு போறேன்"
"இருங்கம்மா… ரேச்சல் முழிச்சிருக்காங்களான்னு கேட்டு சொல்றேன்." என்று அலைபேசியை எடுத்துக் கொண்டு வராண்டாவிற்கு வந்தான். டாக்டர் ஷீலாவிற்கு அழைப்பு விடுத்தான்.
"ம்… ஷீலா பேசறேன். என்ன விஷயம் சத்யன்?"
"டாக்டர் நான் இப்போது சத்யனா பேசவில்லை. ஒரு சின்ன குழந்தையோட அப்பாவா பேசறேன். அவள் ரொம்ப அழறாள்"
"மனுவா… ஏன்?"
"அது… ரேச்சலை பார்க்கவில்லை… அதனால்… அவள் உங்க பொண்ணுட்ட ரொம்ப பிரியமாயிட்டாள். இன்னிக்கு முழுக்க தேடிட்டு இருந்தாளாம்…"