இரண்டு முறை பார்த்ததை தவிர சான்வி அவனுக்கு அதிகம் பரிச்சயமே இல்லாதவள் என்பதெல்லாம் அவனுக்கு முக்கியமாக படவில்லை. அவனுக்கு அவளை பிடித்திருந்தது. கனவில் நடந்ததை நிஜமாக்க விரும்பினான்.
சான்வியை சந்திக்க வேண்டும், பேச வேண்டும். நேரடியாக பேச முடியா விட்டாலும் மொபைல் வழியாகவாவது பேச வேண்டும். அதற்கு இப்போது இருக்கும் ஒரே வழி அவளின் தம்பி ஆதித்யா.
ஆதித்யாவை எப்படியாவது நண்பனாக கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துக் கொண்டான்.
இதற்கு அக்ஷராவை மட்டும் நம்பி இருந்தால் சரி படாது. அக்ஷரா பேசியே காரியத்தை கெடுத்து விடுவாள்.
எனவே விவேக் நேராக களத்தில் இறங்க முடிவு செய்தான்.
“அக்ஷரா டைம் என்ன ஆகுது? எவ்வளவு நேரம் தான் சாப்பிடுவ. கிளம்பு, கிளம்பு!”
வாயில் இட்லியுடன் இருந்த அக்ஷரா மட்டும் அல்லாமல் அவள் அருகே பரிமாறிக் கொண்டிருந்த ஹரிணியும் கூட விவேக்கை சந்தேகமாக பார்த்தாள்.
அவர்கள் சந்தேகம் புரிந்து, “பங்கச்சுவாலிட்டி ரொம்ப முக்கியம். சொன்னா சொன்ன டைமுக்கு போகனும்,” என தன் பேச்சுக்கு சப்பைக் கட்டுக் கட்டினான் விவேக்.
“என்னமோ உன் கிட்ட வித்தியாசமா இருக்கு, விவேக். என்ன நடக்குது?” என அக்கறையோடு வினவினாள் ஹரிணி.
“தெரியாத்தனமா இந்த பொண்ணுக்கு உதவுறேன் சொல்லி மாட்டிக்கிட்டு இருக்கேன், அது தான் வித்தியாசம். வேற எதுவும் கிடையாது ம்மா,” என அக்ஷரா மீது பழியை போட்டு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் விவேக்.