“உனக்கு நேரம் ஆச்சுன்னா நீ போ விவேக். நான் உபர் பிடிச்சு போய்க்கிறேன். ஆதித்யா ஸ்பெசிபிக்கா டைம் எல்லாம் சொல்லலை. நான் மெதுவா போனாலே போதும்,” என்றாள் அக்ஷரா.
“ஹேய் ஸ்டுப்பிட், நம்ம பிளானை மறந்துட்டீயா? ஆதித்யாவை ஹோட்டல் காலி செஞ்சு வீட்டுக்கு வர செய்யனும். அப்போ எனக்கும் வேலை கம்மி, உனக்கும் கத்துக்க ஈஸியா இருக்கும். அவனுக்குமே கூட காசு மிச்சம். லெவன்-ஒ-கிளாக் முன்னாடி செக் அவுட் செய்றதை சொல்லி ஆகனும். லேட்டானா இன்னொரு நாளுக்கு சார்ஜ் போட்டுடுவாங்க. தேவையே இல்லாம பணம் வேஸ்ட்டா போகும்.”
விவேக் அக்ஷராவை ஸ்டுப்பிட் என்று அழைத்ததற்கு அவள் வருத்தப் படப் போகிறாள் என ஹரிணி யோசிக்க, அவளோ ஈ என எல்லா பற்களும் தெரிய சிரித்தாள்.
“இதனால தான் நீ இவ்வளவு பெரிய பிஸ்னஸ் வெற்றிகரமா நடத்துற. சூப்பர் ப்ளான் விவேக். வா, வா உடனே கிளம்பலாம்.” என சாப்பிடுவதை நிறுத்தி எழுந்துக் கொண்டாள் அக்ஷரா. அப்படியே ஹரிணியிடம்,
“பெரியம்மா, வந்து சாப்பிடுறேன். விவேக் சொல்றது சரி. லேட்டா போனா எல்லாமே வேஸ்ட். ஆதித்யாக்கும் நாலு இட்லி மீதி வச்சுக்கோங்க. நான் போய் அவனை கையோட அழைச்சுட்டு வரேன்.” என தகவல் சொல்லி, ஓடாத குறையாக சென்றாள்.
ஹரிணிக்கு விவேக், அக்ஷரா இருவரின் நடவடிக்கைகளுமே விசித்திரமாக இருந்தது. இருந்தாலும் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வரப் போகிற செய்தி மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்காமல் ஆதித்யாவிற்கு வேண்டியவற்றை தயார் செய்து வைக்க வேலைக்காரர்களிடம் சொல்ல சென்றாள்.
விவேக், அக்ஷரா இருவரும் ஹோட்டல் சீசன்ஸ் போர் சென்றப் போது ஆதித்யா லாபியில் அக்ஷராவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.