அதுவரைக்கும் கண்களால் சான்வியை அள்ளிப் பருகிக் கொண்டிருந்த விவேக், அக்ஷராவிடம், “அம்மாவை நேரா பேச சொல்றேன், அதுக்கு அப்புறம் கூட முடிவு எடுக்கலாம்னு சொல்லு,” என்றான்.
அக்ஷராவிற்கும் அது நல்ல ஐடியாவாக பட்டது.
ஆதித்யா பக்கதில் சென்று, அவன் பேச்சில் குறுக்கிட்டாள்.
“அக்கா, நான் என் பெரியம்மாக்கு உங்க நம்பர் கொடுத்து பேச சொல்றேன். நீங்க அவங்க கிட்ட பேசினா உங்களுக்கு இன்னும் கம்பார்டபிலா இருக்கும். பேசிட்டு முடிவு எடுங்களேன்?”
“அப்படி இல்லை அக்ஷரா. ஆதித்யாக்கு எல்லாமே புதுசு. உங்க எல்லோருக்கும் வேற தொல்லை. அது தான் யோசிக்குறேன்.”
“தொல்லை எல்லாம் இல்லை அக்கா. எம் பெரியம்மாவை பேச சொல்றேன். நீங்க பேசிட்டு திரும்ப கூப்பிடுங்க.”
சான்வி சரி என தலை அசைத்தாள்.
அடுத்த நொடியே அழைப்பை துண்டித்த அக்ஷரா, உடனடியாக ஹரிணியை அழைத்து விஷயத்தை சொல்லி சான்வியின் நம்பரையும் கொடுத்தாள்.
“என் அம்மா கன்வின்ஸ் செய்திருவாங்க ஆதித்யா. நீ பேக் செய்ய ரெடி செய். நான் ரிசப்ஷன்ல நீ ரூம் வேகட் செய்யப் போறேன்னு இன்பார்ம் செய்திடுறேன்,” என்றான் விவேக்.
“அக்கா பேசி சொல்லிடட்டுமே சார்? அவ புக் செய்து கொடுத்த ரூம்,” தயக்கம் மிக்க ஆதித்யா பேசவும், விவேக் திரும்பவும் நட்போடு அவன் தோளில் கை போட்டுக் கொண்டான்.
“இந்தக் காலத்துல இப்படி நல்லவனா இருக்கீயே. கிரேட். உன் அக்காவும் கிரேட்டா தான் இருக்கனும்!”