“கூப்பிடு ப்பா! நானே உன் அக்கா கிட்ட பேசுறேன்!” என்றான் விவேக் உற்சாகத்துடன்.
“என் போன்லேயே பேசிடலாம்,” என அக்ஷரா அவள் போனில் இருந்து வாட்ஸ் அப் வழியாக சான்வியை அழைத்தாள்.
விவேக் அக்ஷ்ராவின் பின்னே சென்று நின்றான்!
விடியோ அழைப்பை ஏற்று பேசிய சான்வி, அக்ஷ்ராவை பார்த்து புன்னகை சிந்தினாள்.
வீட்டில் இருந்ததாலோ என்னவோ கொஞ்சமாக நிறம் மங்கி இருந்த சுரிதார் அணிந்திருந்தாள். அதுவும் கூட அவளுக்கு அழகாக இருந்தது. அவள் முகத்தில் பூத்திருந்த ஒன்றிரண்டு வேர்வை துளிகள் அவளின் அழகுக்கு கூடுதல் அழகு தந்தது.
விவேக் சான்வியை ரசித்துக் கொண்டு நிற்க அக்ஷரா பேச்சை தொடங்கினாள்.
“அக்கா, ஆதித்யா எங்க வீட்டுல வந்து தங்கிக்கட்டுமா? இங்கே இருந்தா தினம் வந்து போறது கஷ்டமா இருக்கு. அவனுக்கும் ஹோட்டல் ஸ்டே, சாப்பாடு எல்லாம் சரியா இருக்காது. வீடுன்னா எங்க இரண்டு பேருக்குமே வசதியா இருக்கும்.”
சான்வியின் முகத்தில் சந்தேகம் தெரிந்தது. என்ன முடிவு எடுப்பது என்று அவள் யோசிப்பதும் புரிந்தது!
“ஆதி என்ன சொல்றான், அக்ஷரா?”
“அவன் தான் உங்க கிட்ட கேட்டு டிசைட் செய்யலாம்னு சொன்னான். இங்கே தான் இருக்கான்.”
அக்ஷரா போனை ஆதியிடம் கொடுக்க, ஆதித்யா விவேக், அக்ஷரா சொன்னதை மீண்டும் சான்வியிடம் ஒப்பித்தான்.