"ஏடா கார்த்திக் என்ன ஆச்சு? என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற? வெட்கப்படுற, அக்காவை மறந்துட்டியா?"
"ஏய் ….. அக்கா உன்னை மறக்கறதா? அதெல்லாம் ஒன்னும் இல்லை."
மானசா, அவள் அம்மாவிடமும் தம்பியிடமும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பதை மாதவன் பார்த்துக் கொண்டே இருந்தான். தன் மனைவியின் சந்தோஷமான முகத்தை இத்தனை நாளைக்கு அப்புறம் இப்பதானே பாக்குறோம் என்று மனதுக்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டான்.
இந்த சந்தோஷம் எல்லாம் தன்னால்தான் தொலைந்தது என்று மனம் வருந்திக் கொண்டான்.
"எந்தா நாயரே என்ன அப்படி பாக்கறீங்க ?"என்று மானசா மாதவனிடம் கேட்டாள். அப்போதுதான் மானசா தன்னைப் பார்த்துக் கொண்டிருந்ததை உணர்ந்தான் மாதவன் .
"ஏய்…. அதெல்லாம் ஒன்னும் இல்லை இத்தனை நாள் இத்தனை சந்தோஷத்தை எங்க ஒழிச்சு வைத்திருந்தாய்ன்னு பார்த்தேன். இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம் அல்லோ?" கண்ணில் நீர் துளியுடன் வினவினான்.
அப்போது மானசா மனசு இளகி,"அதெல்லாம் ஒன்றுமில்லை நாயரே, ஏதோ இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தது, அப்படியே நடந்தது."
அவளை அணைத்துக் கொண்டான் மாதவன்.
கார்த்திக்கும் அவள் அம்மாவும் அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்கள். அவர்கள் அந்நியோன்யத்தை கண்டு அவள் அம்மா பூரித்துப் போனாள்.
"என்ன நாயரே என்ன இது அம்மாவும் கார்த்திக்கும் உண்டு கையை எடுங்கோ!"
தன் கையை எடுக்கவில்லை அப்படியேதான் இருந்தான்.