கீர்த்தனாவிற்கு ப்ளான் வரைய சொல்லித்தருகிறேன் என அவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு அவள் காதில் ரகசியம் சொல்லி அவளை சிரிக்க வைத்து அவளை வேலை செய்ய விடாமல் உல்லாசமாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தவன் சட்டென கதவை லொட் லொட்டென தட்ட தேவா பயந்துபோய் அவளை விட்டு விலகி நின்று யார் என பார்த்தான். அங்கு தாஸ் இருக்கவே பெருமூச்சு விட்டு
”நீயாடா” என சொல்ல தாஸ் உள்ளே வந்தான் கீர்த்தனாவை பார்த்து ஏதோ சைகை செய்ய அவள் தேவாவை பார்க்க
”அது உன்னால இங்க சரியா வேலை செய்ய முடியாது, நீ வீட்ல போய் படம் வரைஞ்சிக்க, இப்ப கிளம்பு நேரமாச்சி சாப்பிட்டு படம் வரை போன்னு சொல்றான்” என சொல்ல கீர்த்தனாவும் உடனே தாஸிடம்
”என் மேல தப்பில்லண்ணா, இவர்தான் நான் வரையறது தப்புன்னு சொல்லி எனக்கு சொல்லித்தரேன்னு இப்படி அப்படி நடந்துக்கிட்டாருண்ணா, நான் அப்பவே சொன்னேன். வீட்ல போய் ஹோம் ஒர்க் செஞ்சி கொண்டு வரேன்னு ஆனா, இவர்தான் கேட்கலைண்ணா” என அவள் குழந்தை போல கொஞ்சிக் கொண்டே சொல்ல தேவா சிரித்தான். தாஸோ அவள் சொன்னதை நம்பாமல் அவளையே முறைக்க அவளோ அவ்விடம் விட்டு ப்ளான் வரைய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.
அவள் சென்றதும் தாஸ் தேவாவின் முன் நின்று சந்தேகமாகப் பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தம் விளங்கியதும்
”அப்படி பார்க்காத தாஸ், சரி உண்மையை சொல்றேன். எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. எவ்ளோ பிடிச்சிருக்குன்னா நான் அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன், நீ என்ன சொல்ற” என கேட்க தாஸ் உடனே தன் பாக்கெட்டில் இருந்த லெட்டரை எடுத்து அவனிடம் நீட்டினான்.
”என்னடா இருக்கு இதுல” என கேட்க அவனோ உண்மை என சைகையில் சொல்ல
”உண்மையா என்ன உண்மை” என கேட்டுக் கொண்டே லெட்டரை பிரித்துப் படிக்கலானான்.