தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 10 - சசிரேகா
வாடகை வீட்டின் முன் தேவா தன் இரு மனைவிகளுடன் நிற்க அவனுக்கு ஆரத்தி எடுத்தார் தாமரை பாட்டி. ஆரத்தி முடிந்த கையோடு சரண்யா ஒதுங்கி நின்றாள். அதைப்பார்த்த தேவாவோ
”என்ன?”
“நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்” என சொல்ல
”சண்டை போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டல்ல அப்புறம் என்ன இப்ப வந்து விட்டுக்கொடுக்கறது போல நடிக்கறியா இப்படியெல்லாம் நீ செஞ்சா மட்டும் உன் மேல எனக்கு நல்ல அபிப்ராயம் வராது வந்து சேரு” என அவளது கையை பிடித்து இழுக்க மூவருமாக ஒரே சமயத்தில் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே சென்றார்கள்.
சின்ன வீடு என்றாலும் தேவையான அனைத்து பொருட்களும் இருந்தது. அங்கிருந்த சோபாவில் சென்று சோர்வாக அமர்ந்துக் கொண்டான் தேவா அவன் பக்கத்தில் கீர்த்தனா வந்து அமர்வாள் என பார்த்தால் தாஸ் வந்து அமர்ந்தான், அவனைக்கண்டு வெறுப்புடன் திரும்ப மறுபக்கம் வைத்தியநாதன் தாத்தா அமர்ந்தார். அவரோ தாமரையையே பார்ப்பதைக் கண்டவன்
”தாத்தா” என காதோரம் கத்த
”ஏன்டா கத்தற”
“எனக்கு இப்படியொரு வாழ்க்கை அமைஞ்சிருக்கு, அதைப்பத்தி கொஞ்சம் கூட கவலையில்லாம தாமரையை நீ சைட் அடிக்கிறியே இது நியாயமா” என கத்த அவரோ
”இப்ப என்ன செய்யலாம்ங்கற வேற வழியில்லையே”
“உன்னை யாரு சரண்யாவை என் தலையில கட்ட சொன்னது”