இன்னிக்கு ஞாயிறு லீவு என்ற காரணத்தால் வீட்டில் அனைவரும் ஜாலியாக தங்கள் அறையில் ஓய்வு எடுக்க சென்றுவிட தாத்தாவிடம் வந்த சோனா
”தாத்தா சிலிண்டர் என்னாச்சி இன்னும் வரலையே”
“இன்னிக்கு சன்டேங்கறதால நாளைக்குதான் வரும் ஒண்ணும் பிரச்சனையில்லைம்மா. காலையில நீ சமையலுக்காக 100 மார்க் வாங்கினதால இன்னிக்கு நீ சமைக்க வேணாம் நாளைக்கு சமைச்சா போதும் நீ போய் ரெஸ்ட் எடு” என சொல்ல சோனாவிற்கு சந்தோஷத்தில் திக்கு முக்காடி போய் அவள் தன் அறைக்கு சென்று ஓய்வெடுக்கலானாள்.
அதைப்பார்த்த மிருதுளா தாத்தாவிடம் வந்தாள்
”தாத்தா நானும் ரெஸ்ட் எடுக்கலாமா”
“எதுக்கும்மா அவளுக்குதான் முழு மார்க் போட்டேன் ஆனா நீ செய்த சமையலுக்கு நான் பாதிதான் போட்டேன் அதனால நீ சமைக்கலாம் உனக்கு என்ன கஷ்டம் ஓவன் இருக்கு அதுல சமைக்க உனக்குதான் தெரியுமே நீ போய் சமைச்சி போடு” என சொல்ல ஏமாற்றமான முகத்துடன் ஓவனில் மட்டும் செய்யப்படும் டிஷ்களை பற்றி கூகுளில் பார்த்துவிட்டு சமைக்க சென்றாள்.
அடுத்து வந்தனாவும் நந்தினியும் விறகடுப்பிற்கு சென்றார்கள். இம்முறை அந்த இடத்திற்கு சுசித்ரா வந்து அமர்ந்தாள். தாத்தாவின் கட்டளைப்படி வந்தனாவின் போக்கை கவனிக்கும் படி சொன்னதை அடுத்து அவளின் கவனம் நந்தினியின் மேல் இருப்பதாக பாவலா காட்டிவிட்டு வந்தனாவை நோட்டம் விட்டாள்.
நந்தினியோ புகை வராமல் இருக்கவே அவள் செய்ய நினைத்த உணவுகளை ரைஸ் குக்கரில் செய்தாள். அதற்காக அவள் பிசிபேளா பாத் செய்தாள்.
வந்தனா காலையில் தன் சமையலை குறை சொன்ன காரணத்திற்காக நந்தினி செய்வதை பார்த்து விட்டு அவளும் குக்கரில் சமைத்தாள். வெஜிடபிள் புலாவ் மற்றும் ரைத்தா செய்தாள்.