வராம இப்படி பாயாசம் மாதிரி வந்துடுச்சி” என சொல்ல
”பரவாயில்லைம்மா இதுவும் நல்லாதான் இருக்கு கவலைப்படாத இதையே எல்லாருக்கும் ஊத்தி வைச்சிடு சாப்பிடட்டும்” என சொல்லிக் கொண்டிருந்தாள்.
சோனா வருவதற்குள் நந்தினி தான் செய்த சமையலை பரிமாறிவிட்டாள். அவர்களும் சாப்பிட்டு முடித்தார்கள்.
நந்தினி அவர்களிடம்
”என் சமையல் எப்படியிருந்திச்சிங்க” என மரியாதையுடன் பணிவாக கேட்க அவர்களும்
”நல்லா சமைச்சிருக்கம்மா கிராமத்து கை பக்குவம் உன் கையில அப்படியே இருக்கு அருமையா சமைச்சிருக்க” என சொல்லவும் அவளுக்கு நிம்மதியானது.
கடைசியாக சோனா நூடுல்ஸ் பாயாசத்தை அனைவருக்கும் வைக்க அதையும் சாப்பிட்டவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது அதில் ஒரு பெண்மணி வாய்விட்டே பாராட்டினார்.
”இதுவரைக்கும் எத்தனையோ பாயாசத்தை சாப்பிட்டிருக்கேன் இந்த மாதிரி ஒரு பாயாசத்தை நான் சாப்பிட்டதில்லை ரொம்ப நல்லாயிருக்கும்மா” என சொல்ல மற்றவர்களும் அதற்கு ஆம் என தலையாட்ட சோனாவிற்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
வந்தவர்கள் சாப்பிட்டு முடித்த களைப்பில் ஓய்வும் எடுத்துக்கொண்டு விளக்கு வைக்கும் நேரம் முன்பே தங்கள் கிராமத்திற்கு செல்ல கிளம்பிவிட்டார்கள். அவர்கள் சென்றதும் தாத்தாவும் ஓய்வெடுக்க சென்றார்.
மதியம் செய்த உணவுகள் முக்கால்வாசி காலியாகிவிட்டது. சோனா நந்தினி செய்த உணவுகள் காலி. வந்தனா மற்றும் மிருதுளாவின் உணவுகள் மட்டும் கால்வாசி இருக்கவே தாத்தாவே அதையே இரவு சாப்பிடுவதாக சொல்லிவிட சமைக்கும் வேலையின்றி 4 பெண்களும் ஓய்வெடுக்கச் சென்றார்கள்.