மிருதுளாவோ முதலில் கோலம் இட்டுவிட்டு அதன் பின்பு கலர் பவுடர் மூலம் கோலத்தை அழகாக்கினாள். என்ன இருந்தாலும் இருவரின் கோலத்தில் நந்தினியின் கோலமே அழகாக இருந்ததாக தாத்தாவும் சரி அவரின் குடும்பமும் சரி ஏன் அந்த கோயிலுக்கு வந்த வெளியாட்களும் சரி பாராட்டினார்கள். அந்த பாராட்டில் நந்தினி உள்ளம் மகிழ மிருதுளாவிற்கு மனதில் நெருப்பு எரிய ஆரம்பித்தது.
பொங்கல் வைக்கும் ஏற்பாடுகள் ஒரு புறம் நடந்து முடிய தாத்தாவும் அங்கு வந்து சேர்ந்தார்.
மற்றவர்களும் வந்துவிட பூஜையும் ஆரம்பித்தது. இம்முறை கையில் காயப்பட்டதால் வந்தனாவால் பொங்கல் வைக்க முடியாத காரணத்தால் அவள் ஒதுங்கி நின்றாள். பாட்டி அருந்ததி சுசித்ரா பவித்ரா மிருதுளா நந்தினி ஆகிய 5 பேருக்கும் 5 பானைகளை தந்தார்கள். அவர்களே அடுப்பு மாதிரி செங்கல் வைத்து கட்டைகளை வைத்து நெருப்பு மூட்டி பானையை வைத்து அரிசி தண்ணீர் ஊற்றி பொங்கல் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் 5 பேருக்கும் யாரும் எந்த உதவியும் செய்யவில்லை அவர்களும் எந்த உதவியையும் கேட்காமல் தாங்களாகவே செய்தார்கள்.
நந்தினி பொங்கல் வைக்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்த ரிஷியிடம் வந்த தாத்தா
“என்னடா பண்ற இங்க”
“ம் நந்தினியை சைட் அடிக்கிறேன் தாத்தா”
“டேய் இது கோவில்டா”
“இருக்கட்டுமே தாத்தா அங்க பாருங்க எவ்ளோ அழகா இருக்கா”
“என்ன சொன்ன“
“இல்லை தாத்தா எவ்ளோ அழகா பொங்கல் வைக்கறாள்னு சொன்னேன்”