‘ஹப்பாடா ஒரு வழியா கிளம்பிட்டான்.’ என்று இருந்தது. ஒரு ஆட்டோ எடுத்திருந்தால் இதற்குள் ரெண்டு முறை சித்தப்பா வீட்டிற்கு சென்று வந்திருக்கலாம்.
செல்லும் திசை ஒன்றும் புரியவில்லை. இப்பொழுதாவது சித்தப்பா வீட்டிற்குத்தான் கூட்டி செல்கிறானா?
மெயின் ரோட்டில் இருந்து ஒரு கிளை சாலையில் திரும்பி மரங்களுக்கு இடைப்பட்ட தார் ரோட்டில் சிறிது பயணம் செய்து கடற்கரை மணலை அடைந்து நின்றது அந்த பிஎம்டபிள்யூ.
அருகினில் அலையாடிய கடல். அதன் மேல் வெள்ளி நிலா வெளிறிப் போய் இவளைப் போல்.
“இ..இங்க எதுக்கு நிறுத்றீங்க…? எனக்கு வீட்டுக்கு போகனும்…”
“அம்மா தாயே…அங்க வீட்ல யாரும் இல்லை…..இப்போ போனா நானும் நீயும் தான் தனியா உட்கார்ந்துட்டு இருக்கனும்….கார்ல கூட வரவே கடிச்சி தின்றுவனோன்னு நடுங்கிட்டு வார்ற….வீட்ல தனியா இருந்தா டென்ஷன்ல என் தலைல எதையாவது தூக்கி போட்டாலும் போட்டுடுவ…..இங்கன்னா எத்தனை பேர் இருக்காங்க பாரு…..உன்ட்ட இருந்து என்னை காப்பாத்த உதவி கேட்டதும் ஓடி வருவாங்கதான….”
இவள் அவன் கழுத்தைப் பிடித்து உலுக்குவது போலவும் அவன் உதவி கேட்டு அலறுவது போலவும் ஒரு காட்சி மனதினுள் விரிய மஹா சந்தோஷம் உதடுகளில் புன்னகையாய் விரிகிறது.
கதவை திறந்துகொண்டு இறங்கிப் போனாள். அலை கரம் தொடமுடியா ஈர மணலில் அவள். சற்று தொலைவில் அவன் அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரம் நீரையும் நிலவையும் பார்த்துக் கொண்டு நின்றாள் அவள். அலையில் குழுவாய் ஆடிய குழந்தைகளின் உற்சாகம் அவளுள்ளும் குமிழி இட்டது. ஆனால்…காலில் இந்த வெட்ஜஸுடன்….? கழற்றி வைத்துவிட்டுப் போனால் திரும்பி வரும்போது இருக்குமா?
“ஹேய்…எஸ்எஸ்….இங்க வா…”
அவன் தான். என்ன இவன் இப்டில்லாம் கூப்டுறான்?
அவனிடமாக வந்தாள். “என் பேருக்கு என்னாச்சு? இது என்ன எஸ்எஸ்? ”
“ம்….நான் சொல்றத வச்சு இங்க எல்லோருக்கும் உன் பேர் தெரிஞ்சு…அதை அவங்களும் சொல்லிட்டு அலைஞ்சாங்கன்னா…?என்னால நீ ஃபேமஸானதா ஆகிடுமே…விடுவனா நான்?...”
சரியான லூசு….”சரி இப்போ எதுக்கு கூப்டீங்க…?”
“கால்ல போட்டுறுக்க ஸ்டூலை கழட்டி போட்டுட்டு போ….சுத்திலும் நண்டா அலையுது அடிக்றதுக்கு ஆகும்…”
“ம்…அதெல்லாம்….” மறுக்க ஆரம்பிக்கவும்தான் உறைக்கிறது…இவனுக்கு இவள் நினைப்பதெல்லாம் புரிகிறதா என்ன?
வெளிறிய வெள்ளி நிலா இருள் சூழ தங்க நிறம் கொண்டது. பெண் மனதும் தான்.
மெல்ல தன் காலணிகளை அவன் அருகில் கழற்றி வைத்துவிட்டு, கையிலிருந்த மொபைலையும் அவனிடம் கொடுத்துவிட்டு, கடலை நோக்கி ஓடினாள். அலையோடு ஒரு ஆட்டம் அரை நாழிகை நேரம்.
கண்கள் திரும்பி அவனைத் தேடியது. அவனைக் காணவில்லை. அவ்வளவுதான் அரண்டு போனாள்.
பைசா என்று எதுவுமின்றி, முழுதும் நனைந்துவிட்ட முழங்கால் தாண்டும் காப்ரியுடன், மொபைல் கூட கையிலின்றி, இருட்டில் ஈசிஆர் பீச்சில் அவள்….அலறிக் கூப்பிட அவன் பெயர் கூட தெரியாது…..
1990 ம் ஆண்டு:
கல்லூரி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, மூட்டை முடிச்சுகளுடன் முழுமூச்சு கனவுகளுடன், காதலனை கைதலம் பற்ற கல்யாண களையுடன் கரிவலம் வந்து சேர்ந்தாள் மலர்விழி.
இன்றுவரை அது அவள் ஊர். இன்னும் சில நாட்களில் அவள் பிறந்த ஊர் என்றாகிவிடும். பிரிவு வலி தோன்றவில்லை. பெறப்போகும் இன்பமே பெரிதாக தோன்றுகிறது.
வீடெல்லாம் புது வர்ணம். தினம் தோறும் ஒரு கூட்டம். இன்றும் பூ வைக்க என்று மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கின்றனர்.
மாப்பிள்ளை வரும் வழக்கம் இல்லாத ஃபங்ஷன் என தெரிந்தாலும் மனம் அவனையே எதிர் பார்க்கிறது.
“கல்யாண சேலை நீ வந்துதான் எடுக்கனுமாம், வசி கண்டிப்பா சொல்லிட்டான்….இது அவனோட செலக்க்ஷன்…டைம் இல்லைங்கறதால உன்னை அட்ஜஸ்ட் செய்துக்க சொன்னான்….” வசீகரனின் அக்கா சொன்னார்.
இளம் பச்சை நிறம் இவள் கண்களுக்கு இத்தனை அழகாய் இதுவரை தோன்றியதே இல்லை.
“என்னாச்சு…..பிடிக்கலையா?” இவள் விழித்ததைப் பார்த்து புரியாமல் கேட்டார் இவளுக்கு நாத்தனாராக போகிறவர்.
“ஐயோ…அப்டி இல்ல அண்ணி…இப்பவே இவ்ளவு அழகான கலரை எடுத்துட்டா…கல்யாணதுக்கு என்ன கலரை செலக்ட் செய்றதுன்னு குழம்பிட்டேன்…”
“சரிதான்….அவனுக்கு மேல இருக்க நீ….”
பே என விழித்தாள் மலர்விழி.
“காதல் பைத்தியத்தைத்தான் சொல்றேன்.”
வெட்க மஞ்சள் கொண்டது கல்யாண பெண் முகம்.
“வசி….சின்ன வயசில இருந்து அம்மா இல்லாம வளந்தவன்…கொஞ்சம் முன்னால அப்பாவும் தவறிட்டாங்க….இப்போதைக்கு உறவுன்னா நானும் என் ஹஸ்பெண்டும்தான் அவனுக்கு….நீ வந்துதான் அவனுக்கு முழு குடும்பம்னா என்னன்னு காமிக்கனும்….அம்மாவுக்கு அம்மாவா, அன்பான…..ம்….இதெல்லாம் நான் உனக்கு சொல்லவே தேவையில்லை….உனக்கே தெரிஞ்சிரும்….அவன் உன் மேல உயிரையே வச்சிருக்கான்….உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பான்….நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாதான் இருப்பீங்க…”
சந்தோஷ காலம்கூட இவ்ளவு மெதுவாக செல்ல முடியும் என்பது இப்பொழுதுதான் மலர்விழிக்கு தெரிகின்றது. நாட்கள் மெல்ல நகர்ந்து இன்று திருமண புடவை எடுக்க மதுரைப் பயணம்.
தினமும் இவள் அருகிலிருக்கும் உறவினர் வீடோ சர்ச்சோ எங்கு செல்லும் போதும் இவளை யாரோ …யாரோ என்ன யாரோ….இவளுடைய கரன் தான் பார்க்கிறான் என உள்ளுணர்வில் தெரிந்தாலும் இவள் பார்வைக்குள் அவன் வரவே இல்லை. இன்று மதுரைக்காவது மாப்பிள்ளையாக வெளியரங்கமாக வருவான் தானே!
படு ஆவலாய் சென்றவளுக்கு பெரும் ஏமாற்றம்.
“நீ ஊருக்கு வந்ததிலிருந்து அவன் ஆஃபீஸ் பக்கமே போகலையில்லையா…அது அங்க பெருசா ப்ரச்சனை ஆகிட்டுது போல….நேத்தே அவசரமா போக வேண்டியதாகிட்டு அவனுக்கு…”
அவனது அக்கா சொல்ல அழவா சிரிக்கவா என்று தெரியவில்லை மலர்விழிக்கு.
போடா….இதுக்கெல்லாம் சேர்த்து உனக்கு இருக்குது….எப்டியும் கல்யாணத்தன்னைல இருந்து என் கைல மாட்டிதான ஆகனும்.
வசீகரனின் சொந்த ஊர் அருகிலிருக்கும் ராஜபாளையம் என்றாலும், சென்னையில் தான் அவன் முக்கிய தொழில்கள் எல்லாம்.
அந்தா இந்தா என்று ஒருவழியாக திருமணம் வந்தேவிட்டது.
மணப்பெண்ணாய் மாலை கழுத்துடன் திருச்சபைக்குள் சிறு பயணம். ஆல்டர் அருகில் அவன் இருப்பான்.
இத்தனை நாள் தன்னவனைக் காண, சேர்த்துவைத்த கோடி ஆசை சுமை கூட்டினாலும், தடையிட்ட வெட்க அணை தாண்ட முடியாமல் தத்தளித்த பெண்மை, தலை நிமிரவிடவில்லை.
அழைத்துச் சென்றவர் அவன் அருகில் நிறுத்துகின்றனர். குனிந்திருந்த பார்வை வட்டத்துக்குள் அவன் ஷூக்களும். சந்தன வர்ண சூட் பேண்ட்ஸும்.
அவன் அருகாமை குளிர் பனி, கொதி வெயில்.
தன் நாக்கு வறண்டிருப்பதை உணர்ந்தாள்.
போடா படாமல் தொடாமல் பாடாய் படுத்த உனக்கு மட்டுமே முடிகின்றது.
திருமண உறுதி மொழி பரிமாற்றம்.
ஆம் என்று உறுதி கூறும் அவன் குரல். கற்பனையில் இவள் கண்டதைப் போல் இல்லை எனினும் கம்பீரத்திற்கொன்றும் குறைவில்லை.
இப்பொழுது இவள் முறை.
உடன்படிக்கையை உயிராய் கருதி உறுதியாய் சொன்னாள்.
இவள் ஊர் முறைப்படி இவள் கழுத்தில் அவன் பொற் சங்கிலியிட வருகிறான்.
குனிந்திருந்த கண்களில் அவன் கோர்ட் பட்டன் வரை தெரிகின்றது.
இப்பொழுது இவள் அவனுக்கு மோதிரமிட வேண்டும்.
இவள் முன்பாக நீண்டன அவன் விரல்கள். வெட்கம் தின்க தின்க கணையாழி இட்டாள் அவன் கறுப்பு விரலில்.
அப்பொழுதுதான் தோன்றியது. அவள் பார்த்த அவன் புகைப் படம் கறுப்பு வெள்ளைப் படம் தான் என்றாலும், அதில் கண்ட அவன் நிறம் இவ்ளவு கறுப்பாக இருக்க முடியாதோ…?
கணவன் என்றாகிவிட்டது……இன்னும் கற்பனையிலேயே காணவேண்டுமா அவனை?
கண் நிமிர்த்தி பார்த்தாள் தன்னவனை. அங்கு புகைப் படத்தில் இருந்த அவன் இல்லை.
இது யாரோ?
{kunena_discuss:876}