'சீக்கிரம் போலிசுக்கு போய் கம்பளைன்ட் குடுப்பா...' ராஜகோபாலன் சொல்ல, தொலைபேசியை வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார் ஸ்ரீதரன்.
'அப்பா... என்னாச்சுப்பா..'
'அக்கா யார்கிட்டேயோ மாட்டிண்டு இருக்கா மா..நேக்கு ரொம்ப பயமா இருக்கு கோதை...'
'அதான் முரளிண்ணா சொன்னரோன்னோ.. இப்போ கூட்டிண்டு வந்திடுவார்பா... நீங்க தைரியமா இருங்கோ..' சொன்னாள் அவள்.....
சரியாக அந்த நேரத்தில்.... உள்ளே நுழைந்தாள் வேதா. அவளுடன் நின்றிருந்தான் முரளி...
'மாமா... உங்க பொண்ணு...' சொன்னான் முரளி. அவன் பார்வையில் ஓராயிரம் கேள்விகள். பல ஆயிரம் பதில்கள்.
சில நொடிகள் பேச வார்த்தைகளின்றி மற்றவர்கள் நிற்க 'தேங்க்ஸ்ண்ணா....' என்றாள் கோதை..
'பரவாயில்லைமா... நான் கிளம்பறேன்...' அவன் நகரப்போக...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே
படிக்க தவறாதீர்கள்...
'அதுக்குள்ளே கிளம்பறேளே.....' என்றார் ஸ்ரீதரன் தயக்கமான குரலில் 'காபி... ஏதாவது சாப்பிட்டு போங்கோ...'
'இல்ல மாமா இருக்கட்டும்... இன்னொரு வாட்டி வரேன்... வேதா ரெண்டு நாளா சரியா சாப்பிட்டிருக்க மாட்டா ஏதாவது சாப்பிட சொல்லுங்கோ...' சொல்லிவிட்டு திரும்பியவன் ஒரு முறை வேதாவின் பக்கம் திரும்பி..
'வரேன்மா..'. என்று சொல்லிவிட்டு நகரந்தான்.
அவன் சென்ற பிறகும் அதே இடத்தில் நின்றிருந்தாள் வேதா... உடலின் ஒவ்வொரு அணுவிலும் ஊசி குத்துவதை போன்றதொரு உணர்வு...... சொந்த வீடு கூட திடிரென அந்நியமாகி விட்டதை போன்றதொரு உணர்வு.... இறுக மூடிய கண்களை தாண்டி கண்ணீர் வழிந்துக்கொண்டிருந்தது நடந்தவை எல்லாம் அவள் மனத்திரையில் ஓடி ஓடி மறைந்துக்கொண்டிருந்தன
நேற்றிரவு அந்த கைப்பேசி அவள் கையில் கிடைத்தபோது... சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனாள் அவள்.
'யாரை அழைப்பது??? யாரை அழைப்பது புரியவில்லை அவளுக்கு. அப்பாவையோ, கோதையையோ இந்த நேரத்தில் அழைப்பது சரி இல்லை என்று தோன்ற... சட்டென மனதில் வந்தது அந்த எண்... முரளியின் எண்...
உடல் சோர்வு அவளை அழுத்த ... மறுபடியும் தலை சுற்ற ஆரம்பித்திருந்தது அவளுக்கு. மறுபடியும் மயங்கி விடுவேனோ.??? மடமடவென அழுத்தினாள் முரளியின் எண்ணை...
போன் ஒலித்துக்கொண்டே இருக்க அழைப்பை ஏற்கவில்லை முரளி அந்த நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தனர் முரளியும், கோகுலும்.
இரண்டு மூன்று முறை முயல, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது வேதாவுக்கு. அந்த நொடியில் ஏற்கப்பட்டது அழைப்பு.
'ஹலோ....' என்றது மறுமுனை. அவனுக்கு கோதையின் இந்த எண் தெரிந்திருக்க நியாயம் இல்லையே!!!
'மு... முரளி... '
'எஸ்...'
'நா ... நான் வேதா பேசறேன்... நான்... நான் எங்கே இருக்கேன்னு தெரியலை முரளி... நான் இங்கே இருட்டிலே... கார்லே... தனியா... ' அதோடு மயங்கிவிட்டிருந்தாள் அவள். அதன் பிறகு நடந்தவை எல்லாம் இப்போது முரளி சொல்லும்போதே தெரிய வந்தது அவளுக்கு.
அதன் பிறகு இரண்டு மூன்று முறை அவன் முயல . அவள் அழைப்பை ஏற்காமல் போக, அவனது நான்காவது முயற்சியில் அழைப்பை ஏற்றது மாயக்கண்ணன்.
'ஹலோ...'
'ஹலோ... திஸ் இஸ் முரளி...'
'முரளி..... நீங்க கோகுல் பிரதர்தானே???? நான் இன்ஸ்பெக்டர் மாயக்கண்ணன்.
'கண்ணன்... நீங்க எப்படி அங்கே... வேதா???'
'யா.. வேதா என் பக்கத்திலே தான் இருக்காங்க. பார்த்துட்டோம் முரளி. மயக்கமா இருக்காங்க. இந்த கார் கொஞ்ச நேரம் முன்னாடி இங்கே இருந்த ஒரு டோல் கேட் கிராஸ் பண்ணி இருக்குன்னு எனக்கு மெசேஜ் வந்தது. அதான் ட்ரேஸ் பண்ணி இங்கே வந்தேன். ரெண்டு பேர் இவங்களை கடத்த முயற்சி பண்ணி இருக்காங்க முரளி. இவங்க எப்படியோ சமயோசிதமா தப்பிச்சு இருக்காங்கன்னு தோணுது... ஒகே நான் இவங்களை ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன்...'
'அவனுங்க ரெண்டு பேர்???'
'அவனுங்களை பத்தி நீங்க ஏன் கவலை படறீங்க??? அவனுங்க இனிமே ஜெயிலிலே இருந்து வெளியே வராத மாதிரி நான் பார்த்துக்கறேன்' என்றான் மாயக்கண்ணன்.
அதன் பிறகு கோகுலிடம் கூட எதுவும் சொல்லவில்லை முரளி. வேதா கிடைத்துவிட்டதை அறிந்தால் இந்த திருமண திட்டத்தை அவன் தள்ளி வைக்க கூடும் என்று ஒரு எண்ணம் முரளிக்கு.