அடுத்த நாளிலிருந்து அவளிடம் தினமும் ஏதோ ஒரு கேள்வி கேட்பது போல், அவளை படிக்க வைத்தான் அவன் சுலபமாக…
இரண்டு மூன்று மணி நேரம் பாடமே கண்ணாக நடக்கும் அவனின் வகுப்பு, இறுதியில் முடியும் போது ஏனோ காதலாக முடிந்து விடும்…
இப்படியே நாளும் செல்ல, அவளுக்கு பரீட்சையும் வந்தது…
பத்து மணிக்கு பரீட்சை ஆரம்பம்… ஜானவிக்கு ஒரு இடத்திலும், ஜனனிக்கு ஒரு இடத்திலும் பரீட்சை எழுத வேண்டிய நிலை வர, ஜனனியை தன்னுடன் அழைத்துச் சென்றார் ஜானவியின் தந்தை… அதோடு ஜானவியை அர்னவிடத்தில் அழைத்து செல்ல சொல்ல, அவனா மறுப்பான்?...
அவனுடன், அவனது பைக்கில் அதுவரை அவள் சென்றதில்லை… அன்று முதல் முறையாக அவனுடன் பைக்கில் பயணம்…
எட்டு மணி போல வீட்டிலிருந்து அவள் கிளம்புகையில் அவளை அழைத்து செல்ல வந்தான் அர்னவ்…
“வாடா… அங்க சீக்கிரம் போயிடலாம்… ஹாஃப் அன் அவர் தான் ஆகும்… அங்க போய் கூட வெயிட் பண்ணிக்கலாம்… பிரச்சினை இல்ல… வா…”
அவன் இயல்பாக அழைக்க, அவள் சற்றே தயங்கி நின்றாள்…
பைக்கை உதைத்து ஸ்டார்ட் செய்தவன் திரும்பி பார்க்க, அவள் சற்று தூரத்தில் நிற்பது புரிந்தது…
“ஹேய்… என்னாச்சுடா?... வா…”
“இல்ல… வந்து…” அவள் இழுக்க, அப்போது தான் உறைத்தது அவனுக்கும் அவள் தயங்கி நிற்பதற்கான காரணம்…
“என்னை இப்போ உன் காதலனா பார்க்காத…. உன் வருங்கால கணவனாகவும் பார்க்காத… உன் ஃப்ரெண்டா பாரு… உனக்குப் பிடிச்ச, உன்னோட சுக துக்கத்துல பங்கெடுத்துக்குற ஒரு நல்ல ப்ரெண்டா மட்டும் பாரு… தயக்கம் போயிடும்…”
பைக்கை விட்டு இறங்கி வந்தவன், அவள் விழி பார்த்துக்கூற, அவளும் அவன் சொன்னதை உள்வாங்கினாள்.... பின் சில நொடிகள் கழித்து, “போகலாம்… கார்த்தி…” என அவனின் பின்னே அமர்ந்தாள் பைக்கில்…
வரும் வழி எங்கும் அவளது கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக்கொண்டே வந்தான் அவன்…
பரீட்சை நடக்கும் பள்ளியை இருவரும் வந்தடைய, அவள் பைக்கிலிருந்து இறங்கி உள்ளே சென்றாள்… அவனும் பின்னேயே செல்ல, இருவரும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர்…
அவளைப் போலவே நிறைய பேர் எழுத வந்திருந்தனர்… கூடவே அவர்களுக்கு துணையாக, தகப்பனோ, தோழனோ, அன்னையோ, சகோதரியோ, சகோதரனோ உடன் வந்திருந்தனர்…
சற்று நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை… பின் மெதுவாக அவனே ஆரம்பித்தான்…
“சகி……”
அவன் மெதுவாக அழைக்க, அவள் அவனைப் பார்த்தாள்…
“பயப்படாம நிதானமா எழுது சரியா?... நீ படிச்சதுக்கு கண்டிப்பா இந்த எக்ஸாம்ல பாஸ் பண்ணியே தீரணும்…”
“ம்ம்ம்….”
“இதுக்கு முன்னாடி பண்ணின எந்த வேலையும் இந்த எக்ஸாம்ல நீ பண்ணக்கூடாது….”
அவன் உறுதியாக சொல்ல, அவள் அவனை புருவம் உயர பார்த்தாள்…
“ஜனனி சிஸ் எங்கிட்ட எல்லாம் சொல்லிட்டாங்க…”
அவள் விழி விரித்து பார்க்க,
“ப்ளீஸ்… சகி… உங்கிட்ட கெஞ்சி கேட்கிறேன்… இதுவரை செஞ்ச தப்பை இனியும் பண்ணக்கூடாது நீ… அது என் மேல ஆணை… சரியா?...”
அவன் தெளிவாக கேட்க, அவள் கண் கலங்க சரி என்றாள்…
“லூசு… ஏண்டி அழற?... நல்லபடியா எழுதிருக்கேன்… இந்த வேலை கிடைச்சிடும்னு… எங்கிட்ட வந்து சொல்லணும் சரியா எக்ஸாம் முடிஞ்சதும்?...”
“சரி கார்த்தி…” என்றவள் மெல்ல சிரிக்க, அவனும் சிரித்தான்… பின் அவள் பரீட்சை எழுத வகுப்பறைக்கு செல்ல, அவன் அவளுக்காக காத்திருந்தான் அந்த பள்ளி வளாகத்திலேயே…