37. புத்தம் புது காலை - மீரா ராம்
நான்கு மாதத்திற்குப் பிறகு,
“வாங்க… வாங்க….”
சிரித்த முகத்துடன், தன் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்றாள் ஜனனி…
“இப்போவாச்சும் உனக்கு வீட்டுக்கு வரணும்னு தோணுச்சே… அதுவரை சந்தோஷம்….”
ஜனனி கேலியாக சொல்ல,
“நீ மட்டும் என்னவாம்?... நானாச்சும் இன்னைக்கு வந்தேன்… நீ எப்போ அங்க வந்த?... சொல்லுடி ஜன்னி… சொல்லு…..” என பதிலுக்கு மல்லுக்கு நின்றாள் ஜானவி….
“இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்… ஆனாலும் உன் வாய் கொழுப்பு குறையலைடி…”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
படிக்க தவறாதீர்கள்..
ஜனனி புன்னகையுடன் கூற, அவளை சைகையில் அதட்டினாள் ஜானவி செல்லமாக…
“ஏன் அர்னவ்… இதையெல்லாம் நீ கேட்கவே மாட்டியா?.... அவபாட்டுக்கு அராஜகம் பண்ணிட்டிருக்குறா…. நீயும் தட்டிக்கேட்காம வேடிக்கைப் பார்த்துட்டிருக்குற?...”
“என்ன சிஸ் செய்யுறது?... அவளுக்கு இருக்குற ஒரே ஒரு ஃப்ரெண்ட் நீங்க… பின்ன உங்ககிட்ட தான வம்பெல்லாம் செய்ய முடியும்?...”
அவன் சட்டென அந்தர்பல்டி அடிக்க,
“அது சரி தான்… ஜாடிக்கேத்த மூடிதான்ப்பா நீ… நல்லா வருவ… நீ…”
ஜனனி சிரித்துக்கொண்டே கூற, அர்னவின் முகத்திலும் புன்னகை மலர்ந்திருந்தது…
“ஏண்டி… வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு காபி போட்டு கொடுக்கணும்னு உனக்கு தோணுச்சா?...”
ஜானவி குறைப்பட்டுக்கொள்ள,
“காபி தான… போட்டுட்டா போச்சு….” என்ற ஜனனி விரைந்து சென்று ஒரு காபி போட்டு எடுத்து வந்து அர்னவிடம் நீட்டினாள்…
“வாவ்… சிஸ்… காபி மணம் ஆளை தூக்குது போங்க….”
“ஆமா… என் தம்பிக்காக ஸ்பெஷலா போட்டது இல்லையா.. அதான்…”
“ஓ… அப்போ செமயா தான் இருக்கும்… கொடுங்க….”
அவன் சொல்லிக்கொண்டே காபியை வாங்கி குடிக்கப் போகும் வேளை,
“ஹேய்… இதெல்லாம் அநியாயம்டி… ஃப்ரெண்ட் எனக்கு காபி இல்லை… உன் தம்பிக்கு மட்டும் காபியா?...”
“ஆமா… அப்படித்தான்….”
“அப்போ எனக்கு காபி?...”
“வேணும்னா போய் போட்டுக்குடி… போ…..”
“அடியே… உன்னை…..”
ஜானு எழுந்து ஜனனியின் மேல் பாய போக, அர்னவ் இடையிட்டு தடுத்தான்…
“ஹேய்… ஏண்டி… சிஸ் கிட்ட சண்டைக்குப் போற?...”
“பின்ன என்ன?... அவ மட்டும் ஓரவஞ்சனை பண்ணுறா?... இதெல்லாம் சரியா?...”
ஜானவி கோபமாக முகம் தூக்கி வைத்துக்கொள்ள, ஜனனியோ விழுந்து விழுந்து சிரித்தாள்…
“பாருங்க நான் இங்க கோபத்துல இருக்குறேன்… உங்க அக்கா சிரிச்சு என்னை வெறுப்பேத்துறா….”
ஜானவி தன் பற்களைக் கடித்துக்கொண்டே கூற, ஜனனியின் சிரிப்பு மேலும் அதிகரித்தது…
“வேண்டாம்டி… என்னை கொலைகாரி ஆக்கிடாத சொல்லிட்டேன்…”
ஜானவி முகத்தினை உர் என்று வைத்துக்கொண்டு ஜனனியை மிரட்ட,
“சிஸ்… ஏன் இப்படி?... எதுக்காக இப்படி சிரிக்குறீங்க?...”
“உனக்குத் தெரியாது அர்னவ்… எத்தனை நாள் இவ என்னை ஜன்னி ஜன்னின்னு சொல்லி வெறுப்பேத்திருக்கா தெரியுமா?... அதான் இன்னைக்கு ஒருநாள் கொஞ்ச நேரம் நான் அவளை வெறுப்பேத்தலாம்னு நினைச்சேன்…”
அவள் சொல்லி முடித்ததும், அர்னவும் இப்போது சிரிக்க,
“போடி… ஜன்னி… ஜன்னி… ஜன்ன்ன்ன்ன்ன்னீ…………………..”
என கத்திக்கொண்டே நாலு அடி அடித்தாள் ஜானவி ஜனனியை…
அடித்து முடித்துவிட்டு, அவளும் அமர்ந்து சிரிக்க ஆரம்பிக்க, ஜனனி ஜானவியையேப் பார்த்தாள் இமை அகற்றாமல்…
“எதுக்குடி என்னை இப்படி பார்க்குற?...”
“நீ இப்படி எப்பவுமே சிரிச்சிட்டே இருக்கணும் ஜானு… என் ஆசையெல்லாம் அது மட்டும் தான்…”
ஜனனி முகம் எங்கும் ஒளிர கூற, ஜானவியோ ஜனனியின் அருகில் வந்து அமர்ந்தாள்…