அவள் போனை வைக்கப் போக, அவன் அமைதியாக இருந்தான்… அவனின் அமைதி அவளுக்குள் சொல்லிடாத உணர்வை தோற்றுவிக்க, இப்போது அவள் அமைதியாக இருந்தாள்…
“சரிடா… நான் வைக்கிறேன்… டேக் கேர்….”
அவன் சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு காத்திருக்க, அவளுக்கு அந்த பிரிவு ஏனோ பிடித்தமாயில்லை….
இருந்தாலும் வலுக்கட்டாயமாக குரலை வெளிக்கொண்டு வந்து, சரி என்றதும், அவனும் அவளின் மனநிலை அறிந்தார் போல போனை வைத்தான் உடனேயே….
அவளின் அழைப்பை அவன் துண்டித்ததும், சற்று நேரம் போனையேப் பார்த்திருந்தவனின் மனதில் அவள் வீட்டிலிருந்து கிளம்பும்போது கூறிய சொற்கள் நினைவு வந்தது…
“போங்க… அதெல்லாம் போகாது… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமா போறது எனக்குத்தான தெரியும்…”
“ஹ்ம்ம்…. நான் தான் கல்யாணத்தை தள்ளிப்போட சொல்லிட்டேன்… இல்லன்னா, இந்நேரம்……” என அவளிடம் சொல்ல இருந்த தன் மட்த்தனத்தை அவனே நொந்து கொண்டான்…
“கொஞ்சம் விட்டிருந்தா சொல்லியிருப்படா அர்னவ் நீ…. நல்ல வேளை, சொல்லாம விட்டுட்ட… இந்த ஒரு வார்த்தையை நீ விட்டிருந்தா, அவ ஈசியா கண்டுபிடிச்சிருப்பா… தேங்க் காட்… எஸ்கேப் ஆகிட்ட நீ…”
வாய்விட்டு அவனே சொல்லிவிட்டு கட்டிலில் சரிந்தான்…
அன்று மருத்துவமனையில் நடந்த நிகழ்வுகளையும், அதன் பின்னர் இன்று வரை நடந்த சம்பவங்களையும் அவன் மனம் அசைபோட துவங்கியது மெல்ல…
சரியாக நான்கு மாதத்திற்கு முன்பு….
சிரித்த முகத்துடன் ஜானவி அனுமதிக்கப்பட்டிருந்த அறையினை விட்டு வெளியே வந்தவன், சரயூ அங்கே அவனுக்காக காத்திருப்பதைக் கண்டு அவளிடம் சென்றான்…
“அம்மா கூப்பிடுறாங்க… வா….” என அவள் அழைக்க அவனும் அங்கே வந்தான்….
“இப்போதான்ப்பா… அப்பா போன் பண்ணினாங்க… கல்யாணத்தை அடுத்த மாசமே வச்சிக்கலாம்னு நாள் குறிச்சி கொடுத்துருக்காங்களாம்… நிறைய வேலை இருக்குறதால, அப்பா உன்னை இப்பவே அங்கே வர சொன்னார்… கிளம்புப்பா…”
வாசந்தி சொல்ல, அவனோ சற்று நேரம் திகைத்து நின்றான்…
“இன்னும் ஒரு மாசத்துலயா?... என்னம்மா சொல்லுறீங்க?....”
“ஆமாடா… நாளெல்லாம் குறிச்சாச்சு….”
“அம்மா… கல்யாணத்தை கொஞ்ச நாள் தள்ளி போடலாமா?... ப்ளீஸ்….”
அவன் சொன்னதைக் கேட்டு பெண்கள் மூவரும் திகைத்து நிற்க, முதலில் சுயநினைவுக்கு வந்தவள் சரயூ தான்…
“ஏண்டா நீ மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்குற?... பொண்ணு நாளைக்கே பார்க்கணும்னு சொன்ன… சரின்னு பொண்ணையும் பார்க்க வந்தா அந்த பொண்ணே பெரிய டுவிஸ்ட்…. இதுல கல்யாணத்தை உடனடியா முடிக்கணும்னு பெரியவங்க போய் நாள் குறிச்சா, நீ கல்யாணத்தை தள்ளி போடுன்னு சொல்லுற?... கொழுப்பாடா உனக்கு?...”
சரயூ பொரிந்து தள்ள, அவனோ சரயூவை பாவமாக பார்த்தான்…
“சிஸ்… ப்ளீஸ் சிஸ்… எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி சொன்னா நான் என்ன தான் பண்ணுறது?....”
“என்னடா என் பக்கம் பந்தை தூக்கிப் போடுற?...”
“உங்களுக்கு நல்லாவே தெரியும்… மாமாவோட ஆசை எல்லாம் ஜானவிக்கு நல்ல வேலை கிடைக்கணும் அப்படிங்கிறது தான்…. அதுக்காகத்தான் அவளும் முயற்சி பண்ணினா…. இப்போ அது அவ கை சேராமலே, நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா, அவ மனசுல அது ஆறாத வடு ஆகிடும்… மாமா மனசும் கஷ்டப்படும்… அதனால அவளுக்கு முதல்ல வேலை கிடைக்கட்டும்… அப்புறம் எங்க கல்யாணம் நடக்கட்டும்….”
அவன் வார்த்தைகள் கேட்டு, வாசந்தி யோசிக்க ஆரம்பிக்க, சரயூவோ அர்னவினை முறைத்தாள்…
எதுவும் பேசாது அமைதியாக நின்றிருந்த ஜானவியின் அன்னையிடம் வந்த அர்னவ்,
“நீங்க சொல்லுங்க அத்தை… நான் நினைக்குறது தப்பா?... கல்யாணத்துக்கு பிறகு ஜானவி வேலைக்கு போகணுமா வேண்டாமான்னு நான் முடிவு பண்ண நினைக்கலை… ஆனா, உங்க விருப்பமும், மாமா விருப்பமும் அவ தன்னோட சொந்த கால்ல நிக்கணும் அப்படிங்கிறது தான்… அதை வீணடிக்க நான் விரும்பலை அத்தை… அதனால அவளுக்கு வேலை கிடைக்கட்டும்… அப்புறம் எங்க கல்யாணத்தை நடத்துங்க… எனக்கு பரிபூரண சம்மதம்….” என கூற, ஜானவியின் அன்னையோ ஒன்றுமே பேசவில்லை…
“என்ன அத்தை… நான் சொன்னதுல உங்களுக்கு விருப்பமில்லையா?....”
அவன் கேட்டுவிட்டு அவரைப் பார்க்க, அவரின் கண்கள் எங்கும் நீர்….