“அத்தை… என்னாச்சு?...............”
“இல்ல மாப்பிள்ளை… எங்களுக்குப் பிறகு, அவளுக்கு வரப்போற புருஷன் எப்படிப்பட்டவனா இருப்பானோன்னு பயந்து போய் தான், அவ தன்னோட சொந்த கால்ல நிக்கணும்னு நாங்க ஆசப்பட்டோம்… என்ன தான் பார்த்து பார்த்து கல்யாணம் செஞ்சு வைச்சாலும், சில நேரத்துல, சில இடத்துல, தப்புகள் நடக்கத்தான் செய்யுது… அது அவரவர் வாங்கின வரம்னு சொல்லுறதா?... இல்லை அவங்களோட விதின்னு சொல்லுறதா?... எனக்குத் தெரியலை… ஆனா, எல்லா பெத்தவங்களும் தன் பொண்ணு சந்தோஷமா காலம் பூரா கஷ்டப்படாம வாழணும்னு தான் ஆசப்படுவாங்க… அதுதான் அவங்களோட எண்ணமாகவும் இருக்கும்… நீங்க அவ வாழ்க்கையில வர்றதுக்கு முன்னாடி வர, அவளுக்குன்னு ஒரு நிரந்தர வேலை இருக்கணும்னு நாங்க நினைச்சோம்… அதனாலயே அவளை பரீட்சை எல்லாம் எழுத சொன்னோம்… எங்க பொண்ணுக்கும் அதுல விருப்பம் உண்டு… பெத்தவங்க ஆசை தான் அவ ஆசையுமாவும் இருந்துச்சு… வெளியே இருந்து பார்க்குறவங்களுக்கு எங்க ஆசையை அவ மேல நாங்க திணிக்கிறதா தான் படும்… அது அவங்க பார்வை… ஆனா, எங்களுக்கு அது தப்புன்னு படலை… ஏன்னா, நாங்க இரண்டு பேரும் வளர்ந்த விதம் அப்படி… அந்த கஷ்டம் எங்க பொண்ணும் படக்கூடாதுன்னும் நினைச்சோம்… எங்க காலத்துக்குப் பிறகு, நாளைக்கே அவளுக்கு ஒரு பிரச்சினைன்னா, வெளியில இருந்து பார்த்தவங்க யாரும் அவ கூட இருந்து அவளை தாங்கி நிக்கப்போறது இல்லை… அவ பார்க்குற உத்தியோகம் மட்டும் தான், அவளை விழாம பிடிச்சி நிறுத்தும்… பணமாகவும் சரி… உறவாகவும் சரி…. உத்தியோகம் புருஷ லட்சணம்னு சொல்லுவாங்க… அது ஆணுக்கு மட்டுமில்ல பொண்ணுக்கும் வேணும்னு நாங்க நினைச்சோம்…. அது தப்புன்னு மத்தவங்க சொன்னா, சொல்லிட்டு போகட்டும்… அதப்பத்தி எங்களுக்கு கவலை இல்லை… ஏன்னா அவங்க யாரும் எங்க பொண்ணு கூட இருக்கப்போறதில்லை… இதுதான் எங்களோட எண்ணமா இருந்துச்சு இத்தனை வருஷமா… ஆனா, கல்யாணம் கூட இன்னும் முடியாத நிலையில, அவளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கணும்னு நினைச்சு கல்யாணத்தை தள்ளிப் போடணும்னு நினைக்குறீங்களே… அதுவும் எங்க இரண்டு பேர் விருப்பத்தை மதிச்சு… இப்படி ஒரு மாப்பிள்ளை யாருக்கு கிடைக்கும்?.... சத்தியமா எங்க பொண்ணு வருங்காலத்துல சந்தோஷமா இருப்பா… அந்த நம்பிக்கை எனக்கு இன்னைக்கு வந்துட்டு…. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவளுக்காக நீங்க தவிச்சப்போ, அவளை விரும்புற மாப்பிள்ளை, அவளை நல்லாப்பார்த்துக்குற மாப்பிள்ளை, அவளுக்கு ஒன்னுன்னா துடிச்சுப்போகுற மாப்பிள்ளை, அவளுக்கு கிடைச்சிருக்கார்ன்னு சந்தோஷப்பட்டேன்… ஆனா, இப்போ என் மனசு சொல்லுது, என் பொண்ணு உங்களை கல்யாணம் பண்ணிக்க கொடுத்து வச்சிருக்கணும்னு….”
அவர் நா தழுதழுக்க, உணர்ச்சி மிகுதியாக சொல்ல, வாசந்திக்கோ, கண்கள் கலங்கி தொண்டை அடைத்தது… சரயூவோ ஜானவி அன்னையின் வார்த்தைகளில் வார்த்தை வராது நின்றாள்….
“எல்லாரும் நல்லா இருக்கணும்னு நான் வேண்டுற அதே நேரத்துல, என் பொண்ணும் நல்லா இருக்கணும்னு தான் நான் வேண்டிப்பேன்… கோடி பேருக்காக மனசு வேண்டினாலும், தன் வயித்துல பிறந்த பிள்ளைக்காக பெத்தவ மனசு வேண்டுறது தனிதான்… யாரும் கெட்டுப்போகணும்னு நாங்க நினைக்கலை… அதே நேரத்துல, மத்தவங்களைப் போல எங்க பொண்ணும், தனக்குன்னு ஒரு வேலை, அன்பான புருஷன், குழந்தைன்னு வாழணும்னு தான் நாங்களும் ஆசப்பட்டோம்... ஏன்னா, நானும் சரி… என் கணவரும் சரி… சராசரி பெத்தவங்க தான்… தம்பி…. சராசரி பெத்தவங்க தான்…..”
கண்ணீர் வழிய, ஜானவி அன்னை கூற, அர்னவோ அவரின் கைகளைப் பிடித்தான் ஆதரவாக…
“ஒரு பொண்ணை பெத்தவ மனசு இப்படித்தான் இருக்கும்ணு ஆணி அடிச்ச மாதிரி சொல்லீட்டீங்க சம்பந்தி… என் பையனுக்காக உயிரை விடத் துணிஞ்ச என் மருமக கிடைக்க அர்னவ் கொடுத்து வச்சவனா?... இல்லை அவ விருப்பமும், அவளைப் பெத்தவங்க விருப்பமும் நிறைவேறணும்னு கல்யாணத்தை தள்ளிப்போடுற என் பையன் கிடைக்க, ஜானவி கொடுத்து வச்சவளான்னு எனக்கு தெரியலை சம்பந்தி… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்… இரண்டு பேரையும் பிள்ளையா பெற நாம கொடுத்து வச்சவங்க தான்…. கவலையேப் படாதீங்க, இரண்டு பேரும் வாழ்க்கையில சந்தோஷமா இருப்பாங்க எந்த குறையுமே இல்லாம… என் மருமகளுக்கும், என் பையனுக்கும் அந்த கடவுள் அவங்க பொறந்தப்பவே முடிச்சு போட்டுட்டான்… அது கல்யாணமா என்னைக்கு முடியணும்னும் கடவுள் தீர்மானிச்சு வச்சிருப்பார்… அதனால, கவலை எல்லாம் ஒதுக்கி வச்சிட்டு, ஜானவிக்கு சீக்கிரம் வேலை கிடைக்கணும்னு வேண்டிப்போம் நாம எல்லோரும்…”
வாசந்தி தன் மனதிலிருந்து கூற, அவரை புன்னகையுடன் பார்த்தார் ஜானவியின் அன்னை…
“அதான் உங்க சம்பந்தி சொல்லிட்டாங்கள்ள… இன்னும் ஏன்ம்மா கண் கலங்கிட்டு?... விடுங்கம்மா… அழாதீங்க…”
சரயூ ஜானவியின் அன்னையை சமாதானம் செய்ய,
“கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளி போட முடியாதும்மா…. இந்த வேலையை காரணமா காட்டி…” என்றார் அவர்…
சற்று நேரம் யோசித்தவனின் மூளைக்குள் விளக்கெரிய,
“ஜானவிக்கு வேலை கிடைக்குறது என் பொறுப்பு அத்தை… நீங்க வருத்தப்படாம இருங்கத்தை… ப்ளீஸ்…”
அர்னவ் அவரிடம் உறுதியாக சொல்ல, மூவரும் வியப்புடன் பார்த்தனர் அவனை…
அதன் பின்னர், அர்னவ் கூறியபடி, கல்யாணத்தை சில மாதங்கள் தள்ளிப்போட்டனர்…. ஜானவி ஏன் என்று கேட்டால், ஜாதகத்தில் அப்போது தான் முடிக்கவேண்டும் என்றிருக்கிறது என கூறிவிடுங்கள் என்றான் அனைவரிடமும்…
“எல்லாம் சரி தான் தம்பி… ஆனா, அவளுக்கு வேலை எப்படி சீக்கிரம் கிடைக்கும்….”
“இத்தனை நாள் அவ சரியா பரீட்சை எழுதாம போனதுக்கு நானும் ஒரு காரணம் மாமா… அதனால இனி அது என் பொறுப்பு… நீங்க கவலைப்படாதீங்க எதுக்கும்…”
ஜானவியின் தந்தையிடம் பொறுப்பாக பதில் கூறியவன், அதே பொறுப்புடனே நடந்தும் கொண்டான் அடுத்து வந்த நாட்களிலும்…