“இல்லை இந்திரரே… தாம் மகாதேவர் மேல் கூறூம் குற்றச்சாட்டு தவறானது… ஏனெனில் அவர் அசுரர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக தாம் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல… அவர் பாரபட்சம் பார்ப்பவரும் அல்ல… அவர் அனைவரையும் சரிசம்மாக நடத்துபவர்… எவர் ஒருவர் பக்தியுடன் மனதினை ஒருநிலைப்படுத்தி தியானிக்கின்றாரோ, அவர் தேவராய் இருந்தாலும் சரி, அசுரராய் இருந்தாலும் சரி, அவர் எவரிடத்திலும் பாகுபாடு பார்ப்பதில்லை…”
காசியப்பர் தன் கூற்றினை வலுவாக முன்வைத்ததும்,
“அவர் வரங்களை வழங்குவதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை மகரிஷி… ஆனால், அவர் அத்தகு வரங்களை வழங்குவதற்கு முன், அதிலுள்ள நன்மை, தீமைகளை ஆராய்ந்து அறிந்து தான் வழங்குகின்றாரா?... அப்படி அவர் அதனை உணராமல் வரத்தை வழங்கினால், அது சிந்திக்க வேண்டிய விஷயம் அல்லவா?...” என்றான் இந்திரன்..
“இப்பிரபஞ்சத்தின் நன்மையே எனது முதல் கடமை… இந்திரதேவனின் கவலை சரியானது தான்.. அதற்கு ஒரு தீர்வு காணத்தான் வேண்டும்… எனினும், நாம் இப்பொழுது, எந்தவித விரோதங்களுக்கும் இடமளித்தல் நன்றன்று… தேவ-அசுர்ர் இடையே தொடர்ந்து நடந்து வரும் யுத்தமானது ஒரு நிரந்தர தீர்வை பெற்றிட வேண்டுமெனில், இம்முறை நடக்கவிருக்கும் மகா மண்டல சபை தனில், சுக்ராச்சாரியாருக்கும் அழைப்பு விடுக்கலாம்.. அதுமட்டுமின்றி, இன்னொரு சிறப்பு விருந்தினரையும் அழைத்திடல் வேண்டும்… ஏனெனில் அவர் வராவிட்டால், என் நோக்கம் வெற்றி அடையாது…”
பிரஜாபதி தெளிவாக கூற, அவரின் முகத்தினையே ஆராய்ந்தனர் மற்றவர்களும், அந்த சிறப்பு விருந்தினர் யாராக இருக்கும் என…
“அவர் வேறு யாருமில்லை… மகாதேவன்….” என பிரஜாபதி அழுத்தமாக கூற, மகரிஷி பிருகு தன் ஆசனத்திலிருந்து எழுந்தே விட்டார்…
“மகாராஜா, நான் தற்போது செவிமடுத்தது, ஏதோ பிரம்மை என நினைக்கிறேன்…. தாம் கூறியது மகாதேவரின் பெயர் அல்ல, வேறு பெயர் என நினைக்கிறேன்…” என அவர் கூற,
“நான் கூறிய வார்த்தைகளைத் தான் தமது செவிகள் உள்வாங்கியது மகரிஷி பிருகு… எனது நா சரியாகத்தான் உரைத்தது… வாய் தவறி வார்த்தைகளை சிதற விடுபவன் அல்ல இந்த தட்சன்…” என்றார் பிரஜாபதி சற்றே குரல் உயர்த்தி…
“தாம் தான், இதற்கு முன் நடந்த சபை தனில் மகாதேவருக்கு இடமளிக்கவோ, எவ்வித முக்கியத்துவமும் அளித்திடவோ கூடாது என அறிவித்திருந்தீர்கள்… அவ்வாறு இருக்க, இன்று தாம்?...” என கேள்வியுடன் நிறுத்திய இந்திரனுக்கு சற்றும் சளைக்காமல் பதில் கூறினார் பிரஜாபதி…
“ஆம்… மகா மண்டல சபையில் அந்த மகாதேவனுக்கு இடமளிக்கக்கூடாது என நான் தான் ஆணையிட்டேன்… அதனை நான் மறுக்கவில்லை…”
“ஆயினும் பிரஜாபதி, மகாதேவனை அழைத்து நாம் ஆலோசனை செய்வதற்கு பதில், அசுரரோடு சமரசப் பேச்சுவார்த்தை செய்வதே உகந்தது…” என மகரிஷி பிருகு கூற,
“நான் மேற்கொண்ட தீர்மானத்தில் நம்பிக்கை வேண்டும் மகரிஷி பிருகு.. இத்தீர்மானம் நான் மேற்கொண்டதால் எவ்வளவு சந்தோஷம் அடைகின்றேனோ அதையே தாமும் அடைவீர்கள் மகரிஷி… அதில் தங்களுக்கு ஐயம் வேண்டாம்…” என்றார் பிரஜாபதி ஒரு உறுதியுடன்…
“நான் இன்றே மகாதேவருக்கு அழைப்பு அனுப்புகிறேன் மகாராஜா…” என்றார் அதுவரை அமைதியாக இருந்த மகரிஷி காசியப்பர் புன்னகையுடன்…
“இன்னும் பத்து நாட்களில் நடக்கப்போகும் மகா மண்டல சபையில் நான் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்க இருக்கிறேன்…” என பிரஜாபதி கூற, அனைவரும் அதனை பதிலேதும் கூறாமல் தங்களுக்குள் உள்வாங்கிக் கொண்டனர்…
சபையை விட்டு வெளியே வந்த காசியப்பர், அதிதி, கியாத்தி இருவரும் வருவதைக் கண்டு அவர்களிடத்தில் செய்தியைக் கூறலானார் மகரிஷி காசியப்பர்…
“இன்று பிரஜாபதி, சபையில் அறிவித்ததை தாம் அனைவரும் கேள்வியுற்றால் ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள்…”
“என்ன அறிவிப்பு அது?...” அதிதி கேட்க,
“அவர் நெடு நாட்கள் கழித்து இன்று அறிவித்த அறிவிப்பினால், பலரின் மனம் மகிழ்ச்சி அடைந்ததே உண்மை…” என்றார் அவர்…
“நிஜமாகவா?... அப்படி என்ன நிர்ணயத்தை தந்தை வெளியிட்டார்?...”
“அரசர், மகா சபைக்கு அழைப்பு விடுத்ததோடு மட்டுமல்லாமல், மகாதேவரையும் அதில் பங்கெடுக்க வைக்க எண்ணம் கொண்டுள்ளார்…”
அவர் கூறியதும் இருவரும் அதிர்ச்சியில் திளைத்தவர்களாய், இருக்கையில்,
“மகாதேவரையா?... அவரை எதற்கு தந்தை அழைத்தார்?... நம் குடும்பத்தில் தற்போது சில தின்ங்களாக அவரால் தானே பிரச்சனை எழுந்துள்ளது… சதி தற்போது தான் அவரின் தாக்கத்திலிந்து தெளிந்து வருகிறாள்… அவ்வாறு இருக்கையில் தந்தை, ஏன் இப்படி ஒரு நிர்ணயம் செய்தார்?...”
“உனது தந்தை எடுத்த நிர்ணயத்தில் நீ சந்தேகம் கொள்ளாதே… அவரின் இம்முடிவு சங்கட்த்தை தரும் என்று எண்ணாதே…” என்றார் அவர் தனது மனைவி மற்றும் பிரஜாபதியின் மகளான அதிதியிடத்தில்…
அந்நேரம், சதி, ரேவதியுடன் வர, அதிதியோ, சபையில் நடந்த நிகழ்வினை சதியிடம் கூற வேண்டாமென்று கேட்டுக்கொண்டாள்…