“வசந்த விழாவிற்கு சிறப்பு யோசனை ஏதேனும் உள்ளதா தங்களிடத்தில்?...” என சந்திரன் வினவ,
“வசந்த விழா சிறப்பாக முழுமையாக நிறைவு பெற வேண்டும்… இசை, நடனம், சங்கீதம்… இவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்… அந்த போட்டிகளில் வெல்பவர்களை பாரபட்சம் இன்றி தேர்ந்தெடுத்திடலும் வேண்டும்…” என பிரஜாபதி கூற,
“விழாவிற்கு நான் மாதங்கியிற்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன்… அவள் இங்கே வருகை தந்தால், உற்சாகத்திற்கு குறைவு இருக்காது… விழாவிற்கும் புத்துயிர் பிறந்திடும்… அதுமட்டுமல்ல, நடக்கும் போட்டிகளில் அவளது துணை பெரிதும் கலந்திருக்கும்…” பிரசுதி மகிழ்ச்சியுடன் கூற,
“மந்திரியாரே… விழாவிற்கான ஏற்பாட்டில் அனைவரும் மெய் மறந்திருக்கும் வேளை, நகரத்தின் பாதுகாப்பு ஏற்பாட்டினை நான் தங்கள் வசம் ஒப்படைக்கின்றேன்… அசுரர்கள் நான் இல்லாத சமயத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது… அதனால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அத்தனையும் தடையின்றி நடந்திட வேண்டும்…”
பிரஜாபதி தன் மந்திரிக்கு ஆணை பிறப்பித்துவிட்டு, மகரிஷி பிருகுவிடத்தில், “காசியப்பரிடமிருந்து ஏதேனும் செய்தி வந்ததா?...” என விசாரித்திட,
“அவர், ரிஷி அத்ரி மற்றும் ததீசியுடன் கயிலாய பர்வதம் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார்…” என்றார் அவரும்…
கல்லும், முள்ளும், செல்லும் வழி எங்கும் நிறைந்திருக்க, அதையும் பொருட்படுத்தாது, மகரிஷிகள் அத்ரி, ததீசி, மற்றும் காசியப்பர் மூவரும் கயிலாய பர்வதத்தினை நோக்கிச் சென்றனர் உரையாடிக்கொண்டே…
மகாதேவரை தரிசித்திட, இது போன்ற இன்னல்கள் நாம் சந்தித்தாலும், அவரை தரிசிக்கும் அந்த நொடி அனைத்தும் மறைந்து விடுகின்றது… அதனாலேயே அவரைத் தேடி வரும் பக்தர்கள் இந்த மலையினைக் கடப்பதை தம் வாழ்வின் பாக்கியமாக கருதுகின்றனர்… அதுமட்டுமின்றி, நடக்கப்போகும் மகா சபையின் மகாதேவரின் வருகை ஒரு புது அத்தியாயத்தை உருவாக்கிடும் என்றும் அது இந்த சிருஷ்டிக்கே ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்றே தோன்றுவதாகவும், மேலும் அது இவ்வளவு துரிதமாய் நடைபெறும் என்று எண்ணிப்பார்த்திடவில்லை என்றும் மூவரும் உரையாடிக்கொண்டே பர்வதத்தினை அடைந்தனர்…
“சங்குப்புஷ்பங்கள்…” என்னும் மலர் அங்கு நிறைந்திருக்க, அதனைப் பறித்தனர் அவரகள் மூவரும் ஆவலாய்… மகாதேவருக்கு இது மிகவும் பிரியமான மலர், என ததீசி கூற, அவரிடத்தில் தாங்க்ள் சேகரித்த மலர்கள் அனைத்தையும் கொடுத்தனர் அத்ரி மற்றும் காசியப்ப மகரிஷிகள்…
மலரினை மகாதேவனிடத்தில் சமர்ப்பித்தவரகள், அவனை வணங்கி நிற்க, ததீசியின் விழிகளின் ஆனந்தக்கண்ணீர் தென்பட்டது அவனை சந்தித்ததும்…
“என் மீது தாங்கள் கொண்ட பரிவே, தங்களை இன்று சங்கடத்தில் ஆழ்த்தியது… இது அனைத்திற்கும் காரணம் என்னுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிணைப்பு தானே…”
அவன் மனம் வருந்திக்கூற,
“இப்பிணைப்பிற்காகவே நான் அத்தனை உறவுகளையும் துறந்து தங்களை சரணடைந்தேன்… ஆதலால் இது எனக்கு, சங்கடம் அல்ல, சந்தோஷமே… இப்பிணைப்பினையுன் நான் துறந்திட்டால் தற்போது நான் வாழும் வாழ்வில் அர்த்தமே இராதே…” என்றார் அவரும் மனமார…
“தாங்கள் மூவரும் ஒருசேர வந்திருப்பதின் காரணம் யாது ரிஷிகளே…”
“பிரஜாபதி தட்சர் தங்களுக்கு மகா மண்டல சபைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்…” என மகரிஷி காசியப்பர் கூற,
“அழைப்பை தாங்கள் ஏற்பீர்கள் தானே…” என்றார் அத்ரி மகரிஷியும்…
“இது போன்றதொரு சபை நிகழவிருப்பது இதுவே முதல்முறை… ஏனெனில் அவர் சமரசரத்தை விரும்புவதாகவே தோன்றுகிறது… அதன்படியே தங்களையும் அவர் அழைத்திருக்கிறார்… தேவர்கள், சப்தரிஷிகள் மட்டுமல்லாது, இம்முறை அசுரகுலகுரு சுக்ராச்சாரியாருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார் பிரஜாபதி…” ததீசி மகிழ்வுடன் கூற,
“மகா மண்டல சபையானது சங்கடங்கள் முன் வைக்கப்படும் இடம்… அதைக்குறித்து விவாதங்களும் எழும் தலம் அது… பிரஜைகளுக்கான தீர்வுகள் நியதியாக உருப்பெறும்… அந்த நியதிகள் பாரபட்சங்களாக மாறுகின்றன… அதன் விளைவு தான் தேவ அசுரர் இடையே நடைபெறும் யுத்தங்கள்.. இதில் அதிகம் பாதிக்கப்படுவது இயற்கையே… ஆம், கானகங்கள், விலங்குகள், ஜீவராசிகள் அனைத்தும் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது… அனைத்தும் அழிந்து முடிந்த பின்னர், மற்றொரு மகா மண்டல சபை நடக்கின்றது… மீண்டும் சமாதான முயற்சி, சமரச உடன்படிக்கை,…. இதில் பாரபட்சம் இல்லாது போனால், சமரசத்திற்கான சங்கடங்களே இல்லையே… அராஜகத்தீர்மானம் மேற்கொண்டு நியாயத்தீர்வினை பெற்றிட இயலுமா?.. இத்தகைய தீர்மானங்கள் மகத்துவம் வாய்ந்தவை அல்ல…”
அவன் நிதானமாக பொறுமையாக விளக்கிக் கூற,
“தங்களது வருகையினால் இம்முறை தன்னால் தீர்வு கிட்டும்… அகிலமெங்கும் அமைதி நிலவ நடைபெறும் இச்சபை நிச்சயம் வெற்றி பெறும்…” என்றார் காசியப்பர்…
“அகிலத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவுவதற்கு மகா சபை தேவையில்லை… மகா சபை நிகழ்வதற்கு தேவையானது தனி நபர்களின் சுயபரீசீலனையே… அகங்காரம், குரோதம், விரோதம், கோபம் முதலியவற்றை களைந்தால், அமைதி நிலைக்கும்… சமத்துவமும் ஓங்கும்…. எங்கும் சாந்தம் பரவிடும்…”
மகாதேவன் தன்மையாக கூற,
“அது மட்டும் நிகழ்ந்திட்டால், அனைத்தும் சிவமயமாகிவிடுமே பிரபு… சபைக்கான அழைப்பினை தாம் ஏற்கவேண்டும்… அப்படி தாங்கள் ஏற்றிட்டால், அது எங்களுக்கு பெரும் மன நிறைவினையும் சந்தோஷத்தினையும் வழங்கிடும்… தம்மை ஒப்புக்கொள்ள செய்வதாய் நான் வாக்கு அளித்துள்ளேன்.. தயைக்கூர்ந்து அடியவனாகிய என்னை காத்தருளுங்கள் பிரபு….”
ததீசி கேட்டிட, வருவதாய் சம்மதம் தெரிவித்தான் மகாதேவன்…
“இந்த அழைப்பினை நான் ஏற்கிறேன்…” என்றதும், அவர்கள் அனைவரின் முகத்திலும் நிறைந்தது மகிழ்ச்சி…
“எனினும் இந்த அழைப்பினை ஏற்று, அந்த சபையினில் நான் பங்கு கொள்கையில் அங்கு ஏற்படும் நிகழ்வுகள் யாதாயினும் அதற்கு தாங்களே காரணம் என்று எண்ண வேண்டாம்…”
அவன் தெளிவாக கூற, ததீசியோ, “விளைவுகள் நன்மையே கொடுத்திடும் என்றே நாங்கள் நம்புகிறோம் பிரபு…” என கூற, அவனோ புன்னகைத்தான் சிறிதாக…
ஹாய் ப்ரெண்ட்ஸ்…
எப்படி இருக்கு இந்த அத்தியாயம்…
படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்…
இந்த முன் ஜென்ம நிகழ்வுகள் சற்றே நீளம் கொண்டது தான்…
முடிந்த வரை சிறியதாய் தர முயற்சி செய்கிறேன்…
மீண்டும் அடுத்த வார சிவ-சதியின் முன் ஜென்மக்கதையில் சந்திக்கலாம்…
நன்றி…
தொடரும்...!
{kunena_discuss:1001}