நிலவு மறைந்ததா சூரியன் வந்ததா என்று பார்க்கும் நிலையில் எல்லாம் கீர்த்தி இல்லை, உறைந்துப் போய் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தாள். இன்றும் அதே போல காலை உணவு பெண்கள் என்று அடுத்து அடுத்து அறை கதவு தட்டபட்டுக்கொண்டே இருந்தது. நெஞ்சு துடிப்பு தொண்டையில் துடிக்க மறக்கவில்லை. திடுமென தடதடவென காலடி ஓசைகள் கேட்டது. கூச்சலும் சத்தமுமாக இருந்தது. எழுந்து சென்று பார்க்கும் தைரியம் இல்லாமல் இன்னும் செவுத்தோடு ஒட்டிக்கொண்டாள்.
கதவை உடைப்பது போல புயலென உள்ளே வந்தாள் கவிதா. வந்த கையோடு தாளிட்டவள் விறுவிறுவென அவளிடம் சென்று... “என் வாழ்க்கையை பத்தி கூட இவ்வளவு யோச்சது இல்ல நான், இவ்வளவு துணிஞ்சு பண்ணதும் இல்லை...” என்றுவிட்டு அவளை ஒரு நொடி இறுகி கட்டிக்கொண்டவள் அறையோடு இருந்த கழிவறையை திறந்து அதன் செவுத்தோடு இருந்த கண்ணாடி கதவினை ஒவ்வொன்றாக எடுத்துவிட்டு “போ இந்த வழியா போயிடு முன் பக்கம் ரைடு போயிற்றுக்கு இப்போ இந்த பக்கம் போனா அந்த ரௌடிங்களோ இல்ல காவலாளிகளோ உன்ன பார்க்க முடியாது போ போ...” என்று அவள் அவசர படுத்தியதில் நெஞ்சில் இருந்த பாரம் சட்டென விலகிய உணர்வு கீர்த்தியிடம். கண்ணில் இருந்து கொட்டிய நீரும் பதட்டத்தில் நடுங்கிய விரல்களும் நிலையை மறந்து சில நொடி கவிதாவை கட்டிக்கொண்டது.
உயிர் தோழிகள் இல்லை, உறவும் இல்லை ஆனால் அந்த ஓரிருநாளில் உண்டான உணர்வு, தன்னை போல் இவளும் இங்கே மாட்டிக்கொள்வாளோ என்ற பதட்டம், பயம் கவிதாவை கீர்த்தியை எப்படியேனும் விடுவித்துவிட வேண்டும் என்று யோசிக்கவைத்தது. தன் நிலை எப்படி மாறினாலும் பரவாயில்லை என்று எண்ணிக்கொண்டு வெளியே கடைகளுக்குப் போவது போல கிளம்பியவள் அலைபேசியில் காவலர்களுக்கு குறிப்பு கூறிவிட்டு வந்துவிட்டாள். மனமாறி இந்த வாழ்க்கையை வாழ துவங்கிய பின்பு இவர்களாக வெளியே போக மாட்டார்கள் என்ற உணர்வு அந்த கொடுமையை செய்யும் ஆட்களுக்கு அதுவும் வருடங்கள் கடந்துவிட்டதால் அந்த பெண்களை வெளியே விடுவது ஒன்றும் புதிதல்ல.
அவள் வெளியேறியதும் பழையபடி கண்ணாடியை அடுக்கியவள் ஒன்றும் தெரியாது போல கதவின் தாளை மட்டும் எடுத்துவிட்டாள். அங்கும் இங்கும் செல்லும் காவலர்களில் ஒருவர் அங்கு வந்து “ஏய் வா” என்று கத்தி அழைத்துக்கொண்டிருந்தார். அவள் வெளியே வரவும் கழிவரை எல்லாம் திறந்து பார்த்து உறுதி செய்துக்கொண்டவர் அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். இவர்கள் இப்படி செய்ய கூடும் என்று உணர்ந்து தானே கவிதா அனைத்தையும் பழையபடி அடுக்கியது இங்கு ஒருவர் இருந்தது தெரியா வண்ணம் செய்தாள்.
முன்பக்கம் சில பத்திரிக்கைக்காரர்கள் நின்றுக்கொண்டிருந்தனர் ரைடு முடிந்து பெண்கள் அனைவரையும் வருசையாக நிற்க வைத்தனர். இவர்களை புகைப்படம் எடுக்க துவங்க, ஒரு பத்திரிக்கையாளர் மட்டும் புகைபிடிக்க வெளியே வந்துவிட்டார். வந்தவரின் கண்ணில் தப்பி ஓடும் ஒரு பெண் கண்ணில் பட்டாள்.
கையில் இருந்த வீடியோ கேமரா வைத்து அவளை பதிவுசெய்தான். அவளின் முகம் தெரியவில்லை கட்டி இருந்த புடவையின் மூலம் முகத்தை மூடிக்கொண்டாள் இருப்பினும் அவளது உருவம் ஓரளவேனும் பிடிக்கப்பட்டது... “யோவ் உன்னை அங்க போட்டோ எடுக்க சொன்னால் இங்க என்ன பண்ற” என்று ஒரு காவலர் வந்து கூற, “சார் அந்த பக்கம் ஒரு பொண்ணு தப்பிச்சு போகுது சார்...” என்றான்.
“அட விடுயா.. இவங்களையே எப்புடியும் விட சொல்லி ஒரு போன் வரும் இன்னும் கொஞ்ச நேரத்துல.. இவளுங்க பொழப்பும் பாவம்தான்... ஏதோ போன ஜென்மத்து பாவ கடன் போல” என்று பரிதாபப்பட்டார் அந்த 5௦ வயது காவலர். இந்த உண்மைகள் தெரியாத பத்திரிக்கையாளரா அவர்.. ஏதோ நினைப்பில் அவரும் உள்ளே சென்றுவிட்டார்.
ஒருவழியாக இங்கே முறைப்படி எல்லாம் நடக்க, தப்பி சென்ற கீர்த்தி தனக்கு இருந்த சத்து எல்லாம் உபயோகித்து நிற்காமல் ஓடினாள். சில மணி நேரத்துக்கெல்லாம் சோர்ந்துவிட தூரத்தில் தெரிந்த ஒரு லாரியில் ஏறிக்கொள்ளலாமா என்று முடிவு செய்து அடிகளை முன்னே வைத்தாள். அங்கே லாரியில் வெட்டப்பட்ட மரங்கள் கடத்தபடுவது அதை மறைப்பதற்காக முன்னால் டப்பாக்கள் வைத்து மூடிவிட்டு பின்னால் மரங்கள் வைத்து அடிக்கி இருந்தனர். இதெல்லாம் பார்த்தவள் அங்கே ஆண்கள் இருப்பதையும் பார்த்துவிட்டு கால்கள் கட்டிபோட்டது போல நின்றுவிட்டாள். ஆண்களை கண்டால் முன்னேயும் போக முடியாமல், பின்னால் துரத்தி வரும் பிரச்சனைக்கு பயந்து பின்னும் செல்ல முடியாமல் அங்கேயே நின்றாள்.
வண்டி கிளப்பும் சத்தம் கேக்க துவங்கியது... அயோ போயிடும் போலவே... போ போ என்று முன்னால் போக சொல்லி மூளை கூற வேண்டாம் ஆண்கள் இருக்கின்றனர் போகாதே என்றது மனம். ஆனால் மீண்டும் அந்த படுகுழியில் மாட்டிக்கொள்ள கூடாது என்ற உந்துதல் அவசரமாக சென்று அந்த ஆண்களுக்கு தெரியாமல் லாரியில் ஏறிக்கொண்டாள். அந்த காட்டுபகுதியை தாண்டி சென்று வெகு தூரம் சென்ற பின்பு ஒரு தேநீர் கடையில் அவர்கள் நிறுத்த யாருக்கும் தெரியாமல் இறங்கிக்கொண்டாள்.