ஆனால் அவள் மணக்கப் போவது யாரோவாக இருந்திருந்தால், எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியிருப்பான்…. ஆனால் அவள் மணக்க போவது தன் சகோதரனை என்று தெரிந்து, சாதாரணமாக அவளிடம் அவனால் பேச முடியவில்லை…. தன் மனதை தேத்திக் கொள்ள அவனுக்கு அவகாசம் தேவைப்பட்டது… அதனாலேயே அவளிடம் கோபமாக பேசினான்….
இத்தோடு அவளை விட்டு விலகியிருக்க வேண்டும், கல்யாணம் முடிந்ததும், இப்போது ஆரம்பித்திருக்கும் பூனாவில் உள்ள அலுவலகத்தை தானே பார்த்துக் கொள்வதாக, தன் அண்ணனிடம் சொல்லிவிட்டு பூனாக்கு சென்றுவிட வேண்டும்…. அவர்கள் வாழ்க்கையை நல்லவிதமாக வாழ ஆரம்பித்ததும் திரும்ப வந்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்…. என்ன அம்மா கொஞ்சம் வருத்தப்படுவாங்க…. தனியா இருக்கறதா நினைப்பாங்க… ஆனால் இப்போது தான் நர்மதா வந்துவிடுவாளே… அவள் அவர்களை கவனித்துக் கொள்வாள்… என்றெல்லாம் நினைத்திருந்தான்…
ஆனால் நினைத்ததெல்லாம் நடக்கவில்லை… திருமண வேலையாக அவளை அடிக்கடி சந்திக்கும்படி ஆனது… அப்படி சந்தித்த தருணங்களில் அவள் மனநிலையும் புரிந்தது… இன்னும் இவனின் தாக்கம் அவளுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தான்… ஆனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை…
நிச்சயம் முடிந்து கல்யாணம் வரை வந்த ஏற்பாட்டை நிறுத்த மனம் வரவில்லை… அதுவும் இத்தனை வருடமாக திருமணத்தை மறுத்த தன் சகோதரன் இப்போது தான் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான்…. அதிலும் தன் அன்னையும், அத்தையும் இந்த திருமணத்தை குறித்து எத்தனை மகிழச்சியாக உள்ளனர்… இதையெல்லாம் அழித்துவிட இவன் விரும்பவில்லை….
இருந்தும் துஷ்யந்திற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது… அப்படியிருந்தால் நர்மதாவின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கவலையும் பிறந்தது… இப்படி பல அவஸ்தைகளோடு தான் செல்வா இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டான்…
இந்த திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று துஷ்யந்த் சொன்னபோது, இவன் தான் முதலில் சந்தோஷப்பட்டான்…. அது நர்மதாவை தானே திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பதால் ஏற்பட்ட சந்தோஷம் இல்லை… விருப்பமில்லாத ஒருவனை மணந்து அவள் வாழ்க்கை அழிந்துவிடக் கூடாதே என்ற கவலையைப் போக்கியதால் வந்த சந்தோஷம்…
அவளிடம் நிறைய பேச வேண்டும், தன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்ல வேண்டும்…. ஆனால் அதற்கு இனியும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா..?? அந்த கேள்வி மனதில் இருக்க, இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்த வேண்டுமென்று துஷ்யந்த் சொன்னது, இவனுக்கு அதிர்ச்சியே… இப்படி ஒரு சூழ்நிலையிலா இவர்கள் திருமணம் நடக்க வேண்டும்… அது சரியாக இருக்குமா..?? இவன் தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டிருக்க… துஷ்யந்த் இவனிடம் வந்து சம்மதம் கேட்டதும், என்ன சொல்வதென்று புரியாமல், இவன் நர்மதாவை பார்த்தான்…
“நீ மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிப்பாரு… அப்புறம் தாண்டா இருக்கு உனக்கு..?? என்று சொல்லாமல் சொன்னது அவள் முகமும், அவள் விழியும்… ஆனால் அதையும் மீறி, “இப்பவும் என்னை வேண்டாம்னு தான் சொல்லப் போறீயா..??” என்ற கேள்வியோடு அவள் கண்களில் தெரிந்த தவிப்பு, இவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது… எப்படியும் அவளை சமாதானப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையிலேயே அவளை மணந்துக் கொண்டான்….
இருந்தும் எப்படி இவளுக்கு இவன் மனதை புரிய வைப்பது, குழப்பத்தில் இவன் இருக்க, அவளோ அவனை பேசவே விடவில்லை… அதிலும் வலுக்கட்டாயமாக கோபத்தை வரவழைத்து, அவள் இவனிடம் பேசும்போது, அப்படியே அவளை அள்ளி அணைத்து, முகமெங்கும் முத்தமிட தோன்றும் ஆசையை என்னவென்று சொல்வது… இவனின் இத்தனை வருட தவிப்பை அவளுக்கு எப்படித்தான் புரிய வைக்கப் போகிறானோ…??? இவனுக்கே தெரியவில்லை…
ஆறு மணி அலாரம் அடித்ததும், அலைபேசியை அணைத்தவள், மெதுவாக கண்களை திறந்துப் பார்த்தாள்… முதலில் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் சுற்றி சுற்றி பார்த்த நர்மதா… பின், தான் படுத்திருப்பது எங்கே என்று தெரிந்து, பதட்டமாக எழுந்தாள்…. எழுந்ததும் திரும்பி தன் பக்கத்தில் படுத்திருந்தவனை பார்க்க, அவனோ அங்கு இல்லை…
“அதுக்குள்ள எழுந்திட்டானா..?? இல்லை இரவே வேறெங்காவது சென்று படுத்துவிட்டானா..?? இவளுக்கு தெரியவில்லை… அப்படியா நன்றாக தூங்கிவிட்டாள்…. இன்று தூக்கமில்லாத சிவராத்திரி என்று நினைத்தாளே.. இரவு நடந்ததெல்லாம் இப்போது திரும்ப ஞாபகத்திற்கு வந்தது…
தன் குடும்பத்துக்காகவும், தன் அண்ணன் சொன்னதுக்காகவும் இவளை திருமணம் செய்துக் கொண்டதனால், அவன் மேல் உள்ள கோபத்தில், அவனை கோபப்படுத்த வேண்டும், வெறுப்பேற்ற வேண்டுமென்று இவள் என்னென்னவோ அவனை பேச, அவனோ அவள் பேசியதைக் கேட்டு, கோபப்படுவதற்குப் பதிலாக புன்னகையோடு நின்றுக் கொண்டிருந்தான்… பார்வையால் இவளை விழுங்கிக் கொண்டிருந்தான்….
அந்த முதலிரவு அறை, அவன் நின்றிருந்த தோற்றம் எல்லாம் இவளுக்கு ஒரு திடுக்கிடலை தர, அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு இது மட்டும் தான் காரணம்… மத்தப்படி, முன்ன ஒரு காலத்துல இவ நம்மள காதலிச்சாலே, அதனால இவளை ஈஸியா வழிக்கு கொண்டு வந்திடலாம்னு நினைக்க வேண்டாம்.. என்கிட்ட எதையும் எதிர்பார்க்காம, என்னை விட்டு தள்ளியிருந்தா நல்லது…
எல்லாம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… எனக்கு தூக்கம் வருது… நான் தூங்கப் போறேன்… நான் வந்த நோக்கம் தெரியுமில்ல… அதனால இந்த கட்டிலில் தான் நான் படுக்கப் போறேன்…. நீங்க இந்த ஸோஃபால படுப்பீங்களோ இல்லை தரையில படுப்பீங்களோ… அது எனக்கு தேவையில்லை… குட்நைட் என்று படுக்கப் போக,
“இங்கப் பாரு… நீ சொல்றதையெல்லாம் கேக்கனும்னு எனக்கு அவசியமில்ல…” என்று சொல்லிக் கொண்டே இவள் அருகில் அவன் வர, ஒரு நிமிடம் இவள் பயந்துப் போனாள்…
இவள் அருகே வந்தவன், அங்கே தலையணை மேலே இருந்த போர்வையை எடுத்துக் கொண்டு… “ இது என்னோட கட்டில், இது என்னோட போர்வை.. எனக்கு இந்த கட்டிலில் படுத்தா தான் தூக்கம் வரும்… பயப்படாத அதனால உன்னை கீழ படுக்க சொல்லமாட்டேன்… அப்புறம் உன்னோட விருப்பமில்லாம உன்னை தொடவும் மாட்டேன்… வார்ட்ரோப்ல இன்னொரு போர்வை இருக்கும் எடுத்துக்க… குட்நைட்” என்று சொல்லிவிட்டு, கட்டிலின் அந்த பக்கம் படுத்துவிட்டான்…
இவள் அனுமதியில்லாமல் தொட மாட்டேன் என்று அவன் சொல்லியிருந்தாலும், இவனோடு கட்டிலில் படுக்க வேண்டுமா..?? என்ற யோசனை இருந்தது… அவனிடம் வேறு கெத்தாக கட்டிலில் தான் படுப்பதாக கூறிவிட்டாளே… அதனால் கீழே எப்படி படுப்பது, அதனால் இவன் பக்கத்தில் தான் படுக்க வேண்டும்… ம்ம் இன்னைக்கு சிவராத்திரி தான் என்று நினைத்து கட்டிலின் ஓரத்தில் சுருண்டு படுத்தவள், எப்படி உறங்கிப் போனாள் என்று தெரியவில்லை…. இந்த சூழ்நிலையில் எப்படி உறக்கம் வந்தது புரியவுமில்லை… ஒருவேளை துஷ்யந்தை மணந்திருந்தால், இப்படி நிம்மதியாக உறங்கியிருக்க முடியுமா..?? அப்போ இந்த திருமணம் தனக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தான் கொடுக்கிறதா..?? தெரியவில்லை அவளுக்கு…
தடைப் படாத என் சுவாசத்திற்காக...
என் ஜீவன் காத்திருக்கிறது...!!
{kunena_discuss:1078}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.