இவனோ மார்பின் குறுக்கே கட்டிய கைகளுடன் சுவறில் சாய்ந்து இவர்களையே கவனமாய்ப்பார்த்திருந்தான், வனிதா பூஜை அறையிலிருந்து குங்குமம் எடுத்து வர, காவ்யாவும், தர்ஷினியும் எடுத்துகொள்ள, கீர்த்தனாவுக்கு தான் கிலி, வீட்டிற்கு நுழைந்ததிலிருந்து இந்த தருணத்திற்குள், வனிதா தான் இளமாறனின் தாய் என்பது புரிந்துபோயிற்று, அவர்களின் ஊடே இருந்த பற்றும் அன்பும் இவளையும் நனைக்கதான் செய்தது, ஆனால் கழுத்தில் இருக்கும் கயிருக்கு என்ன கதை சொல்வது? கோயிலேயே வனிதா இவளின் தாலி சரடில் குங்குமம் இடச்சொன்னவர், இப்போது என்ன கதை சொல்வாள் இவள், “எடுத்துகோமா!” அவரின் வார்த்தைகள் அவளை உசுப்ப, எடுத்து நெற்றியில் கீற்றாய் இட்டாள், இப்போதும் இவளைப்பார்த்து சிரித்தவர், “வகுடல வச்சுக்கோ, எப்போதும் சுமங்கலி வகுடலையும் குங்குமம் வச்சுகிடனும்!”, சொன்னவர் விரல்களில் தொட்டு அவள் தலை வகுடில் இட கண்கள் மூடி, ஏற்றுக்கொண்டவள், அவளை அறியாது, குனிந்து வனிதாவின் பாதங்களை தொட, இளமாறனுக்கு தான் தலை கிறுகிறுத்தது. வைத்த கண் வாங்காது அவளையேப்பார்த்திருந்தான்,
“ஆனா, ஆண்ட்டி அவளுக்கு இன்னும்.. ‘கல்யாணம் ஆகவில்லை’ என காவ்யா முடிக்கும் முன்னே அவள் கைகளை அழுத்தி, கண்களால் பேசாதே என தர்ஷினி சாடைக்காட்ட குளம்பிப்போனாள் காவ்யா! ஏனோ கீர்த்தனா அவர் பாதம் தொட்டதும் வனிதாவின் உள்ளம் நிரைந்துபோனது. ஒரு கையால் அவளைத்தூக்கி நிறுத்த, இதற்காகவே நான் காத்துக்கிடந்தேன் என்பதுபோல் வெளியே துருத்தி நின்றது திருமாங்கல்யம். விரல்களில் அதனை வெளியே எடுத்தவர், அதில் வெரும் மஞ்சள் கோர்க்கப்பட்டிருப்பதை கேள்வியாய் பார்த்தார்.
“ஏம்மா, தங்கத்தில தாலி கட்டிக்கல? இல்ல பிரிச்சு தங்க சரடில கோர்த்திருக்கலாம்ல?” மென்மையாய்தான் அவர் கேட்டார், இதுவரை வரட்டுமா என முண்டிக்கொண்டிருந்த கண்ணீர், கிளுக்கென கன்னத்தில் விழுந்து ஓடியது, தலையை கவிழ்து நின்றாள், இவனின் மனதிலோ சூறாவளி, குற்ற உணர்ச்சியில் மனம்வாட, ஏதோ முடிவு செய்தவனாய், “அம்மா, அது அவங்கவங்க பெர்சனல், இதெல்லாம் எதுக்கு கேட்குறீங்க, பாருங்க இருட்டீட்டு அவங்க வீட்டில தேடப்போறாங்க!” இந்த வார்த்தைக்கு தைரியமாய் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், கண்களில் அப்படி ஒர் வைராக்கியம், கண்ணீரை அடக்க முயன்றதால் கண்கள் சிவந்திருந்தது, வீட்டை விட்டு வெளியே கிளம்பென சொல்லாமல் சொல்கிறான் அவள் தலைவன், அந்த பார்வையின் அர்த்தம் அவனுக்கு உணராமலில்லை “நீயாக சொல்லும் வரை நான் வாய்த்திறக்க மாட்டேன் என்பதாய்..”
வனிதாவிற்கு இது ஏதோ பெரியவர்களுக்கு தெரியாத திருட்டு கல்யாணம் அதன் அடையாளம் தான் இந்த தாலிசரடென புரிந்தது, ஆனால் கீர்த்தியின் கண்ணீருக்கும், காய்த்திற்கும் இளமாறனின் தவிப்புதான் இன்னும் விளங்காமல் கேள்வியாய் அவர் மனதில், போதாதற்கு அவன் வந்ததிலிருந்து கீர்த்தியின் மேல் வைத்த கண்ணை இன்னும் எடுக்கவேயில்லை. வனிதா உள் அறையினுள் சென்று மீண்டும் வந்தார், கையில் ஒரு சிறிய மஞ்சள் பை, ஒரு சிறிய மர ஸ்டூலை எடுத்துவந்துப்போட்டார், கீர்த்னாவின் கையைப்பற்றி அதில் அமரச் செய்தார், அந்த மஞ்சள்ப்பையைப் பிரிக்க அதனுள் மஞ்சளும் குங்குமம் பினைந்து ஒரு சிறிய தாலி, அவர் அதில் மஞ்சளும் குங்குமமும் இட்டார், கீர்த்தனாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியின் ஹூக்கை கழற்றி இந்த தாலியைப்பிணைத்தார். இப்போது ஒரு சிறிய மாங்கல்யம் அந்த தங்க சங்கலில் பினைந்து தொங்கியது, மெதுவாக அவள் கழுத்தில் இருந்த சரடைக்கழற்றினார், தன் கையில் இருந்த சிறிய மஞ்சள் பையினிள் இட்டு, குவிந்திருந்த அவள் கையைப் பிரித்து அதனுள் வைத்தார். இப்போதும் பெண் நிமிர்ந்து பார்க்கவில்லை. லேசாக குழைத்த சந்தனத்தை பெண்ணவளின் கன்னத்தில் இட்டு, நாடியை தொட்டு அவள் முகத்தை தூக்கினார், “இங்கப்பாரும்மா, அப்பா அம்மாவிற்கு தெரியாம, நாம் ஒரு வாழ்க்கைய தேர்ந்தெடுத்தா, அதில பூரண நம்பிக்கை அவசியம், முடிஞ்சவரை அப்படி ஒரு சூழ்நிலைய உருவாக்கிக்காம்ம இருக்கிறதே நல்லது, மீறி அது நடந்திட்டா, அதோட நல்லது கெட்டதுக்கு முழு பொறுப்பும் நாமதான், அவர் மேல உனக்கு இருக்கிற நம்பிக்கையால மஞ்சள் சரட மட்டும் கட்டிக்கிட்டனு நினைக்கிறேன், ஆன வாழ்க்கையில அத காப்பாதிக்க நிறைய போராட வேண்டிவரும்.. இது என்னோட அனுபவத்தில நான் உணர்ந்தது, இந்த கால பிள்ளைங்க, எவ்வளவு ஆர்வமா கல்யாணம் பன்றாங்களோ அவ்வளவு அவசரமா பிரியவும் செய்திடுறாங்க, உன் வாழ்க்கைய காப்பாத்திக்கிறது, உன் கையில தான் இருக்கு!” லேசாக கன்னத்தை தட்டினார், கீர்த்தனா இவ்வளவு நேரம் வனிதா சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் மனதினுள் கல்வெட்டாய் செதுக்கிக்கொண்டாள், தன்னை சந்தேக வார்த்தைகளால் காயப்படுத்தாது, கழுத்திலிருப்பதை கேலிப்பொருளாயும், விளையாட்டு தாலியாயும் நினைத்துவிடாது அவர் நடந்து கொண்டது பெண்ணின் மனதை கனியசெய்திருந்தது. அவர் மீது பூரண நம்பிக்கையும் மரியாதையும் இப்போது வந்திருந்தது, வீட்டை விட்டு கிளம்பத்தான் மனம் வரவில்லை,
காவ்யா, இரண்டு நிமிடத்தில் கோவிலின் அருகே விட்டிருந்த தன் இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு வந்தாள், தர்ஷினி காவ்யாவிடம், “காவீ நாங்க இரண்டு பேரும் முதல்ல வீட்டுக்கு போறோம் நீ ஆட்டோல வந்திரு!” சரி என்று இவள் தலையசைத்தாலும், தர்ஷினியை உலுப்பி கேட்பதற்கு இவளுக்கு ஆயிரம் கேள்விகள் மனதில் வரிசைக்கட்டிக்கொண்டு நின்றது, “வீட்டுக்கு வாங்கடி உங்க இரண்டு பேருக்கும் இருக்கு!” என்பதுபோல் இவள் முக பாவனை. தர்ஷினி வார்த்தைகளில் விடைப்பெற்று வெளியே வந்தாள், கீர்த்தனா, வனிதாவின் முகம் பார்த்து வருகிறேன் என்பதற்கு அடையாளமாய், தலையசைத்துக் கிளம்பினாள், வாசலின் அருகே இவன், சொல்லவேண்டாம் என்ற எண்ணம் மேலிட்டாலும் மனது அடங்கவில்லை, அவனைக் கடக்கும்போது வலது புறம் திரும்பி கண்கள் அவனைக் கண்டது, அவன் இன்னும் இவளைதான் பார்த்திருந்தான், தன்னையறியாது அவன் தலையசைத்து வழியனுப்ப இருவரின் முகபாவங்களை காவ்யாவும், வனிதாவும் உள் வாங்கிக்கொண்டிருந்தனர்.