“ஹையோ ரிஷி, விக்னேஷ விரும்பிறதா நான் என்னிக்குமே சொன்னதில்ல, அது அவரோட கற்பனை, இன்னிக்கு கூட அவர் தான் ப்ரப்பொஸ் ப்ன்னினார்” அவசர அவசரமாக வந்தது வார்த்தைகள்.
ரிஷியிம் முகம் அதை நம்பாததுபோல் இருந்தது. “ம்ம் இன்னும் நீங்க அவங்கிட்ட சொல்லாம இருக்கலாம், ஆனா இன்னிக்கு அவன் ப்ரப்போஸ் பன்றப்ப உங்க முகத்த நான் பார்த்துட்டு தான் இருந்தேன்.. உங்களுக்கு அதுல விருப்பம் இல்லனு சொல்லுங்க..!”
செல்வி கண்களில் அதிர்ச்சி, இத்தனை இலகுவாய் அவன் அவளைப் பற்றி நினைக்கும்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு ரிஷியை தான் விரும்புவதாக இவள் சொல்வாள், மனம் வலித்தது, அது எப்படி ஒரு வெக்கங்கெட்ட செயல், என உள்ளே தோன்றிய எண்ணம் அவளை இன்னும் காயப்படுத்தியது. கண்களில் அந்த வேதனை கண்ணீராக வழிந்தது. அவளது நெடுநேர மௌனமும் அழுகையும் ரிஷிக்கு வேதனையாக இருக்க,
“சரி விடுங்க, நீங்க சொன்னது உண்மைனா, உங்களுக்கு எதுக்கு விக்கியப் பிடிக்கல? ப்ளீஸ் சொல்லுங்க”
“விக்னேஷோட அம்மா என்னோட அம்மாவ தப்பான கண்ணோட்டத்துல பார்கிறாங்க, அப்படி இருக்கிறப்ப நான் அவங்க வீட்டுக்கு விக்னேஷோட மனைவியா எப்படி போறது, அவங்க இன்னிக்கு நினைக்கிற மாதிரி விக்னேஷும் நாளைக்கு என்ன தப்பா பார்க்க மாட்டாருனு என்ன உத்திரவாதம், சந்தேகத்தோட அடிப்படையில வாழ்கைய அமைச்சுக்க முடியாது ரிஷி!”
“ஓ, இது தான் உங்க விருப்பமின்மைக்கு காரணமா?”
“இன்னும் ஒன்னும் இருக்கு, இதுக்கு மேல…!”
“அதையும் தான் சொல்லுங்களேன் இன்னிக்கு உங்க பிரச்சனையெல்லாத்திற்கும் விமோச்சனம்” சிரித்தான் ரிஷி, செல்வியின் அந்த வார்த்தைகளுக்கு அவன் சிறிதும் அசரவில்லை, அதை எளிதாக சமாளிக்க அவனிடம் பதில் இருந்தது.
“ரிஷி, என் மனசில விக்னேஷ் இல்ல, ஆனா நான் வேறு ஒருத்தர விரும்புறேன்..!” இதை சொல்லிவிட்டு அவள் ரிஷியை ஏறிடும்போது, உண்மையாக அவன் அதிர்ந்துபோனான். கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு,
“விக்கிக்கு இது தெரியுமா?”
‘இல்லை’ என தலையசைத்தாள், அவன் எழுந்து இவள் அருகே வந்து அமர்ந்தான்.
“ம்ம்.. இது பிரச்சனைதான், விக்கியவிட நல்லவன், வல்லவன் அந்த உத்தம புத்திரன் யாரோ?” அவனது கேள்வியில் கிண்டல் இருந்தாலும், அதில் சிறிது ஏமாற்றமும் இருந்தது. இவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள், சொல்வதற்கு வார்த்தைகள் இன்னும் தொண்டைக்குழியில் இருந்தது, ஆனால் சொல்ல தைரியம் இல்லை.
“யாரு செல்வி அவன், யாரயிருந்தாலும் நிச்சயமா அவன் விக்னேஷ விட உயர்ந்தவன் கிடையாது!” – அழுத்தமான வார்த்தைகள் அவை. இன்னும் பார்வை இவள்மேல் தான் இவள் பதிலுக்காக காத்திருந்தான்.
“நிச்சயமா அவர் உயர்ந்தவர் தான், அர்த்த இராத்திரில உயிருக்கும் மானத்துக்கும் நான் போராடும்போது, தன்னோட உயிரபத்தி கொஞ்சம் கூட கவலைபடாது என்ன காப்பாத்தினாரே, அவர் விக்கியவிட நிச்சயம் உயர்ந்தவர் தான்.” சொல்லிவிட்டு அவள் ரிஷியை ஏறிடும்போது, அவன் ஆவென வாயைப்பிளந்து அவளைப் பார்த்திருந்தான்.
இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளற்று அசைவற்று பார்த்துகொண்டனர், ரிஷி பெருமூச்சுடன் அவள் அருகிலிருந்து, எழுந்து ஜன்னலின் அருகே மெதுவாக நொண்டியவாரே சென்று நின்றான். “என்ன சொல்வது இவளுக்கு!” அவன் பார்வை வெளியே நிலைத்திருந்தது.
“செல்வி, உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு, விக்கி மனசில நீங்க இருக்கிறீங்கன்ன நீங்க எவ்வளவு அற்புதமான பொண்ணுனு யாரும் சொல்லதேவையில்லை, ஆனா நான் காவ்யாவ விரும்புறேன்!”
“தெரியும் ரிஷி, உங்கக்கிட்ட இத சொல்லனும்னு தோணுச்சு அதான் சொன்னேன்..மத்தபடி விக்னேஷோட என்ன சேர்த்து வைத்து பேசவேண்டாம்னு உங்களுக்கு புரிய வைக்கவும் தான்!”
ரிஷி திரும்பி அவளைப் பார்த்தான், ஒரு கையால் தலையைகோதிவிட்டுக்கொண்டான்.
“செல்வி, நான் உங்களை அன்னிக்கு இராத்திரி காப்பாத்தினேன் தான், ஆனா விக்னேஷ விட என்னிக்குமே நான் உயர்ந்தவன் கிடையாது. நீங்க என்னை விரும்புறதா சொன்னீங்க இல்லையா.. உங்களோட இந்த உணர்வுகளை நான் மதிக்கிறேன் செல்வி. நீங்க சொன்ன இந்த வார்த்தைகள் உண்மைனா, நீங்க எங்கிட்ட சொன்னத இனி யார்கிட்டேயும் சொல்லக்கூடாது எந்த சூழ்நிலையிலும்! நான் உங்களை ஆபத்தான நிலைமையில சந்திச்சது பத்தியோ.. இப்ப நீங்க எங்கிட்ட சொன்ன இந்த விசயத்தப்பத்தியோ நீங்க வாயைத்திறக்ககூடாது, முக்கியமா விக்னேஷ்கிட்ட உங்க கல்யாணம் நடந்தப்புறமும் தான்..”
“இல்ல ரிஷி, கல்யாணம் நடக்கப்போறதில்ல, உங்க பேர நான் யார்கிட்டயும் சொல்லமாட்டேன் ஆனா என் மனச நான் மாத்திகிறதா இல்ல..”
இப்போது ரிஷிக்கு உண்மையிலேயே கோபம் வந்தது, தன் காலின் அருகே உள்ள டேபிளை எட்டி உதைத்தான் அதன் மீதிருந்த பூஞ்சாடி விழுந்து உடைந்தது. செல்வி பதறி எழுந்து நின்றாள், சத்தம் அடங்கியவுடன் பயத்துடன் அவனை ஏறிட்டாள். கண்களீல் நீர்க்கோர்த்தது.
“உனக்கு என்னப்பத்தி என்னதெரியும்? ஒரு நாள் என்னப்பார்த்தது வச்சு நான் நல்லவன்னு நீ முடிவு பன்னீட்ட இல்ல?”